பசுமை நிறைந்த நினைவுகளே!' என்று ஜெயிலுக்குள் பாட்டெல்லாம் பாடினார்களா என்று தெரியாது! ஆனாலும் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலையாகிப் பறந்து விட்டார்கள். அவர்களுடன் இதுநாள் வரை பழகிக் களித்த மற்ற பிரிவு கைதிகள் மட்டும் ஏக விரக்தியில் கிடக்கிறார்கள். கைதிகள் விடுதலையில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதாகத் தகவல் ஒருபுறம் கும்மியடிக்க, மற்றொருபுறம், ``விடுதலை லிஸ்டில் இருந்த என் மகனை விடுவிக்காமல் விட்டு விட்டார்கள்'' என்று ஒரு மூதாட்டி குமுறிக் கொண்டிருக்கிறார்.
அந்த மூதாட்டியின் பெயர் கன்னியம்மாள். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த விதவைப் பெண். இவரது ஒரே மகன் மணிகண்டன், ஆயுள் தண்டனைக் கைதியாக மதுரை ஜெயிலில் இருக்கிறார். மகன் விடுதலையாகிவிடுவான் என்ற நினைப்பில் இன்னும் மதுரை ஜெயில் வாசலில் தவம் கிடக்கும் கன்னியம்மாளை நாம் சந்தித்துப் பேசினோம்.
``என் மகன் மணிகண்டன் கயத்தாறில் நடந்த ஒரு கொலை வழக்குத் தொடர்பாக 2000-ம் ஆண்டில் ஆயுள் தண்டனை பெற்றான். மதுரை மத்திய சிறையில் ஏழாண்டு காலம் சிறைவாசத்தைக் கழித்துவிட்டான். `அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு என்னையும் விடுவிக்கப் போகிறார்கள். அதற்கான ஆவணங்களில் கையெழுத்துப் போட்டு விட்டேன். விடுதலையானதும் ஒழுக்கமாக வாழ்வேன்' என்று எனக்குத் தகவல் சொல்லி அனுப்பினான்.
அண்ணா பிறந்தநாளன்று அதிகாலையில் இருந்து மதுரை ஜெயில் வாசலில் பழிகிடந்தேன். அன்று இரவாகியும் என் மகன் மட்டும் விடுதலையாகவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். அதன்பிறகு என் மகனைப் பார்க்க மனு போட்டும் அதிகாரிகள் அனுமதி தரவில்லை. இதற்குள் உறவினர் ஒருவர் என் மகனை சிறையில் சந்தித்தபோது அவன், அதிகாரிகள் தன்னிச்சையாக தனது விடுதலையைத் தடுத்து விட்டதாகக் கூறி அழுதிருக்கிறான்.
ஏழ்மை நிலையில் இருக்கும் நான், இறுதிக்காலத்தை என் மகனின் ஆதரவோடு கழிக்க நினைத்திருந்தேன். அந்த எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது. இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். என் மகன் விடுதலையானால் சரி'' என்று கண்களைத் துடைத்துக் கொண்டார் கன்னியம்மாள்.
மணிகண்டன் பற்றி மதுரை சிறைக் கண்காணிப்பாளர் கண்ணனிடம் நாம் பேசினோம்.. "மணிகண்டன் மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் அந்த வழக்கில் அவர் பெயில் கூட பெறவில்லை. அதனால்தான் அவரை விடுவிக்க இயலவில்லை!'' என்றார் அவர்.
கன்னியம்மாளின் வக்கீல் பெ. விஜயராகவனிடம் நாம் இதுபற்றிப் பேசியபோது, ``நிலுவையில் வழக்கு இருந்தால் ஒரு கைதியை விடுவிக்க வழியில்லை என ஜெயில் அதிகாரி கூறியிருப்பது தவறு. மதுரையைச் சேர்ந்த கனகு என்பவர் ஆயுள்தண்டனைக் கைதியாக இருந்தார். இவர் பரோலில் போயிருக்கும் போது ஒருவரை வெட்டியதாக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அது நிலுவையில் இருக்கிறது. அந்த கனகு இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபோல பல உதாரணங்களைக் காட்டமுடியும். அப்படியிருக்கையில், மணிகண்டனை மட்டும் ஏன் விடுதலை செய்யவில்லை? விடுதலை செய்யப்படுபவர்கள் லிஸ்டில் இருந்த மணிகண்டனின் பெயர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு அதிகாரிகள் வேறு பெயரைச் சேர்த்தார்களா என்பது தெரியவில்லை. இது ஜெயில் அதிகாரிகளின் தவறா?அல்லது அரசின் தவறா? இது தொடர்பாக நியாயம் கேட்டு ஐகோர்ட் செல்லப்போகிறோம்'' என்றார் விஜயராகவன்.
சிறை அதிகாரி ஒருவரிடம் நாம் பேசியபோது, அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகளை விடுவித்ததில் நடந்த குளறுபடிகளைப் பட்டியலிட்டார் அவர்.
``ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனையும், அடுத்த குற்றவாளிக்கு பத்தாண்டு தண்டனையும் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அண்ணா நூற்றாண்டையொட்டி ஏழாண்டு காலம் தண்டனை அனுபவித்த ஆயுள்தண்டனைக் கைதி விடுதலையாகிவிட, அவரைவிட குறைவான குற்றம் செய்த 10 ஆண்டு தண்டனைக் கைதி உள்ளே இருக்கிறார். இதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லையே?
அதுபோல கொலைக்குற்றம் செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள்கூட விடுதலையாகிப் போய்விட முடிகிற நிலையில், குறைவான குற்றம் செய்தவர்கள் ஜெயிலில் தொடர்ந்து கிடந்து குமைந்து கொண்டிருக்கிறார்கள். இது பல கைதிகளின் மனங்களில் விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை ஜெயிலில் தொண்ணூறு வயதான முதியவர் ஒருவர் இருக்கிறார். அவருக்குப் பத்தாண்டு ஜெயில் தண்டனை. அவர் ஏழாண்டுகளை முடித்து விட்டார். ஆனால் அவர் ஆயுள் தண்டனைக் கைதி இல்லை என்பதால் அவருக்கு விடுதலை கிடைக்கவில்லை.
அதுபோல மதுரை ஜெயிலில் பிரேமஸ்ரீ என்னும் இலங்கை கைதி ஒருவர் இருக்கிறார். சாக்பீஸ், சோப் போன்றவற்றில் அருமையாக சிற்பம் செய்யக்கூடியவர் அவர். அதன் மூலம் சம்பாதித்தும் வருகிறார். போதைப் பொருள் கடத்தியதாக பத்தாண்டு ஜெயில் தண்டனையும், மூன்று லட்ச ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட முடியாததால் கூடுதலாக ஒன்பதாண்டுகள் ஜெயில் தண்டனை கிடைத்தது. அவர் பத்தாண்டுகளை சிறையில் கழித்துவிட்டார்.
அண்ணா பிறந்தநாளையொட்டி ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலையானதைப் பார்த்து தனக்கு விடுதலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் அவர் ஜெயிலில் உள்ள ஒரு புளியமரத்தின் உச்சியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். ஜெயில் அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள் முயற்சித்தும் அவரைக் காப்பாற்றி கீழே இறக்க முடியவில்லை. கடைசியில் கருப்பு என்கிற கைதி விறுவிறுவென மரத்தில் ஏறி, குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த பிரேமஸ்ரீயைக் காப்பாற்றினார். இப்படி பல சம்பவங்கள் ஜெயில்களில் நடந்து வருகின்றன.
பரோலில் போன கைதி லேட்டாக வந்தால், அதை `பரோல் எஸ்கேப்' என்பார்கள். இந்த பரோல் எஸ்கேப்பைக் காரணமாகக் காட்டியே மதுரைச் சிறையில் சுமார் 25 பேருக்கு விடுதலை கிடைக்கவில்லை. வெறும் ஆறு மணி நேரம் லேட்டாக வந்தவர்கள் விடுதலையாக முடியாமல் ஆறாண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது வேதனைதானே?'' என்றார் அந்த சிறை அதிகாரி.
ஒட்டகம் திருடிய பெரிய குற்றவாளிகள் உற்சாகமாக விடுதலையாகிப் போய் விட, முட்டை திருடிய சிறிய குற்றவாளிகள் சிறைக்கம்பிகளுக்குள் இன்று குமைந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணா நூற்றாண்டு விழாவில் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலையானதன் பின்னணியில் இத்தனை வேதனைகள் இருக்கிறதா என்ற விரக்தி நம்மையும் தொற்றிக்கொள்ள, அவரிடம் இருந்து விடை பெற்றோம்
நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
அண்ணா நூற்றாண்டு விழா கைதிகள் விடுதலையில் ஏகப்பட்ட குளறுபடி
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008

0 comments:
Post a Comment