திடீர் மழை... எதிர்பாராத வெள்ளம்... கடுமையான வறட்சி என்று நாம் அடிக்கடி பத்திரிகையில் செய்திகளைப் படிக்கிறோம். பருவ காலத்தில் தூறலுடன் நின்றுவிட்டு, பருவம் தவறியபின் மழை கொட்டித் தீர்ப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். இயற்கையின் இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன? இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க முடியுமா?ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பூமியின் வெப்பம்தான், இந்த பருவ மாற்றத்துக்கு காரணம். இதற்கு நாம்தான் மறைமுக காரணம். ஆகவே நாம் மனம் வைத்தால்தான் பூமியின் வெப்பம் மேலும் உயராமல் தடுக்க முடியும்.
தொழிற்புரட்சி ஏற்பட்டு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய பின்னர் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இது ஏறத்தாழ ஒரு டிகிரி வெப்பநிலைக்குத்தான் சமம் என்றாலும் கூட, துருவப்பகுதியில் உள்ள பனி உருக இதுபோதுமானது. இதனால் கடல் மட்டம் உயரும். பல தீவு நாடுகளுக்கு சேதம் ஏற்படும். மலை உச்சியில் உள்ள பனி உருகிவிட்டால், கோடை காலங்களில் ஆறுகள் வறண்டு பாலைவனமாகிவிடும்.பூமி எப்படி வெப்பமடைகிறது என்பதை அறிந்து கொள்ளும் போது, நம்மால் இயன்ற அளவுக்கு அது வெப்பமடைவதிலிருந்து தடுக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சூரியனிலிருந்து வரும் வெப்பக்கதிர்கள், புவியின் மேற்பரப்பில் பட்டு அதை சூடேற்றுகிறது. இந்த கதிர்கள் பூமியின் மேற்பரப்பால் "எதிரொளிக்கப்பட்டு' இந்த வெப்பத்தின் ஒரு பகுதி மீண்டும் விண்வெளிக்கே சென்றுவிடுகிறது. எனினும் வளிமண்டலம் போர்வை போல் காத்து மீதமுள்ள வெப்பத்தை பூமியிலேயே தக்க வைக்கிறது.பூமியிலிருந்து வெளியேறும் வெப்பம் மற்றும் பூமியிலுள்ள வெப்பம் ஒரு குறிப்பிட்ட விகித்தில் இருக்க வேண்டும்.
வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு, ஏ.சி., மற்றும் பிரிட்ஜ்கள் வெளியிடும் குளோரோ புளோரோ கார்பன்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் நைட்ரஜன் ஆக்சைடு, கால்நடைகள் வெளியேற்றும் மீத்தேன் உள்ளிட்டவை வளிமண்டலத்தில் சேர்ந்து வினைபுரிந்து மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் வளிமண்டலம் அதிகப்படியான வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும் நிலை ஏற்படுவதால் பூமி சூடேறுகிறது.சூரியனிலிருந்து வெளியாகும் அகச்சிவப்பு கதிர்கள் அதிக வெப்பமிக்கவை. இவற்றை பூமிக்குள் விடாமல் அரண் போல் காக்கும் ஓசோன் படலத்தையும் கார்பன் மாசு வினைபுரிந்து அவற்றை இல்லாமல் ஆக்கிவிடுவதால் பூமி சூடேற இன்னொரு காரணம் ஆகிவிடுகிறது.2050ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 50 சதவீதம் குறைத்து, புவி வெப்ப உயர்வை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.
பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றிலிருந்துதான் 40 சதவீதத்துக்கும் அதிகமான கார்பன் வெளியேற்றப்படுகிறது. இதனால் சூரிய சக்தி மற்றும் காற்று சக்தியை மாற்றாக பயன்படுத்துவது அவசியமாகிறது. என்றாலும் இன்று அத்தியாவசியமாகிவிட்ட வசதிகளால் கார்பன் வெளியேற்றத்தை தடுக்க முடியாது. அதேசமயம் அவற்றை கட்டுப்படுத்தலாம்.எரிசக்தியை வீணடிக்காமலும் சிக்கனமாகவும் பயன்படுத்தினாலே பூமி ஓரளவுக்கு தப்பிவிடும் என்பது விஞ்ஞானிகள் ஆசைப்படுகின்றனர்.
3 ஆயிரம் கி.மீ., ஓடும் ஒரு கார் 1.3 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. 2,500 கி.மீ., விமானத்தில் பயணம் செய்யும் பயணி ஒவ்வொருவருக்கும் இதே வீதத்தில் கார்பன் வெளியேற்றப்படுகிறது.மின்உற்பத்தியின் போதும் கார்பன் வெளியேறுவதால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் கணிசமான அளவுக்கு கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முடியும். குறைந்த மின்சக்தியை செலவழிக்கும் சி.எப்.எல்., பல்புகளை தேர்வு செய்யலாம். சி.எப்.எல்., பல்புகளுக்கு அனைவரும் மாறினால் உலகம் முழுவதிலிருமிருந்து வெளியேறும் 500 டன் கார்பன் குறையும்.
"டிவி', "டிவிடி', கம்ப்யூட்டர்கள், மொபைல் போன் சார்ஜர் உள்ளிட்டவற்றை நீங்கள் பயன்படுத்தாத போது அவற்றை அணைத்துவிட வேண்டும். பழைய வாஷிங்மிஷின், பிரிட்ஜ், இன்வெர்டர் பேட்டரிகள் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும். ஏர்கண்டிஷனர்களை தூய்மையாக்கி பயன்படுத்துவதால் ஒரு ஆண்டுக்கு 158 கிலோ கார்பன் வெளியேற்றத்தை தடுக்க முடியும்.
அருகில் உள்ள பகுதிகளுக்கு சைக்கிளிலும் நடந்து செல்லும் தூரப் பகுதிகளுக்கு நடந்தே செல்வதும், கார்களில் தேவையில்லாத பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்துக் கொண்டு, அவசியம் ஏற்பட்டால் மட்டும் பயன்படுத்துவதும் கார்பன் வெளியறி சுற்றுச்சூழலை கெடுப்பது தவிர்க்கப்படும். கிராமங்களில் சாண எரிவாயு அடுப்புகளை பயன்படுத்துவது எரிபொருள் சிக்கனத்துக்கும் வளிமண்டல பாதுகாப்புக்கும் உதவும்.மரங்கள் மொத்தமாக அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். மரங்கள் அதிகரிக்கும் போது அவை வளிமண்டலத்தில் உள்ள கார்பனை தூய்மைப்படுத்தும்.
நம் வாழ்க்கையில் சிறிய மாற்றங்களை உருவாக்குவதன் மூலம் நம் எதிர்கால சந்ததியினருக்கு முழுமையாக பயன்படும் வகையில் இந்த பூமியை மாற்றி அமைக்கலாம். நாம் வாழும் இந்த பூமியையும் வாழவிடலாமே...!
