தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

கம்யூ., வியூகம் 'டமால்!' நூலிழையில் தப்பியது மத்திய அரசு! ஆதரவு : 275 எதிர்ப்பு: 256

புதுடில்லி:பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுகளும், எதிராக 256 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம், கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த பரபரப்பான திருப்பங்களுக்கு பின், நூலிழையில் மத்திய அரசு தப்பியது. அரசை கவிழ்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தை சீர்குலைப்பதோடு, மாயாவதியை பிரதமராக்கலாம் என, இடதுசாரி தலைவர்கள் கண்ட கனவும், மேற்கொண்ட வியூகமும் பெரும் தோல்வியை தழுவியுள்ளது. மீதமுள்ள ஆட்சிக் காலத்தை, இடதுசாரிகளின் நிர்பந்தம் இன்றி, பிரதமர் மன்மோகன் சிங் அரசு முடிக்கும்.
தீவிரமாக செயல்பட்டனர் : கடந்த 2004ம் ஆண்டு முதல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இடதுசாரிகள் சமீபத்தில் வாபஸ் பெற்றனர். அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதையடுத்து, பார்லிமென்டை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, மன்மோகனை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, "அரசை எப்படியும் காப்பாற்றுவது' என, காங்கிரஸ் தலை மையிலான அணியும், "எப்படியும் வீழ்த்தி விடுவது' என, இடதுசாரி தலைமையிலான அணியினரும் தீவிரமாக செயல்பட்டனர்.
எம்.பி.,க்கள் 25 கோடி மற்றும் 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக புகார்கள் எழுந்தன.இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் லோக்சபா கூடியது. அப்போது, அரசுக்கு நம்பிக்கை கோரும் ஒருவரி தீர்மானத்தை தாக்கல் செய்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். "நாட்டின் நலன் கருதியே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது' என்றார். இதைத் தொடர்ந்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உட்பட பல கட்சித் தலைவர்கள் பேசினர்.இரண்டாவது நாளாக நேற்று தலைவர்களின் விவாதம் தொடர்ந்தது. விவாதம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ., கட்சியை சேர்ந்த எம்.பி., அசோக் அகர்வால், அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தனக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் தெரிவித்தார். சபை வரலாற்றில் இல்லாத வகையில், கைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களை வெளியே எடுத்து சபையில் காண்பித்தார்.
இப்பிரச்னையால் மதியத்திற்கு மேல் சபையில் அமளி ஏற்பட்டு, பின் ஒரு வழியாக 6.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, விவாதத்தை முடித்து வைக்க பிரதமர் அழைக்கப் பட்டார். அப்போதும் கூச்சல், குழப்பம் இருந்ததால், பிரதமர் தன் உரையை சில நிமிடங்களில் முடித்து விட்டார்.அவர் தாக்கல் செய்த ஆறு பக்க பதிலுரையில், "என்னை தங்களின் அடிமைகளாக நடத்த இடதுசாரி கட்சியினர் திட்டமிட்டனர். ஒவ்வொரு கட்ட சமரச பேச்சுவார்த்தையின் போது, தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்த விரும்பினர். அது ஏற்றுக் கொள்ள முடியாதது' என்று தெரிவித்திருந்தார்.
பின்னர், பல நாட்களாக நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நம்பிக்கை ஓட்டெடுப்பு துவங்கியது. எதிர்க்கட்சியினர் டிவிஷன் ஓட்டு நடத்த வேண்டும் என, வலியுறுத் தினாலும், எலக்ட்ரானிக் மிஷின் மூலம் முதலில் ஓட்டெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், எலக்ட்ரானிக் மிஷினில், 50க்கும் மேற்பட்ட ஓட்டுகள் பதிவாகவில்லை. மொத்த ஓட்டுகள் 487 என்றும், அரசுக்கு ஆதரவு 253 என்றும், எதிர்ப்பு 232 என்றும், ஓட்டுப் போடாதவர்கள் இரண்டு பேர் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, எம்.பி.,க்களிடம் சீட்டுக்கள் கொடுக்கப்பட்டு டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அரசுக்கு ஆதரவாக 275 எம்.பி.,க்களும், எதிராக 256 எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர்.
10 எம்.பி.,க்கள் ஓட்டுப் போடவில்லை. சபையில் நேற்று 541 எம்.பி.,க்கள் ஆஜராகியிருந்தனர். இவர்களில் 271 பேர் ஆதரவு அரசுக்கு தேவை. இருந்தாலும், அதை விட கூடுதலாக நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.மொத்தத்தில் எதிரணியின் ஓட்டுகளை விட கூடுதலாக 19 ஓட்டுகள் பெற்று அரசு வெற்றி பெற்றது. நேற்றைய ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம், கடந்த 30 ஆண்டுகளில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், வெற்றி பெற்ற ஏழாவது பிரதமர் என்ற பெருமையை மன்மோகன் பெற்றுள்ளார்.ஓட்டெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே, சபையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நேற்று நடந்த இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட பா.ஜ., எம்.பி.,க்கள் நான்கு பேருக்கு, பார்லிமென்டின் லாபியில் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது.நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி தலைவர் அமர்சிங், "என் அரசியல் வாழ்வில் இன்று தான் மகிழ்ச்சியான நாள்' என்றார். மத்திய அரசு பெற்ற வெற்றி, "ஊழல் மூலமாகவும், மோசடி வேலைகள் மூலமாகவும் பெற்ற வெற்றி' என, பா.ஜ., கூறியுள்ளது.அரசு வெற்றி பெற்றதை தொழில்துறையும் வரவேற்றுள்ளது.
கட்சி மாறிய எம்.பி.,க்கள் யார்?: பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு பேர், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், பிஜு ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு போட்ட பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி., ஹரிஹர் ஸ்வெயின் அக்கட்சியிலிரு ந்து நீக்கப்பட்டுள்ளார் என, அக்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.



நன்றி தினமலர்

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive