பெரிய கட்சிகள் கூட்டணி அமைக்க தூது விடும் அளவுக்கு தே.மு.தி.க., வளர்ச்சி கண்டுள்ளது. அக்கட்சியின் இளைஞர் அணி முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 18ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடக்கவுள்ளது. இம்மாநாட்டில் தனது வளர்ச்சியையும் அதிகரித்துள்ள கட்சியின் பலத்தையும் காட்ட விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். அந்த மாநாடு வெற்றி பெறுமா என்பதில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
அக்டோபர் 8 மற்றும் 9ம் தேதிகளில் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி கொண் டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 27ம் தேதி தீபாவளி பண்டிகை. இவற்றுக்கு இடையில் 18ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. தீபாவளிக்கு முன்னதாக வடகிழக்கு பருவமழை நீடிப்பது வழக்கம். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாள் மழை பெய்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட நெடுந்தூர மாவட்டப் பகுதிகளில் இருந்து தொண்டர்கள் சென்னைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும்.
பண்டிகை கொண்டாட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை தொண்டர்கள் செய்ய வேண்டியது வரும். கடந்த ஆண்டு செப்டம் பரில் தே.மு.தி.க.,வின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா புதுக்கோட்டையில் நடந்தது. விழா அன்று பெய்த பலத்த மழையால் தொண்டர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் தீபாவளி நெரிசலில், தொலைதூர மாவட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு ரயில், பஸ்களில் டிக்கெட் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. மழை காரணமாக வேன் போன்ற வாகனங்களில் வந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
இதற்கு முன் தே.மு.தி.க.,விற்கு சென்னையில் மாநாடு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இம்முறை போலீசாரின் அனுமதி கிடைத்துள்ளது. அதற்கு காரணம் மேற்கண்ட பிரச்னைகளால் ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வருவதை தவிர்த்து விடுவார்கள் என்று, உளவுத்துறை போலீசார் அளித்திருக்கும் "ரிப்போர்ட்' தான். இதையெல்லாம் மனதில் வைத்து மாநாடு குறித்து விஜயகாந்த் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென அவரது விசுவாச தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் தேர்தல் கூட் டணி மற்றும் வியூகங்கள் அமைக்க வேண்டிய சூழ்நிலையில், அக்டோபர் மாத மாநாடு, கட்சியின் பலத்தை குறைத்து மதிப்பிட வாய்ப்பளித்து விடும் என்றும் கட்சித் தொண்டர்கள் கருதுகின்றனர். ஆனால், கட்சியின் தலைவர் விஜயகாந்த் என்ன கணக்கு போடுகிறாரோ?
