மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் மனபிறைவை அளிப்பதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜமாயத்-உத்-தாவா அமைப்பை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. தொடர்ந்து அந்த அமைப்பின் செயலாக்கங்களை முடக்குமாறும் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானும் ஜமாயத்-உத்-தாவா அமைப்பின் தலைவர்கள் சிலரை கைது செய்ததுடன், அந்த அமைப்பின் வங்கி கணக்கையும் முடக்கியுள்ளதாக அறிவித்தது. விஷயம் வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, வீட்டுக்காவலில் எடுத்த தலைவர்களையும், கைது செய்த தலைவர்களையும் விடுவித்தது. வழக்கம் போல் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது பாகிஸ்தான். முடக்கப்பட்டதாக கூறப்படும் ஜமாயத் - உத் - தாவாவின் வங்கி கணக்குகளும் வழக்கம் போல இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் பேரட் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், பாக்., அரசின் நடவடிக்கைகள் மனநிறைவை தருவதாக கூறியிருப்பது, இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பேரட் கூறியிருப்பாவது : ஒரு அமைப்பின் மீது உடனடியாக தடை விதிப்பது என்பது அவ்வளவு எளிதில்லை , ஆனால் பாகிஸ்தான் ஐ.நா., உத்தரவின் பேரில் பயங்கரவாதிகளை ஒடுக்க நல்ல வகையில் ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் பாகிஸஅதானிலிருந்து தான் வந்தார்கள் என பாகிஸ்தான் மாஜி பிரதமர் நவாஸ் ஷெரிப் முதல் பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் வரை அனைவரும் அடித்துச் சொல்லியும் கூட பாகிஸ்தான் இன்னும் இந்தியாவிடம் ஆதாரம் கேட்டு வருகிறது. இத்தகைய சூழலில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் இந்த கருத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
