
குழந்தைகளின் படிப்புதான் முக்கியம்! அதற்காக வீடு, காடு, கழனி என்று எதையும் விற்கத் தயாராக இருக்கும் பாசக்கார அப்பாக்கள் பலகோடியும்; படிப்புக்கார பிள்ளைகள் பலகோடியும் இருக்கும் இந்தியாவில் எழுதப்படிக்கக்கூடத் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகம்என்று ஒரு ஆய்வறிக்கை சொன்னதும் உங்களைப்போலவே நமக்கும் அதிர்ச்சி! அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல... `அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையைவிட இந்தியாவில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகம்!' என்று TOI ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்ட செய்தியை அறிந்ததும் அதற்கு என்ன காரணம் என்று நம் வழியில் அலசினோம்....
`12 லட்சம் பள்ளிக்கூடங்கள், 63 லட்சம் ஆசிரியர்கள். ஒரு நாளைக்கு பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவிகள் மட்டும் 29 கோடி. உலகத்திலேயே மிகப் பெரிய எஜுகேஷன் சிஸ்டம் இந்தியாவில் இருப்பதுதான்... என்ன இருந்து என்ன பிரயோஜனம்... இந்தியாவில் எழுதப்படிக்கத்?தெரியாதவங்க 38 கோடிப் பேர்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? படிப்பு விஷயத்தில் நகரத்திற்கும்-கிராமத்திற்கும் அரசு காட்டும் பாகுபாடு, சமூகத்தில் உள்ள ஆண்-பெண் வேற்றுமை. ஏழை-பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வு, சாதி சமாச்சாரங்கள்' என பலவற்றைச் சொல்கின்றனர் கல்வியாளர்கள். இதன்விளைவு, இன்று இந்தியாவில் ஆறுமுதல் இருபத்துநான்கு வயதிற்குள் இருக்கும் 46 கோடிப் பேரில் 17 கோடிப் பேர் பள்ளிக்கூடங்கள் பக்கமே போக முடியாத நிலைமையில் உள்ளனராம்!
ஒட்டுமொத்த இந்தியாவோட நிலவரம் இப்படி என்றால், நம்ம தமிழ்நாட்டோட தலைவிதி எப்படி? `என்னதான் சாஃப்ட்வேர் சாம்ராஜ்யமாக இருந்தாலும் மூன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெறும் 49 சதவிகிதம்தான். ஆனால் மஹாராஷ்டிராவில் இதே வகுப்புகளில் தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 85 சதவிகிதம்! என்கிறது ஓர் ஆய்வு. தொடக்கக் கல்வியில் தமிழ்நாட்டில் ஏன் இப்படியொரு தொய்வு?
`தொடக்கக்கல்வியை மேம்படுத்த போடப்பட்ட சட்டங்கள் அரசால் சரிவர பின்பற்றப்படாததும். அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாததும் என்கிறது ஒரு தன்னார்வ அமைப்பு. இதற்கு ஆதாரம் அண்மையில் ‘VOICEஎன்கிற கன்ஸ்யூமர் கேர் கவுன்சில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக தொடர்ந்திருக்கும் ஒரு பொது நல வழக்கு...
`2002-ம்?ஆண்டு 14வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதை அரசியல் சட்டமாக்கினர். ஆனால் அது முறையாகப் பின்பற்றப்படவில்லை. அந்த சட்டத்தின்படி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என எதுவுமே 14 வயதுக்குட்பட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது!
ஆனால், இன்று பல பள்ளிகளில் தொடக்கக் கல்விக்கே 3000 முதல் 15,000வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். 15000 முதல் 1 லட்சம் வரை டொனேஷன் வாங்குகிறார்கள்... அரசு இதை கண்டுகொள்வதில்லை. எனவே நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும்!' என்பதே அந்த வழக்கு... நீதிமன்றமும் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது...
இப்படி சட்டங்கள் காகிதத்தோடு மட்டுமே இருந்தால் எழுத்தறிவும் படிப்பறிவும் எங்கிருந்து வரும்?
மாநில அரசின் நிலைமை இதுவென்றால் மத்திய அரசோ கல்விக்காக நாட்டின் ஒட்டுமொத்த வருவாயில் (ஜி.டி.பி.யில்) 3.6 சதவிகிதத்தை மட்டுமே ஒதுக்குகிறது.இப்படியிருந்தால் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை உயராதா, என்ன?
இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யாமல் `தமிழ்நாட்டில் 333 பொறியியல் கல்லூரிகள்' என்று மார்தட்டிக் கொள் வதில் என்ன லாபம்? ஒட்டுமொத்த இந்தியாவில் பள்ளியில் சேர்பவர்களில் பத்து சதவிகிதம்தான் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.ஆனால் இங்கு கல்லூரிகள் புதிது புதிதாக முளைக்கின்றன, பள்ளிகள் காணாமல் போகின்றன... இருக்கும் பள்ளியிலும், `வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளே லஞ்சம் கொடுத்துதான் சேரவேண்டியிருக்கிறது. பள்ளிகளில் சேரவும், டி.சி. வாங்கவும் இந்த ஏழைப் பெற்றோர்கள் கொடுத்த லஞ்சம் சுமார் பன்னிரண்டு கோடி ரூபாய்க்குமேல்' என்று ஒரு அமைப்பு சர்வே செய்து, கல்வியில் இந்தியாவின் அவலத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது.
நன்றி குமுதம்

