மன அழுத்தமோ, வேலைப்பளுவோ, நிராகரிப்போ நிகழ்ந்து விட்டால் எதைப் பற்றியும் யோசிக்காமல் தற்கொலை செய்து கொள்வது என்பது பலவீனமான மனதின் வெளிப்பாடு.
இது இன்றைக்கு சீனாவின் மிகப்பெரிய தேசப் பிரச்சனையாக உருவாகி இருக்கிறது.
சீனாவில் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தெரியுமா ? 2,50,000 !!! இவர்கள் வயது 15 க்கும் 34 க்கும் இடையே ! இதை இணைய தளங்கள் ஊக்குவிக்கின்றன என்பது கூடுதல் அதிர்ச்சி !
வாழவேண்டிய வயதில், வாழ்க்கையின் முதல் பக்கத்திலேயே இவர்களுடைய வாழ்க்கை இப்படி வீணாக விரையமாவது சீன அரசின் மிகப்பெரிய கவலையாக மாறியிருக்கிறது.
ஒவ்வொரு இரண்டு நிமிடமும் ஒரு தற்கொலையும், எட்டு தற்கொலை முயற்சிகளும் சீனாவின் மெயின்லாண்டில் பதிவாவதாக சீனாவின் மனநல அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தற்கொலைகளின் காரணங்களை ஆராய்ந்தால் முதலிடத்தில் இருப்பது திருமண வாழ்வின் தோல்வி. சுமார் 30 விழுக்காடு தற்கொலைகள் திருமண வாழ்க்கையின் அமைதியின்மையினால் நிகழ்கின்றனவாம்.
இரண்டாவது இடத்தில் இருப்பது கடுமையான வேலையினால் உருவாகும் மன அழுத்தம். இது இருபது விழுக்காடு. மிச்சமுள்ள ஐம்பது விழுக்காடுகளை வறுமை, சரியான வேலைவாய்ப்பின்மை, சமூகத்தின் அங்கீகாரமின்மை உட்பட பல்வேறு காரணங்கள் நிரப்புகின்றன.
சீனாவிலும் நகர்ப்புறங்களை விட வசதிகள் குறைவான ஊர்ப்பகுதிகளில் இந்த தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாக அரசு தெரிவிக்கிறது. இந்தியாவைப் போலவே சீனாவிலும் இளைஞர்கள் எல்லாம் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்ததால் கிராமங்கள் முதியோர் இல்லங்களாய் காட்சியளிக்கின்றனவாம்.
பள்ளிக்கூடத்தில் பயிலும் பல பதின் வயதினரும் தற்கொலை செய்து கொள்வது உண்மையிலேயே கலவரமூட்டுகிறது. இந்த விழுக்காடு 17 என அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது. படிப்பின் பயமும், தனிமை உணர்வும் இவர்களை வாட்டுகிறதாம்.
தற்கொலை, வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையின்மையின் வெளிப்பாடு. சென்னையிலும் கடந்த ஆண்டு மட்டுமே 2500 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் திகிலூட்டுகின்றன.
பொறுமையும், சகிப்புத் தன்மையும், முக்கியமாக குடும்ப உறவுகளில் பிடிப்பின்மையும் இத்தகைய காலமாற்றத்தின் காரணம் எனலாம். வாழ்க்கை நாகரீகத்தின் அடித்தளத்தில் கட்டப்படாமல், உண்மை உறவுகளின் மேல் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.
தற்கொலை விரும்பிகளால் நிரம்பும் சென்னை !!!
நீங்க சுறுசுறுப்பான பார்ட்டியா?
சுறுசுறுப்பாய் இருப்பவர்களுக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்பவர்களுக்கும் புற்று நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட மிகவும் விரிவான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 80,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக உடற்பயிற்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் இடையேயான தொடர்பையே ஆய்வுகள் முன்னிலைப்படுத்தும். இந்த ஆராய்ச்சி வெறும் உடற்பயிற்சியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் ஆய்வு செய்யப்பட்ட நபரின் முழு வாழ்க்கை முறையையும் பரிசீலித்தது.
தினசரி வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிலையில் இயங்குகிறார் என்பதும், தினமும் உடலுக்கு எப்படிப்பட்ட வேலை தரப்படுகிறது என்பதும் கவனத்தில் இந்த ஆய்வு கவனத்தில் கொண்டது.
ஜப்பான் நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மக்களின் ஓய்வு, தூக்கம், உடற்பயிற்சி, உடல் உழைப்பு, தினசரி அலுவலின் தன்மை அனைத்தையும் கணக்கில் கொண்டு விரிவாக நடத்தப்பட்டது. இதன் முடிவில் தான் சுறுசுறுப்பான வாழ்க்கை எனில் புற்று நோய் பயத்தைக் குறைக்கலாம் எனும் முடிவு எட்டப்பட்டுள்ளது.
பொதுவாக இன்றைய நவீன உலகத்தில் உடலுழைப்புக்கு அதிகம் தேவையற்ற சூழலில் இந்த ஆராய்ச்சி முடிவு நம்மை சற்றே ஓடியாடி உழைக்க உற்சாகப் படுத்துகிறது எனலாம்.
உடலுக்குக் கொடுப்போம் தேவையான இயக்கம் - அதைக்
கொடுப்பதில் மனமே உனக்கென்ன தயக்கம் ?
வயாகராவை மிஞ்சும் புதிய மருந்து
வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு.
லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம்.
பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம் இது என்கின்றனர் இந்த புதிய அதிசய மருந்து தயாரிப்பாளர்கள்.
இந்த மருந்து Type 2 gonadotropinb ஐ வெளிவிடும் ஹார்மோன்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் பாலியல் ஆர்வத்தை தூண்டுகிறதாம்.
வயாகரா வெறுமனே உடலில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் நின்று விடுகிறது. மன அளவில் அது எந்த விதமான ஆர்வத்தையோ, விருப்பத்தையோ, மோகத்தையோ கிளறிவிடுவதில்லை. கூடவே அது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது. ஆர்வமற்ற பெண்களுக்கு வயாகராவினால் எந்த பயனும் இல்லை. ஆனால் இந்த புதிய ஆர்வம் தூண்டும் மாத்திரை பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத் தக்கது.
ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலமும், அதற்குரிய சுரப்பிகளை சுரக்கச் செய்வதன் மூலமும் ஆண்மைக் குறைபாடு உட்பட பல நோய்களையும் இந்த மருந்து சரி செய்து விடும் என்கின்றனர்.
முதலில் பெண்களுக்கென தயாரிக்கப்பட்ட இந்த மருந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயன்படுத்தப்படும் வகையில் இப்போது உருவாகி வருகிறது.
மூளையில் நேரடியாக ஊசி மூலம் செலுத்த வேண்டும் என துவங்கிய ஆராய்ச்சி இப்போது இரத்தக் குழாய்களிலும் செலுத்தலாம் எனும் அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. இதை மாத்திரை வடிவத்துக்குள் அடைக்கும் முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது.
வயாகராவை முழுமையாக துடைத்து எறியும் நோக்குடன் இந்த மருந்து மன உடல் சார்ந்த பிரச்சனைகளின் தீர்வாக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதன் பக்க விளைவு ஒரு பக்கா விளைவாம். அதாவது உடல் எடை கணிசமாகக் குறையுமாம்.
அட !! ஒரு க(பி)ல்லிலே இரண்டு மாங்கா !
Labels: மருத்துவ செய்திகள்
