ஜெயலலிதாவுக்கு ஆதரவாக குரு கைதுதமிழன் எக்ஸ்பிரஸின் அதிரடிச்செய்தி!
http://www.tamilanexpress.com/cover/cover.asp
Labels: அரசியல்
கடல் நீரை குளிராக்கும் சஹாரா தூசுப் புயல்!
சஹாரா பாலைவனத்தில் உருவாகும் தூசுப் புயல் வான் வெளியில் எழும்பி அட்லாண்டிக் மேற்குக் கடல் பகுதிக்கு மேல் வீசுகிறது. இதனால் காற்றில் சேரும் அதிகப்படியான தூசுகளால் கடல் நீரை அடையும் சூரிய வெப்பத்தின் அளவு குறைகிறது. இதனால் கடலின் மேற்புற நீர் குளிரடைகிறது. அவ்வாறு குளிரடைவதால் பலத்த சேதங்களை விளைவிக்கும் புயல்கள் ஏற்படும் வாய்ப்புகளும் குறைகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.அட்லாண்டிக் கடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் வானிலை துணைக்கோள் ஆய்வுகளுக்கான கூட்டுறவு நிறுவனம் (சி.ஐ.எம்.எஸ்.எஸ்.), இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அட்லாண்டிக் கடல் பகுதிகளில் ஆப்பிரிக்க தூசுப் புயலால் கடல் நீர் குளிரடைந்து விடும் என்று கூறியிருந்தது. இதனை வைத்துக் கொண்டு தற்போது வானிலை ஆய்வாளர்கள் இந்த ஆண்டின் தட்ப வெப்பம், புயல் நிலவரங்களை கணித்துள்ளனர்.ஆப்பிரிக்க சஹாரா பாலைவனத்தின் தூசுப் புயலால் மேற்புற கடல் நீரின் வெப்ப நிலை எந்த அளவுக்கு குறையும் என்பதற்கான கணினி மாதிரியை உருவாக்கி உள்ளதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் தூசுப் புயலால் கடல் நீர் பெரிய அளவிற்கு குளிரடையும் என்று கூற முடியாது என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், புயல் காற்றின் தீவிரம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தற்போது கணித்து விடலாம் என்று கூறியுள்ளனர்.கடல் நீரின் மேற்பரப்பு வெப்ப நிலை அதிகமாக இருந்தால் 5ஆம் அபாய எச்சரிக்கை புயல்கள் உருவாகலாம்.2005ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய புயல்கள் அனைத்தும்...
கடல் நீர் மேற்பரப்பு வெப்ப நிலை அதிகரிப்பால் 5ஆம் அபாய எச்சரிக்கை புயல்களாக உருமாறின என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். 2005ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் 4 புயல்கள் வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் நடப்பு ஆண்டில் சஹாரா தூசு மண்டலம் உருவாக்கும் தூசுப் புயலால் அட்லாண்டிக் கடல் நீரின் மேற்பரப்பு வெப்ப நிலை 1.1 செல்சியஸ் குறையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.இப்போது இந்த தூசு மண்டல நடவடிக்கைகளை கொண்டு கடல் நீர் வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களை ஓரளவு சரியாக கூறிவிட முடியும் என்றும் இதன் விளைவாக பெரும் புயல்காற்றுகளை கணித்து விடலாம் என்றும் இந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இதேப்போன்றதொரு தூசுப் புயல் கடந்த மாதம் 15ஆம் தேதி வட இந்திய மாநிலங்களைத் தாக்கியது. உத்திரப்பிரதேசத்தில் இருந்து பீகார், மேற்கு வங்கம் வரை அடித்துச் சென்ற அந்த தூசுப் புயலில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன, விளம்பர பலகைகள் விழுந்தன, குடிசைகள் சின்னாபின்னமாகின, 129 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.இந்த தூசுப் புயல் ஆக்ராவைத் தாக்கிய போது எடுத்த வீடியோ காட்சியை நீங்கள் பார்க்கலாம்.
http://tamil.webdunia.com/newsworld/news/environment/0806/20/1080620030_2.htm
உணவுப் பொருட்கள் விலையேற்றம் : ஐ. நா. கடும் எச்சரிக்கை!
உலகெங்கிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை அதிவேகமாக அதிகரித்து வருவதால், கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளதாக் ஐ.நா. உணவுக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியா உள்ளிட்ட பல முக்கிய ஏற்றுமதி நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் உலக அளவில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.ஜூன் 2007 முதல் பிப்ரவரி 2008-க்குள் உணவுப் பொருட்கள் விலை 55 விழுக்காடு அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் உற்பத்தியைக் காட்டிலும் அதன் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.இயற்கை எரிபொருட்களுக்கான பெருகிவரும் தேவை, பெருகி வரும் மக்களின் தேவைகள், இந்தியாவிலும் சீனாவிலும் அதிக கொள்முதல் திறன் கொண்ட மத்திய தர வகுப்பினரின் பெருக்கம், அபாயகரமாக மாறிவரும் தட்பவெப்ப நிலை ஆகியவை உணவுப் பொருள் விலை அதிகரிப்பை தீர்மானிக்கின்றன என்றும், இதனால் 10 கோடிக்கும் அதிகமானோர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஐ. நா. உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.உலகெங்கிலும் உள்ள அரசு சாரா உதவிக் குழுக்கள் ஐ.நா.விற்கான தங்கள் உதவித் திட்டங்களை குறைத்து வருகின்றன.கடந்த ஜூன் மாதத்தில் ஐ.நா. உலக உணவு திட்டத்திற்கு பங்களிப்பு செய்தவர்கள் தற்போது வரை பங்களிப்பு செய்து வந்த போதும் கடந்த ஜூனைக் காட்டிலும் 40 விழுக்காடு குறைவாக உணவுப் பொருட்கள் வந்து சேர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.யூனிசெஃப் தலைமை இயக்குனர் ஆன் வெனிமேன் இது குறித்து கூறுகையில், குறைந்த வருவாய்ப் பிரிவினர், வளர்ச்சியுறாத நாடுகளில் இந்த உணவுப் பொருள் விலை உயர்வின் தாக்கம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்றார்."பசியின் புதிய முகம்" என்று இதனை வர்ணிக்கும் ஆன் வெனிமேன் கடந்த 6 மாத காலங்களில் கோடிக்கணக்கானோர் உணவுப் பொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய் அபாயம் உலகசுகாதார அமைப்பு!
புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் மானுட உடல் நிலையை கடுமையாக பாதிக்கலாம் என்று எச்சரித்துள்ள ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு (WHO) இதனால் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது. உலக சுகாதார நாளான இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, வானிலை மாற்றத்தால் காற்றின் தரம் (அதிலுள்ள ஆக்சிஜன் அளவு) கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும், அதன் காரணமாக சுவாச நோய்கள் அதிகப்படலாம் என்றும் கூறியுள்ளது. கோடைக் காலங்களில் வீசும் அனல் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கலாம் என்றும், அது வீசும் காலம் நீடிக்கலாம் என்றும், இந்த மாற்றம் பொதுவாக குழந்தைகளை பாதிப்பது மட்டுமின்றி, இதய துடிப்பை பாதிக்கும் சாத்தியம் உள்ளது என்றும் கூறியுள்ளது. வானிலை மாற்றத்தால் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க உலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக, தண்ணீரால் பரவும் காலரா, வாந்தி-பேதி ஆகியவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தக்கூடிய மருந்துகளை விநியோகிக்கும் அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மரணப் படுக்கையில் பின் லேடன்?
அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.-வைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அல் கய்டா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின் லேடன் சிறுநீரக நோயால் அவதியுற்று வருவதாகவும், இன்னும் சில மாதங்களே அவர் உயிருடன் இருப்பார் என்றும் கூறியுள்ளனர்.இந்த நோய்க்கு பின் லேடன் எடுத்துக் கொள்ளும் ஒரு சில மருந்துகளின் பெயர்களையும் சி.ஐ.ஏ. திரட்டியுள்ளதாக தெரிகிறது.தற்போது அவர் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அளவுகள் அடிப்படையில் அவர் இன்னமும் 6 முதல் 18 மாதங்களே உயிருடன் இருக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பின் லேடன் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) சிகிச்சையில் இருப்பதாகவும் முதன் முதலில் கூறியவர் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் என்பது குறிப்பிடத்தக்கது.
சுனிதா வில்லியம்சிற்கு பத்ம பூசன் விருது!
இந்தோ- அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சிற்கு, அவரின் விண்வெளி சாதனைகளுக்காக நமது நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹூஸ்டனில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்களும், இந்திய வம்சா வழியினரும் பங்கேற்ற விழாவில் சுனிதாவிற்கு இந்தியத் தூதரக அதிகாரி எஸ்.எம்.கவாய் பத்ப பூசன் விருதை இந்திய அரசின் சார்பில் வழங்கினார். விருதிற்கு நன்றி தெரிவித்துப் பேசிய சுனிதா, "இந்த பெருமைக்குரிய விருது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார். விண்வெளியில் தங்கியிருந்த அனுபவம் பற்றி அவர் கூறுகையில், "விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு பூமி மிகவும் அழகாக இருந்தது. பூமியில் எந்த எல்லைகளும் இல்லை. ஆண், பெண், வேறுபட்ட மதம் அல்லது வேறுபட்ட நிறமுடைய தோலை உடையவர்கள் என்ற அடிப்படையில் நமக்குள் பிரிவினைகள் உள்ளதாக சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். இந்தப் பிரிவினைகள் எல்லாம் உங்கள் மனதில்தான் உள்ளனவே தவிர, அவை உண்மையல்ல. எல்லைகள் இல்லாத உலகத்தை நான் விண்வெளிக்குச் சென்ற பிறகுதான் கண்டேன். மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் விண்வெளிக்குச் செல்லாமலே உணர்ந்திருந்தனர்." என்றார். இந்த ஆண்டு துவக்கத்திலேயே சுனிதா வில்லியம்சிற்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது பணியின் காரணமாக டெல்லிக்கு வந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கரங்களில் விருதினைப் பெற இயலவில்லை.
பூக்கள் நறுமணம் இழக்கின்றன! காரணம் ?
காற்றில் உள்ள மாசினால் இயற்கையின் இன்றியமையாத சுழற்சி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆய்வில், வாகனப் புகையால் பூக்கள் நறுமணத்தை இழக்கின்றன என்று தெரியவந்துள்ளது.இதனால் தேனீக்கள் பாடு திண்டாட்டமாகியுள்ளது. பூக்களின் நறுமணம் அழிந்து வருவதால் பூக்களை மொய்க்கும் வண்டுகளும், தேனீக்களும் பூக்கள் இருக்கும் இடங்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது!வர்ஜினியா பலகலைக் கழக பேராசிரியர் ஜோஸ் ஃபியுயென்டஸ் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதிகம் மாசில்லாத சுற்றுச்சூழலில் உள்ள பூக்களிலிருந்து வெளியாகும் மணம் 1,000 முதல் 1,200 மீட்டர்கள் வரை பயணிக்கும், ஆனால் வாகனப் புகை உள்ளிட்ட மாசு படிந்த சுற்றுச்சூழலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூக்களின் நறுமணம் 200 மீட்டர்கள் வரையே பரவுகின்றன என்று கூறுகிறார் பேராசிரியர் ஃபியுயென்டஸ் பூக்களின் நறுமண மூலக்கூறுகள் வாகனப் புகையால் ஏற்படும் ஓஸோன், நைட்ரேட் நச்சு மாசுகளுடன் உடனடியாக கலந்து விடுகின்றன, இதனால் பூக்களின் நறுமணம் அழிந்து வருகிறது என்று பேராசிரியர் ஃபியூயென்டஸ் தலைமை ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர்.பூக்களின் மகரந்தத்தை உண்டு வாழும் வண்டு உள்ளிட்ட சிறு உயிரினங்களின் உணவுக்கு இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பூக்கள் இனப்பெருக்கமும் தடைபடுகிறது.சிறு உயிரினங்கள் இதனால் தங்களது இனப்பெருக்கத் தன்மையை இழக்கும் அபாயம் காத்திருப்பதாக இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதால் உலகின் அனைத்து உயிரினங்களும் தங்களது இயற்கை சுழற்சி முறையை இழந்து வருகிறது என்பது மட்டும் உறுதி என்று இந்த ஆய்வு எச்சரிக்கை செய்கிறது.
மரங்களை வெட்ட உயர் நீதிமன்றம் தடை!
தடிமர போக்குவரத்து விதியில் உரிய திருத்தங்கள் செய்யும் வரை மூங்கில், புங்கம் உள்ளிட்ட 36 வகையான மரங்களை உரிமம் இன்றி வெட்டி எடுத்துச் செல்லக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.விவசாயிகளும், வனப்பகுதி மக்களும் தங்களுக்கு சொந்தமான இடங்களில் மூங்கில், இலவம், பனை, சவுக்கு, கல்யாண முருங்கை, தைலம், ரப்பர், இலுப்பை, புங்கம் உள்ளிட்ட 36 வகையான மரங்களை வளர்த்து அவற்றை வெட்டி விற்பனை செய்யலாம். இதற்கு உரிமம் தேவையில்லை என 2007 நவம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு வனத்துறை ஊழியர் சங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகிய பொதுநல அமைப்புகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவில், அரசின் இந்த உத்தரவால் தனியார் நிலம் மட்டுமின்றி, அரசு நிலங்களில் உள்ள மரங்களையும் சட்ட விரோதமாக வெட்டி கடத்துவது அதிகரிக்கும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும். தடிமர போக்குவரத்து விதிகள்-1968 ல் உரிய திருத்தம் செய்யாமல் அரசாணை பிறப்பிக்க முடியாது என்று கூறியிருந்தனர்.இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா அடங்கிய பெஞ்ச் விசாரித்து அளித்த தீர்ப்பில், தடிமர போக்குவரத்து விதியில் உரிய திருத்தங்களை செய்யும் வரையில் அரசு பிறப்பித்த ஆணையை செயல்படுத்தக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புவி வெப்பமடைவதால் அமிலமயமாகிறது கடல் நீர்!
புவி வெப்பமடைதலால் கடல் நீர் அமிலமயமாகிறது என்றும், அதனால் கடல் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அமெரிக்க கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.சமீபத்தில் வெளியாகியுள்ள சயன்ஸ் இதழில் இது குறித்து இரண்டு ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளது.புவி வெப்பமடைதலால், தினசரி மில்லியன் டன்கள் கணக்கில் புவி வெப்ப வாயுவை கடல்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் பருவ நிலை மாற்றங்கள் மெதுவாக நடைபெறும் என்ற நன்மை இருந்தாலும் கடல் நீரில் இவை ஏற்படுத்தும் ரசாயன மாற்றம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், கடல் வாழ் உயிரினங்களின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த மாற்றங்கள் மிக வேகமாக நடைபெறுவதாகவும், கடல் நீர் அமிலமயமாதலால் ஏற்படும் விளைவுகளை துல்லியமாக கணிக்க முடியவில்லை என்றும் ஸ்டான்ஃபோர்டில் உள்ள சுற்றுச் சூழல் விஞ்ஞானி கென் கால்டெய்ரா கூறியுள்ளார்.சயன்ஸ் இதழில் இதற்கு முன் வெளியான மற்றொரு கட்டுரையில் கடல் ரசாயன ஆய்வாளர் ரிச்சர்ட் ஃபீலி, 200 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தொழிற்புரட்சி முதற்கொண்டே கடல் நீர் அமிலமயமாகும் நடவடிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படாமல் இதே அளவு தொடருமானால் இந்த நூற்றாண்டில் அனைத்துக் கடல் நீரும் 150 விழுக்காடு அமிலமயமாகிவிடும் என்று ஃபீலி அந்த கட்டுரையில் எச்சரித்துள்ளார்.கனடா முதல் மெக்சிகோ வரையிலான பசிபிக் கடலில் ஆழமான பகுதியிலிருந்து மேற்புறம் வரும் நீரில் இத்தகைய ரசாயன மாற்றம் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால் இப்பகுதி கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுக்தல் ஏற்பட்டுள்ளது என்றும், கார்பன்டையாக்சைடால் அமில மயமாகும் கடல் நீரின் அரிப்புத் தன்மை கடுமையாக அதிகரித்துள்ளது என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.கார்பன் டை ஆக்சைடு அதிகமுள்ள கடலின் ஆழ் பகுதிகளிலிருந்து நீர் மேற்புறம் வரும்போது மேற்புற கடல் நீர் அமிலமயமாகிறது. இது அளவுக்கு மீறி நிகழ்ந்தால் சிறு கடல் வாழ் உயிரினம் முதல் ராட்சத சுறா மீன்கள் வரை அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் என்று ஆய்வாளர் ஃபீலி கூறுகிறார்.கடல் நீர் அமிலமயமாதலால் அதில் உள்ள பவளப்பாறைகளுக்கு ஏற்படும் சேதங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளனர்.
ஒரகடத்தில் சரக்கு வாகனத் தொழிற்சாலை ரூ.3,000 கோடி
ரூ.3,000 கோடி முதலீட்டில் சென்னை ஒரகடத்தில் புதிய சரக்கு வாகனத் தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.ஜெர்மன் நாட்டைச் சார்ந்த டெய்ம்லர்-ஏஜி நிறுவனம் சார்பில் சென்னை சிப்காட் ஒரகடத்தில் ரூ.3000 கோடி முதலீட்டில் சரக்கு வாகன தொழிற்சாலையை அமைக்கிறது. ஆண்டொன்றுக்கு ரூ.70,000 சரக்கு வாகனங்களைத் தயாரிக்கும்.இந்த முதலீடு அடுத்த சில ஆண்டுகளில் ரூ.4000 கோடி அளவுக்கு உயரக்கூடும். இத்திட்டம் முழுத்திறனுடன் செயல்படும்போது 3000 பேருக்கு நேரடியாகவும், 20,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாப்புகளை உருவாக்கும். ஜெர்மனி நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு இதுவரை வந்துள்ள முதலீடுகளில் இது பெரிய முதலீடாகும்.இத்தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பாக தொழில் துறை முதன்மைச் செயலாளர் எம்.ப். ஃபரூக்கியும், ஜெர்மனியின் டெய்ம்லர்-ஏஜி நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினர் ஆன்ட்ரியாஸ் ரென்சியரும், ஹீரோ குழுமத்தின் சார்பாக ஹீரோ நிறுவனப் பணிகளின் தலைவர் சுனில் காந்த் முஞ்சாலும், டெய்ம்லர்-ஹீரோ வணிக வாகனங்கள் நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் மார்க் லிஸ்டோசெட்டாரும் கையெழுத்திட்டனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Labels: செய்திகள்
ஊசலாடுகிறது: பா.ம.க. இல.கணேசன்
''சர்க்கஸ் கூடாரத்தில் பார் விளையாடுபவரைப் போல ஒரு கை விட்டாலும் மற்றொரு கையில் தொங்கியவாறு சாகசம் செய்வது போல பா.ம.க ஊசலாடுகிறது'' என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க தீண்டத்தகாத கட்சி இல்லை. ஆனால் கூட்டணி என்று வரும்போது பா.ஜ.க அணியில் தி.மு.க இடம் பெறும் சாத்தியக் கூறு ஏதும் இல்லை. நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் பா.ஜ.க.வுடன் அ.இ.அ.தி.மு.க. ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளது. எனவே பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க. வுக்கும் உறவு உள்ளது என்று மக்களும் நம்பத் தொடங்கி விட்டனர்.தமிழகத்தில் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் பா.ஜ.க போட்டியிடும். நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அலை வீசுகிறது. காங்கிரஸ் கூட்டணி நீடிப்பதற்குக் காரணம் பா.ஜ.க.தான்.அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானால், தன்னிச்சையாக நாடு அணு சோதனைகளை நடத்த இயலாது. அடிமை சாசனம் போன்ற இந்த ஒப்பந்தத்தை பா.ஜ.க ஏற்காது.தி.மு.க அணியில் இருந்து பா.ம.க வெளியேற்றப்பட்டுள்ளது மிகவும் "த்ரில்' தரும் விஷயமாகும். சர்க்கஸ் கூடாரத்தில் "பார்' விளையாடுபவரைப் போல ஒரு "கை' விட்டாலும் மற்றொரு "கையில்' தொங்கியவாறு சாகசம் செய்வது போல பாமக ஊசலாடுகிறது. கச்சத் தீவை இரு நாடுகளுக்கும் பொதுவான மீன்பிடி தளமாக அறிவிக்க வேண்டும். ராமர் பாலத்தை தொல்லியல் சின்னமாக அறிவிக்க ஆய்வு நடத்தவும், தோரியம் உள்ளிட்ட கனிம வளத்தை வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவும், ராமர் பாலத்தைச் சேதப்படுத்தாமல் சேது திட்டத்தை நிறைவேற்றவும் பா.ஜ.க. பாடுபடும் என்று இல.கணேசன் கூறினார்.
ஊழல் பட்டியல் ரஷ்யா முதலிடம்
ஊழல் அதிகம் நடைபெறும் நாடுகளில் ரஷ்யா 145-வது இடம் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. ஊழலில் பாக்கிஸ்தான் 140-வது இடம், இந்தியா 74-வது இடம்.இந்த ஆய்வை மேற்கொண்ட தனிப்பட்ட சர்வதேசக் கழகமான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் உலகளாவிய ஊழல் பிரிவுக் குறியீட்டில் 180 நாடுகள் ஊழல் நிலவர கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் ஆசியப் பகுதியில் உள்ள நாடுகளில் ரஷ்யா 145-வது இடம்பெற்று ஊழலில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு ஆய்வில் 72-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 74-வது இடத்திற்கு தரம் தாழ்ந்துள்ளது.பாகிஸ்தான் 140வது இடத்திலும், ஈரான், லிபியா, நேபாளம் ஆகிய நாடுகள் ஊழலில் முறையே 133, 134, 135-வது இடங்களை பெற்று ஊழலில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளன.அண்டை நாடான சீனா கடந்த ஆண்டு 72-வது இடத்தில் இருந்தது. இந்த கணக்கெடுப்பில் ஒரு இடம் மலிந்து 73-வது இடத்திற்கு தாழ்ந்துள்ளது.இலங்கை 96-வது இடத்திலும், மாலத்தீவுகள் 90-வது இடத்திலும் உள்ளது. ஆசியப் பகுதியில் ஊழல் குறைவாக உள்ள நாடு சமீபத்தில் ஜனநாயக மயமான பூட்டான். இது 41வது இடத்தில் உள்ளது.ஊழல் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் டென்மார்க், ஃபின்லாந்து, நியூஸீலாந்து, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.ஊழலில் அனைத்து நாடுகளையும் விஞ்சும் விதமாக மியான்மார், சோமாலியா இந்த பட்டியலில் மிகவும் கீழே உள்ளது.அமெரிக்கா தனது 20வது இடத்தை தக்கவைத்துள்ளது. அமெரிக்காவிற்கு மேல் ஜெர்மனி, அயர்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், உள்ளது. 13-வது இடத்தில் பிரிட்டனும், 14-வது இடத்தில் ஹாங்காங்கும் உள்ளது.
கடல் நீரிலிருந்து குடிநீர்: மு.க.ஸ்டாலின்!
''கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டப்பணிகள் முடிந்தவுடன் ஜனவரி மாதத்தில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் கிடைக்கும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளி கிராமத்தில், நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், '' நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக மீஞ்சூர் காட்டுப்பள்ளி கிராமத்தில் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து மாதவரம் மற்றும் செங்குன்றம் வரை குடிநீரை கொண்டு செல்லும் குழாயினை அமைக்கும் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து மாதவரம் நீரேற்று நிலையம் வரை குழாய் பதிக்கும் பணியில் மொத்தம் 23,257 மீட்டர் நீளத்தில், தற்போது 16,622 மீட்டர் நீளத்திற்கு ஆயிரம் மி.மீ. விட்டமுள்ள நெகிழ்வு விரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 80 விழுக்காடு முடிவடைந்து உள்ளது.மாதவரம் நீரேற்று நிலையத்தில் இருந்து செங்குன்றம் வரை மொத்தம் 9,563 மீட்டர் நீளத்தில் இது நாள் வரையில் 9,007 மீட்டர் நீளத்திற்கு 900 மி.மீ. விட்டமுள்ள நெகிழ்விரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது 85 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது.கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை அமைக்கும் பணிகளில் குறிப்பாக கடலுக்கு அடியில் கடல்நீரை உள்கொணரும் குழாயினை பதிப்பதற்கான பணிகள் இரு பருவக்காலங்களுக்கிடையில், அதாவது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் மேற்கொள்ள முடியும். இந்த பணிகள் முடிந்து, ஆய்வு பணிகள் மேற்கொண்ட பிறகு, 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் இருந்து, இங்கிருந்து குடிநீர் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது'' என்று மு.க.ஸ்டாலின் கூறினார்
மனித வாழ்க்கைப் பாதையும்... போதையும்...
கத்திரி வெயில் சுட்டெரிக்கும் கோடையில் பெரும்பாலான மக்கள் விரும்பிப் பருகுவது குளிர் பானங்களைத் தான். ஆனால் 'குடி'மகன்களின் பாரம்பரிய விருப்பம் 'பீர்'... இதன் பேரைக் கேட்டாலே நமது உடலில் மெல்லிய போதை தெரியும் என்று சில 'குடி'மகன்கள் கருத்து தெரிவித்ததை என்னால் மறுக்க முடியவில்லை என்பதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன்.'பீர்' குடிமகன்களின் பாரம்பரிய விருப்பம் என்ற மேற்கண்ட வாக்கியத்தில், அந்தப் பாரம்பரியம் என்ற சொல்லை நான் பயன்படுத்தியதற்கு காரணம் உள்ளது. மெல்லிய போதை தரும் பீர் போன்ற வஸ்துகள் மனிதர்களின் வாழ்க்கையுடன் நீ...ண்...ட... நெடுங்காலமாக தொடர்புடைவை என்பதற்கு இந்த கட்டுரையில் ஒரு முக்கிய உதாரணத்தையும் மேற்கோள் காட்டியுள்ளேன். கிறிஸ்து பிறப்பதற்கு முன் (அதாங்க BC) 3200ம் ஆண்டிலேயே உற்சாக பானம் குடிக்கும் வழக்கம், உலகின் ஒரு சில நாடுகளில் நடைமுறையில் இருந்துள்ளதாக சமீபத்தில் கிடைத்த அகழ்வாராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. சரி... உங்கள் வீட்டில் பூலோக உருண்டை அல்லது உலக வரைபடம் இருந்தால் அதில் மெஸபடோனியா நாட்டை கண்டுபிடித்து அங்கே செல்லுங்கள்... என்ன கிடைக்கவில்லையா... தற்போதைய ஈராக் தான் அப்போதைய மெஸபடோனியா... ஒ.கே கண்டுபிடித்து விட்டீர்களா?சமீபத்தில் ஈராக்கில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பாட்டில் மூடிகளில் தற்போதுள்ள பன்னாட்டு உற்சாக பான கம்பெனிகள் பயன்படுத்தும் குறியீடுகளுக்கு (அதாங்க லோகோ) சவால் விடும் வகையில் சில சின்னங்களை கண்டுபிடித்துள்ளனர்.இதிலிருந்து அந்தக் காலத்திலேயே உற்சாக பானங்களை புட்டியில் அடைத்து..
இந்த மூடிகளை கொண்டு மூடி, அருகில் உள்ள பகுதிகளுக்கு மெஸபடோனிய மக்கள் விற்பனை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த ஆய்வை மேற்கொண்ட லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த டாக்டர் டேவிட் வென்குரோவ் கூறுகையில், "ஈராக்கின் (அப்போதைய மெஸபடோனியா) தெற்கு பகுதியில் உள்ள உருக் (Uruk) பகுதியில் 5,000 ஆண்டுகளுக்கு முன் சுமார் 20 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட களிமண் மூடி போன்ற பொருட்கள் தான் உலகளவில் முதன்முறையாக ஒரே மாதிரி தயாரிக்கப்பட்ட (அதாவது தற்போது லட்சக்கணக்கில் தயாரிக்கப்படும் உற்சாக பான பாட்டிலின் மூடிகள் போல்) பிராண்டட் பொருட்கள்," என்று கூறியுள்ளார்.கற்களில் சின்னங்களை (லோகோ) தயார் செய்து களிமண்ணைக் கொண்டு மூடிகள் தயாரித்து அதில் லோகோவை பதித்து உற்சாக பானங்களை களிமண் பொருட்களில் (கிட்டத்தட்ட தற்போதைய கண்ணாடி பாட்டில் போல் வடிவம் கொண்டவை) விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. (இப்போதுள்ள பாட்டில் மூடிகளை திறக்க 'ஓப்பனர்' பயன்படுகிறது... அப்போது எப்படி என்பது மெஸபடோனிய மக்களுக்கே வெளிச்சம்...)அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுபோன்ற களிமண் மூடிகளில் உள்ள சின்னங்களில், மக்கள் ஒன்றாகக் கூடி உற்சாக பானங்களை பருகுவது போலவும், அவர்களில் வளர்ப்புப் பிராணிகள் அருகில் அமர்ந்துள்ளது போலவும் வரையப்பட்டுள்ளது. (தற்போது திறந்தவெளி பாரில் நடக்கும் கேளிக்கை விருந்து போல...). இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், உற்சாக பானங்களை அவர்கள் 'ஸ்டிரா' போன்ற பொருட்களைப் பயன்படுத்தி உறிஞ்சியதுதான்.இதே போன்ற பிராண்டட் களிமண் மூடிகளைப் பயன்படுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு வகை உணவுப் பொருட்கள், எண்ணெய் வகைகள் மற்றும் லேசாக போதையேற்றும் வஸ்துகளை அருகே உள்ள பகுதிகளிலும் விற்று வருவாய் ஈட்டியுள்ளனராம். அந்தந்த பொருட்களில் உள்ள ஓவியங்கள்/ சின்னத்தைக் கொண்டே அவற்றின் தரத்தை கண்டறிய முடியும் என்பது கூடுதல் தகவல்.காலங்கள் மாறினாலும் உற்சாக பானம் மீதான மனிதனின் ஆசை மட்டும் மாறவே இல்லை. இதற்கு இந்த செய்தியே நல்ல உதாரணம்....
Labels: செய்திகள்
