தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்


இந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள்.

உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் `சுவிஸ் பேங்க்' என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. எனவே, அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் தங்களின் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான முக்கிய காரணம். இந்த ரகசிய காப்பு விவகாரங்களை 1934 ஆம் ஆண்டு முதலே ஒரு சட்டமாக்கி பாதுகாத்து வருகிறது சுவிஸ் அரசு.

மேலும், அந்த நாட்டின் சட்டப்படி அதிகப்படியான வருமானத்தை கணக்கில் காட்டாமலிருப்பதோ, சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை மறைப்பதோ ஒரு குற்றமே இல்லை. எனவேதான் உலக நாடுகளில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம், வரிஏய்ப்பு செய்யப்பட்ட பணம் என எல்லாவிதமான கறுப்புப் பணமும் சுவிஸ் வங்கிகளில் குவிந்து வருகின்றது.

இந்த ஆண்டு கடந்த மே மாதம் புதுடெல்லியில் உள்ள இண்டியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பைனான்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் சுமன் அகர்வால் ஒரு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதன்படி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளது மட்டும் 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்தத் தொகை உலகப் பொருளாதாரத்தில் ஏழு சதவிகிதமாகும். அதில் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பணம் இந்தியர்களுக்குச் சொந்தமானது. இந்தத் தொகையின் இந்திய மதிப்பு சுமார் 64 லட்சம் கோடி ரூபாய். இந்தியர்களுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யர்கள் 470 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இங்கிலாந்து 390 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் கறுப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர்.

``உலகிலேயே கறுப்புப் பண பதுக்கலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியர்கள்தான். இந்தியர்களின் கறுப்புப் பணமான 64 லட்சம் கோடி ரூபாய் என்பது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தில் 48 சதவிகிதம் என்கின்றார் இந்திய பொருளாதார நிபுணர் அருண்குமார்.

இந்த 64 லட்சம் கோடி ரூபாய் என்பது உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையைப் போல பதின்மூன்று மடங்கு அதிகம். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கடனே நாலரை லட்சம் கோடிக்கும் குறைவுதான். நாம் நமது பணத்தை கறுப்புப் பணமாக வங்கிகளில் பதுக்கி வைத்துவிட்டு, உலக நாடுகளிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணம் இந்திய அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது.

உலக அளவில் இது போன்ற கறுப்புப் பணம் பெரும்பாலும் சர்வதேச தீவிரவாதம், போதைப் பொருள் தயாரித்தல், கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபசாரம், புளூபிலிம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கடத்தல், சூதாட்டம் ஆகியவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக உலக நாடுகள் கருதுகின்றன. அதிலும் கறுப்புப்பணமே சர்வதேச தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக உலகநாடுகள் பலவும் அஞ்சுகின்றன.

எனவேதான் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போரின் விவரங்களை வெளியிடும்படி அமெரிக்கா, ஐ.நா. சபை உட்பட அனைத்து நாடுகளும் சுவிஸ் அரசை வலியுறுத்தி வந்தன. அதிலும் 09.11.2001-ல் அமெரிக்காவில் ட்வின் டவர் தீவிரவாதக் கும்பலால் உடைக்கப்பட்ட பிறகு இந்த நிர்ப்பந்தம் சுவிஸுக்கு அதிகமாகியது. அதுவரை இந்த வங்கிக் கணக்குகளின் ரகசிய பராமரிப்பைப் பாதுகாக்கவே ஐ.நா. சபையில் உறுப்பினராகாமல் இருந்த சுவிஸ் நாடு 2002-ல் வேறு வழியின்றி ஐ.நா. சபையில் உறுப்பினரானது. மேலும் சுவிஸ் அரசு அந்நாட்டு வங்கிகளுக்கு ஒரு சட்டமும் கொண்டு வந்தது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் பிரைவேட் அக்கவுண்ட் தொடங்குபவர்களின் விவரங்களை வங்கிகள் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும். அதை அரசுக்கோ வேறு யாருக்குமோ தெரிவிக்க வேண்டியது இல்லை என்றாலும், தங்களின் வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகள் அறிந்திருக்க வேண்டும் என அந்த சட்டம் கூறியது.

இது ஒரு புறமிருக்க, ஆஸ்திரேலியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் உள்ள சிறிய நாடு லீச்டென்ஸ்டீன். இந்நாட்டிலுள்ள எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள எண்ணூறு வாடிக்கையாளர்களின் விவரங்களை ஜெர்மனியின் புலனாய்வுத்துறையான பி.என்.டி. அமைப்பு சேகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து உலக நாடுகளான அமெரிக்கா, பின்லேண்ட், கனடா, நார்வே, சுவீடன், இத்தாலி, அயர்லாந்து, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அந்த எல்.டி.ஜி. வங்கியில் கணக்கு வைத்துள்ள தங்களின் நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை வாங்கிவிட்டது. மேலும், அவர்கள் மூலம் அந்தப் பணத்தை மீண்டும் சொந்த நாட்டிற்கே எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்திய அரசு கேட்டுக் கொண்டால், எல்.டி.ஜி. வங்கியில் உள்ள இந்திய கறுப்புப் பண முதலீட்டாளர்களின் பெயர்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அளிக்கத்தயாராக இருப்பதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் இந்திய அரசு இதுவரை அதைக் கண்டு கொள்ளவில்லை.

இது குறித்து `ட்ரான்ஃபரன்ஸி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச அமைப்பின் இந்தியத் தலைவரும் முன்னாள் கடற்படைத்தலைவருமான அட்மிரல் தஹிலியானி, ``இந்தப் பணம் இந்திய மக்களுக்குச் சொந்தமானது. அதை வாங்கித் தர இந்தியா தயங்குவதும் மறுப்பதும் ஏன்?'' என்று கேட்டிருக்கிறார்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளருமான மோகனகிருஷ்ணன் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்க தயாராகி வருகிறார். ``பொதுமக்களிடம் நேர்மையானவர்களைப்போல் நாடகமாடும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள், மக்களைச் சுரண்டி சேர்த்த பணம்தான் கறுப்புப் பணம். டெல்லியில் உள்ள உயர்மட்ட அரசியல்வாதிகள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் வி.ஐ.பி.கள் மற்றும் தொழிலதிபர்களின் போர்வையில் நடமாடுபவர்கள் சிலர் இந்தப் பட்டியலில் உள்ளனர். அந்தப் பட்டியலைத் தர ஜெர்மன் அரசு தயாராக இருந்தும், இந்திய அரசும் நிதித்துறையும் அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றறிய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர ஏற்பாடுகள் செய்து வருகின்றார். நிச்சயம் அந்தப் பட்டியலை வெளியிட வைப்பேன்'' என்றார் நம்பிக்கையோடு..

-புஷ்கின்ராஜ்குமார்

சுவீஸ் வங்கியில் கணக்குத் துவங்குவது எப்படி?

சுவிஸ்வங்கியில் கணக்குத் துவங்க ஐந்தாயிரம் சுவிஸ் பிராஸஸ் பணம் கட்டி யார் வேண்டுமானாலும் சாதாரண கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க முடியாது. இதற்கு பிரைவேட் அக்கவுண்ட் எனப்படும் ஸ்பெஷல் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும். இந்த பிரைவேட் அக்கவுண்ட் ஓபன் செய்ய முதல் டெபாசிட்டே இந்திய மதிப்பில் ஒன்றரைக் கோடி ரூபாயைக் கட்ட வேண்டும். இதற்கு நாம் சுவிஸ் நாட்டுக்குப் போக வேண்டுமென்பதில்லை. இமெயிலில் நமது விவரங்களை அனுப்பினாலே, அந்த வங்கியின் பிரைவேட் பேங்கர்ஸிலிருந்து ஒரு நபர் நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கே வந்து, அது சென்னையாக இருந்தாலும் வந்து உங்களின் பிரைவேட் அக்கவுண்டை தொடங்கி வைப்பார். பிரைவேட் அக்கவுண்ட் தொடங்கப்பட்டதும் ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும். அதன்பிறகு எல்லாமே அந்த நம்பர்தான். அதுமட்டுமின்றி, இந்த பிரைவேட் வங்கியின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவெனில், வங்கிக் கணக்கைத் தொடங்கியவர் யாரை நாமினியாக குறிப்பிடுகிறாரோ அவரைத் தவிர வேறு யாரும் மனைவி, பிள்ளைகளாக இருந்தாலும் இந்தப் பணத்தை உரிமை கோர முடியாது.

இப்படி பிரைவேட் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர் சுவிட்சர்லாந்து நாட்டின் தண்டனைச் சட்டப்படி அந்த நாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்தான், அந்நாட்டு அரசே அந்த நபரின் பிரைவேட் அக்கவுண்ட் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இப்படி பல்வேறு இறுக்கமான சிக்கல்கள் இருப்பதால்தான், இந்தியர்களின் இன்வெஸ்ட்மெண்ட் சுவிஸ் வங்கிகளில் குவிந்து கொண்டிருக்கிறது.


தமிழகத் தலைவர்கள் பெயரில் எவ்வளவு?

சுவிஸ் வங்கியில் பிரைவேட் அக்கவுண்ட்டில் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்கள் இப்போது லேசாக கசியத் தொடங்கியுள்ளன. அதில் டெல்லி முக்கியத்தலைவர்கள் சிலரின் பெயரும் அடக்கம். மும்பை பக்கம் பவர் பாலிடிக்ஸ் செய்பவரும் அதில் இடம் பெற்றிருக்கிறாராம்.

அதேபோல் தமிழகத்தில் முக்கிய தலைவர் ஒருவருக்கு நெருக்கமானவர்களின் உறவினர்கள் பெயரும் அதில் அடங்கியிருக்கிறது. தமிழகத்தின் வாரிசு தலைவர் ஒருவர் இப்போது டில்லியில் மணியடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கணக்கில் முப்பத்தாறாயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. கேடி சகோதரர்களின் கணக்கிலும் கணக்கில்லாமல் பணம் கிடக்கிறதாம். அதேபோல் ஃபுரூட் லேங்க்வேஜ் பெயரில் இப்போது புதுக்கணக்கு துவங்கப்பட்டிருக்கிறதாம். அந்தக் கணக்கைத் துவங்கி வைத்து பூஜை போட்டது ராஜாதி ராஜாவாம். தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் கடைசியாக கணக்குத் துவங்கியுள்ளவர் இந்த ஃப்ரூட் லேங்க்வேஜ்தானாம்.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive