இதயநோயால் அவதிப்பட்டு வந்த, தென்கச்சி கோ.சுவாமிநாதன், நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.அரியலூர் மாவட்டம், தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோ.சுவாமிநாதன். சென்னை, மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
கடந்த 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை, திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில், வேளாண் துறை இயக்குனராகப் பணியாற்றி, "வீடும் வயலும்' நிகழ்ச்சி வழங்கினார். பிறகு, உதவி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், "இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியில், மூன்று நிமிட நகைச்சுவை, சிந்தனைக் கதைகளைக் கூறி, பிரபலமானார்; கருத்துப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். ஏராளமான குழந்தைகள் நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். "இலக்கணம்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இதயநோயால் அவதிப்பட்ட சுவாமிநாதன், போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில், கடந்த 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12.40 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 68.சுவாமிநாதனுக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்செல்வி, மருமகன் தமிழரசன், பேரன் நவீன் உள்ளனர்.தென்கச்சி சுவாமிநாதனின் உடல், அவரது பூர்வீகமான தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனூர் கிராமத்திற்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.
தென்கச்சி கோ.சுவாமிநாதன் காலமானார்
கல்விக்கொள்ளை
கல்வி என்பது மனிதவாழ்வின் இன்றியமையாத ஒன்றாகும் நமது சமுதாயம் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும். என்பதற்க்காக காமராஜர் போன்றோரால்போற்றி வளர்க்கப்பட்ட கல்வி இன்று பணத்திற்க்கு விலை போகும் பொருளாகிவிட்டது.கல்வி என்பது அனைத்து மக்களுக்கும்
ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டும்என்பதை குறிக்கோளாக உருவாக்கப்பட்ட அரசு பள்ளிகளின் தற்போதைய நிலைமைஎன்ன?
எங்கு நோக்கினும் தனியார் பள்ளிகளின் ஆக்கிரமிப்பே அதிகமாக உள்ளதுஇன்று கல்வி பகல் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டதுதொடக்ககல்வி முதல் கல்லூரி படிப்பு வரைகல்வி என்பது அறிவை வளர்க்கும் இடமாக இல்லாமல்பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டது.
தொடக்கல்விக்கே இன்று பல ஆயிரங்களைபிடுங்கும் கல்வி நிறுவனங்கள் ,கல்லூரி படிப்பிற்கு பல லட்சங்களை பிடுங்கிக்கொள்கின்றன ஏன் இந்த மாற்றம்! அரசு பள்ளிகள் என்னவாயிற்று? தங்கள் குழந்தைகள் ஆங்கில அறிவிலும் மற்ற அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும்என நினைத்த பணக்கரர்களுக்காக மட்டுமே இயங்கிவந்த இது போன்ற பள்ளிகள் என்று பெருகி விட்டதன் காரணம் என்ன? ஆங்கில மோகம் ஒரு புறம் இருந்தாலும்தன் குழந்தையும் சமுதாயத்தில் உயர வேண்டும் எனநினைக்கும் ஏழைகள் கூட இது போன்ற பள்ளிகளையே நாடுகின்றனர்.
இதில் அரசு பள்ளிகளின் நிலை பாடம் நடக்கிறதோ இல்லையோ சர்ச்சைகளும் பிரச்சனைகளுக்கும் மட்டும்குறைவில்லாமல் இருக்கிறது பாலியல் பிரச்சனைகள்,குழந்தைகளை கொடுமைபடுத்துகின்றனர், போன்றுதினம் தினம் சர்ச்சைகளை சுமந்து கொண்டு நிற்கிறதுகல்வித்துறை .ஆசிரியர்கள் போராட்டம் ,அரசு விடுமுறைஇவை அனைத்தும் போக பள்ளி நடப்பதேபோரட்டமாகி விட்டது
இது தவிர ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும்தேர்ச்சி விகிதம் தேர்வு முடிவுவெளியிடும் போதெல்லாம் இதனை பற்றி அக்கறை படும்அரசு பின் அதனை பற்றி கண்டு கொள்வதேயில்லை.
ஏன் இந்த நிலை தனியார் பள்ளியில் ரூபாய்2500 க்குவேலை செய்யும் ஒரு ஆசிரியரால் தரக்கூடிய உழைப்பையும்தேர்ச்சி விகிதத்தையும்அரசு பள்ளிகளில் ரூபாய் 13,500 சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை பார்க்கும்அரசு பள்ளி ஆசிரியர்களால் செய்ய முடியவில்லையே ஏன்?
ஏனென்றால் அங்கு ஆசிரியர்களுக்கென்றுவரைமுறை உள்ளதுஆனால் இங்கு கண்டு கொள்ளாத அரசு, கடமையைஒழுங்காக செய்யதவறிய அரசு அதிகாரிகள், ஆகியோரின்அலட்சிய போக்கால் கல்வி இன்று தனியாரின் கைகளில் அடைக்கலமாகிவிட்டது.
இது போன்ற செயல்களில்அரசு ஏன் அலட்சியம் காட்டுகிறது ஏனென்றால்கல்வி நிறுவனங்களை நிறுவி கொள்ளையில்ஈடுபட்டுள்ளது வேறு யாருமல்ல அரசில் பங்குவகிக்கும்அமைச்சர்கள், அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள தொழிலதிபர்கள்இதனாலேயே அரசு தனியார் பள்ளிகளின் மீதுதனி அக்கறை செலுத்தி அவற்றின் கொள்கைகளுக்கு வாய் மூடி கிடக்கிறது .
இவற்றை தடுக்க அரசு தனியார் பள்ளிகள் அனைத்திற்க்கும்ஒரே மாதிரியான கட்டணங்களை நிர்ணயிக்கவேண்டும் "நன்கொடை "என்ற பெயரில் சுருட்டும்பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தவேண்டும் மேலும் சிறந்த முறையில்செயல் படாத அரசு ஆசிரியர்களை உடனே வீட்டுக்குஅனுப்பவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
தனியார் பள்ளிகளின் கொள்ளை ஒரு புறமிருக்க தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைசேர்க்க முடியாத பெற்றோர் அரசு பள்ளிகளை மட்டுமேநம்பி உள்ளனர் ஆனால் அரசு பள்ளிகளின் நிலைமை கவலைக்கிடமாக தவழ்ந்துகொண்டிருக்கிறது.
இப்போது இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு பார்க்கும் போது தனியார் பள்ளிகளில்படிக்கும் குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போதுஅரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின்நிலைமை மிக மிக மோசமாக உள்ளதுதனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன்அரசு பள்ளியில் குழந்தைகள் நமது சமுதாய ஒட்டத்தில்போட்டியிடுவது இயலாத காரியம் இதற்கு தீர்வு தான் என்ன?
அரசு பள்ளிகள் அனத்தும் தனியார் பள்ளிகளின்தரத்திற்க்கு உயர்த்தப்படவேண்டும் பாடத்திட்டங்கள் அனைத்தும் தனியார் பள்ளிகளின் பாடத்திட்டங்களை விடசிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் அரசு பள்ளிகளில் பயின்று சிறந்த இடத்தை பிடித்தவர்கள் பலருண்டுஆனால் இன்று அவற்றின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுஇதனை சரி செய்ய அரசு அக்கறை செலுத்த வேண்டும்ஒரு சிறந்த அரசின் கடமை ஒரு சிறந்த குடிமகனை உருவாக்குவதே என்பதை மனதில் கொண்டு பாடுபட வேண்டும்நம் குழந்தைகள் தான் தனியாரிடம் நன்றாக படிக்கிறதே நமக்கென்ன என்று அலட்சியமாக இருந்தால் வருங்காலம் நம்மை வசை பாடும் என்பதை மறுப்பதக்கில்லை .
Labels: விமர்சனம்
புதிய ரட்சகர் புறப்பட்டு விட்டார்...
புதிய ரட்சகர் புறப்பட்டு விட்டார்... - தமிழருவி மணியன்
'மரணம் என் வாழ்வின் வாசற்கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெள்ளப் பறக்கத் தொடங்கிவிட்டது. விழிமூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன். அதுதான் 'சுதந்திர இந்தியா' என்ற என் பொற்கனவு. இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்கலாகாது. நம் நாட்டின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள். எல்லோரும் எழுங்கள். அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்.'
- தூக்கில் தொங்குவதற்கு முன்பு மாவீரன் சூர்யா சென், தன் தோழர்களுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டான்.
பிரிட்டிஷ் சிங்கத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கியவன் சூர்யா சென். இளம் புரட்சிப் போராளிகளின் படை நடத்தி, சிட்டகாங் ஆயுதக் கிடங்கைச் சூறையாடியவன். 37 வயதில் அவன் சிறைப்பட்டபோது, வெள்ளை அதிகாரிகள் சுத்தியல் கொண்டு அவனுடைய பற்கள் அனைத்தையும் உடைத்து, விரல் நகங்களைச் சதையோடு பறித்து, உடலின் ஒவ்வொரு மூட்டு இணைப்பையும்
முறித்து, நினைவு தவறிய நிலையில் தூக்கில் தொங்கவிடப்பட்டு, உடலை வங்கக் கடலில் வீசியெறிந்தனர். சூர்யா சென், பகத்சிங், சந்திர சேகர ஆசாத், ராஜகுரு, சுகதேவ், மகாவீர் சிங், மதன்லால் திங்ரா, ராம் பிரசாத் பிஸ்மில், வாஞ்சிநாதன் போன்ற எண்ணற்ற வீர இளைஞர்கள் இந்திய விடுதலைக்காகத் தங்கள் உயிரைத் தந்தனர். நம் வாழ்கால இளைஞர்களில் பலருக்கு இவர்களின் வரலாறு தெரியாது. ஆனால், ஒவ்வொருவருக்கும் நடிகர் விஜய் தெரியும்; விஜயகாந்த்தைத் தெரியும். ஒருவர் நாறிக் கிடக்கும் அரசியலில் நறுமணம் படைக்க வந்தவர். இன்னொருவர் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்த அரசியல் களம் நோக்கி வருபவர். தமிழகத்து அரசியலில் புதிய அத்தியாயம் வரைவதற்கு இவர்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?
நீண்ட காலமாகவே தமிழர் வாழ்வில் கோடம்பாக்கம், வழிபடும் கோயிலாகிவிட்டது. அரிஸ்டாட்டில் அரசியலை (Master Science) 'தலைமை அறிவியல்' என்றான். நம் வாக்காளப் பெருமக்களுக்குக் கஞ்சிக் கலயமும், காதுக்கு சுகமளிக்கும் பேச்சுக் கச்சேரியும்தான் முக்கியம். ஆட்சிக்கலை குறித்தோ, அரசியல் நிலை குறித்தோ அவர்கள் அதிகமாகக் கவலைப்படுவதில்லை. சங்கத் தமிழன் பேகன்கூட பொதி சுமக்கும் கழுதையின் துயர் கண்டு துடித்துப் போர்வை போர்த்தவில்லை. தோகை விரித்துக் கவர்ச்சி விருந்தளித்த மயிலுக்குத்தான் போர்வை தந்து மகிழ்ந்தான். கவர்ச்சியைக் கொண்டாடுவதில் நாம் அனைவரும் வள்ளல் பேகனின் வாரிசுகள்.
எம்.ஜி.ஆர் முதல்வரான பின்பு சில திரையுலக கதாநாயகர்களுக்கு அரசியல் ஆசை வந்து விட்டது. எல்லாரும் எம்.ஜி.ஆராகிவிட முடியாது என்பதை ஏனோ அவர்கள் உணர்வதாக வே இல்லை. கலையுலகில் இருந்தபடி கனவு வெளி யில் சிறகடிக்கும் இவர்கள், தங்கள் திரையுலக மூதாதையரைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். விடுதலை வேட்கை, சமூக சீர்திருத்தம், பெண்ணுரிமை, சாதிக்கொடுமை ஆகியவற்றைத் திரைப்படங்களின் மூலம் வெகுமக்களிடம் சேர்ப்பதற்கு முயன்றவர் கே.சுப்பிரமணியம். வெள்ளையர் அரசால் தடைசெய்யப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் அவர் இயக்கிய 'தியாக பூமி'. சாதி வேற்றுமைகளுக்கு எதிராகவும், விதவை மணத்தை ஆதரித்தும் அவர் தயாரித்த 'பால யோகினி' படத்துக்காகப் பிராமண சமூகம் அவரை 'சாதி பிரஷ்டம்' செய்தது. சினிமா மூலம் நல்ல சமூகத் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த மாபெரும் கலைஞனுக்கு அரசியல் ஆசை அன்று வரவில்லை.
இசைமேதை கிட்டப்பாவை வாழ்க்கைத் துணையாக ஏற்று 25 வயதில் விதவையாகிவிட்ட கே.பி.சுந்தராம்பாள் கைம்மை நோன்பு பூண்டு, தேனாம்பேட்டை கிராமணியார் தோட்டத்தில் ஆசிரமம் போன்ற வீட்டில் ஒதுங்கி வாழ்ந்தார். அடிமை இந்தியாவில் சுதந்திரக் கனல் சுடர் பரப்புவதற்காக அச்சமின்றி காங்கிரஸ் மேடைகளில் 'காந்தியோ பரம ஏழை சந்நியாசி' என்று பாடிய அந்தக் கொடுமுடி கோகிலம் ஒதுங்கி வாழ்ந்தபோது, மகாத்மா காந்தியே நேரில் அவர் இருக்குமிடம் தேடி வந்தார். தேச சேவையில் மீண்டும் ஈடுபட வேண்டினார். சுயராஜ்ய கட்சி வெற்றிபெற சத்தியமூர்த்தி முழங்கிய மேடைகளிலெல்லாம் சுந்தராம்பாள், 'ஓட்டுடையாரெல்லாம் கேட்டிடுங்கள்: இந்த நாட்டின் நலம் நாடிப் போட்டிடுங்கள்' என்று பாட்டு யாகம் நடத்தினார். 'வீட்டுக்குள்ளிருந்து - வீண் பேச்சுப் பேசுவதால் - நாட்டின் விடுதலை - நாம் அடையக் கூடுமோ?' என்று மக்களிடையே பாடிப் பாடி சுதந்திர உணர்வைத் தூண்டிய கே.பி.எஸ்., அரசியல் ஆதாயம் அடைய ஆசைப்படவில்லை.
கலைவாணர் தான் சம்பாதித்த எல்லாவற்றையும் வறியவர்க்கு அள்ளிக் கொடுத்து, அதனால் வறுமையில் வாடினார். திருமணத்துக்கு உதவி கேட்டு வந்த இளைஞருக்கு வெள்ளி கூஜாவை கொடுத்து 'இதைத் தவிர என்னிடம் வேறேதுமில்லை' எனச் சொல்லி வழங்கிய வள்ளல். பெரியார் கடுமையாக வெளிப்படுத்திய சுயமரியாதை கருத்துகளை மிகவும் மென்மையாக, சிரிக்கச் சிரிக்க நகைச்சுவை விருந்தாய் நமக்குப் பரிமாறிய அந்த உன்னதக் கலைஞர் சினிமா கவர்ச்சியை மூலதனமாக்கி அரசியல் கடை திறக்கவில்லை.
பகுத்தறிவுக் கொள்கைகளைத் தன்னுடைய நாடகங்கள் மூலம் பரப்பியவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 'பெரியாரின் தொண்டன்' என்று சொல்லிப் பெருமிதம் கொண்ட ராதா, திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலங்களில் முதல் மனிதனாக வெள்ளைப் புரவியில் அமர்ந்து கழகக் கொடியுடன் வலம் வந்தவர்; பட்டுக்கோட்டை அழகிரியால் 'நடிகவேள்' என்று பாராடப்பட்டவர். அந்த நடிகவேளால் 'கலைஞர்' என்ற சிறப்பை அடைந்தவர் நம் முதல்வர். ராதாவின் வலிமையான நாடகப் பிரசாரத்துக்கு அஞ்சி அன்றைய காங்கிரஸ் அரசு, 'நாடகத்தின் முழுமையான கதை வசனத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் முதலிலேயே சமர்ப்பிக்க வேண்டும்' என்று சட்டம் தீட்டியது. ஒரு தனி மனிதனின் கூர்மையான விமர்சனங்கள் ஆட்சியையே அன்று அலைக்கழித்தது. இந்தியாவிலேயே ராதாவுக்கு இணையாக மக்களின் சிந்தனையில் மறுமலர்ச்சியை உருவாக்க ஒரு சமூகப் போராளியாய் வீறுகொண்டெழுந்த இன்னொரு கலைஞன் இல்லை. 'நடிகர்களை நம்பாதே' என்று மேடைதோறும் மக்களின் மயக்கத்தை ஒழிக்க ஓங்கிக் குரல் கொடுத்த நடிகவேள் அரசியலில் எந்தப் பதவிக்காகவும் எவரிடத்தும் பல்லிளிக்கவில்லை.
ஆனால், இன்று... கோட்டை நாற்காலிக் கனவில் எத்தனை கோடம்பாக்கத்து நாயகர்கள்? சினிமாவில் மார்க்கெட் போனதும், அடுத்த பிழைப்பாக நினைத்தல்லவா அரசியலில் குதிக்கிறார்கள்! ஆட்சி நாற்காலிப் பேரின்ப வாசல் நோக்கி அடியெடுத்து வைக்கின்றார் கள்! எம்.ஜி.ஆர் என்ற துருவ நட்சத்திரத்தைப் போல் மின்ன நினைக்கும் இவர்களில் பலர் வெறும் எரிநட்சத்திரங்களே!
விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக், டி.ராஜேந்தர் போன்றவர்கள் எந்த நம்பிக்கையில் அரசியல் அங்காடியில் ஆளுக்கொரு பெட்டிக்கடை வைத்து அமர்ந்திருக்கின்றனர்? அதிகபட்சம் இவர்கள் ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்; முடிந்தால் அமைச்சராக வேண்டும்; வாக்காளர்கள் விவரமே இல்லாத இளிச்சவாயர்களாக இருப்பதைப் பயன்படுத்தி என்றாவது ஒரு நாள் தமிழகத்தின் முதல்வராக வேண்டும். இதற்கு மேல் இவர்களுக்கு என்ன சமூக அக்கறை? இவ்வளவு நாட்கள் இல்லாத கரிசனம் இன்று எப்படி இந்த ஏழைகள் மேல் வந்தது?
இத்தனை ரட்சகர்கள் போதாது என்று விஜய் எந்த அடிப்படைத் தகுதிகளோடு புதிய ரட்சகராகப் புறப்பட்டுவிட்டார்? 'விதியே, விதியே! தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?' என்று பாரதி அன்று புலம்பியதன் அர்த்தம் இன்றல்லவா புரிகிறது.
வங்கத்தில் ஆளுநராக இருந்து விடைபெற்றபோது மலை போல் குவிந்த பரிசுப் பொருள்களில் எதையும் ஏற்க மறுத்தார் ராஜாஜி. 'தந்தத்தாலான கைத்தடியையாவது எங்கள் அன்பின் அடையாளமாக எடுத்துச் செல்ல வேண்டும்' என்று வேண்டிய போதும், அதை மறுதலித்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பியவர் அந்த மூதறிஞர். ராமாயணத்து ஜனகனைப் போல் முதல்வர் நாற்காலியில் பற்றற்ற துறவியாய் அமர்ந்து பரிபாலனம் செய்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். தன் சொத்துகள் முழுவதையும் வடலூர் வள்ளலார் சபைக்கு எழுதிவைத்த ஏந்தல் அவர். பூரண மதுவிலக்கை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்திய முதல்வர் குமாரசாமி ராஜா, தான் வாழ்ந்த வீட்டையும், சொத்து களையும் தமிழகத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். தன் எஞ்சிய சொத்தாக வங்கியில் இருந்த 50 ரூபாயையும் பாரதி நினைவு மண்டபம் கட்ட நன்கொடையாகத் தந்துவிட்டு, கையை விரித்தபடி கண்மூடிய ராஜா ஓர் அரிய தலைவர். 10 வேட்டி சட்டையுடன் தன் வாழ்வை முடித்துக் கொண்ட பெருந்தலைவர் காமராஜர் கறுப்பு காந்தியாகவே நம்மிடையே வாழ்ந்து மறைந்தார். இவர்கள் அனைவரும் வளர்த்த காங்கிரஸ் இன்று நடிகர் விஜய்யின் நிழலில் இளைப்பாற இருக்கிறது. விவேக் ஒரு படத்தில் சொன்னதுபோல் 'எப்படி இருந்த காங்கிரஸ் இப்படியாகிவிட்டது'!
சொந்தப் பணத்தைச் சேதப்படுத் தாமல் காங்கிரஸ் கணக்கில் அரசியல் நடத்தி அதிகாரத்தைச் சுவைக்க நினைக்கும் விஜய், ஒருவகையில் விஜய்காந்த்தைவிட விவரமானவர் என்று கருதி மகிழலாம். ஆனால், நடந்தால் நிழல் மட்டுமே தொடரக்கூடிய காங்கிரஸ் தலைவர்கள், ரசிகர் பட்டாளத்துடன் வரும் விஜய்யை ரசிக்கமாட்டார்கள். சிவாஜிகணேசனுக்கு கிடைத்த காங்கிரஸ் அனுபவங்களை விஜய் அறிந்திருக்க நியாயமில்லை. ஓர் அங்குலம் உயரமானவனைக்கூட ஒப்புக் கொள்ளாத குள்ளர்களின் சாம்ராஜ்ஜியம்தான் தமிழக காங்கிரஸ். அங்கே நீண்ட காலம் விஜய் நீடிக்க முடியாது. நீடித்தால் இந்தப் புதிய ரட்சகர் அவமானச் சிலுவையில் அறையப்படுவார்.
அது சரி... விஜய்க்கு ஏன் இந்த ஆசை? அவரிடம் ஏதாவது புதிய அரசியல், சமூகப் பொருளாதார மாற்றுத் திட்டங்கள் இருந்தால் முதலில் அவற்றை அறிவிக்கட்டும். முதல்வர் கனவைத் தவிர வேறெதுவும் இல்லையென்றால், இப்போதே இந்த நெட்டைக் கனவை விட்டு விட்டு, தமிழ் சினிமா பக்கமே தன் கவனத்தை வைத்திருக்கட்டும்!
( நன்றி: ஜூவி )
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்: 5 பேர் உடல்கள் மீட்பு
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்தார். அவருடன் இருந்த 5 பேர் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மாயமான ஹெலிகாப்டர் கர்னூல் மலை உச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ விமானபடை அதிகாரி கூறியுள்ளார். இதனையடுத்து ஆந்திராவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆலோசிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அவசர உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கவுள்ளது.
நேற்று காலை 8.30 மணிக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், 9.30 மணிக்கு ரேடியோ தொடர்பை இழந்தது. நல்லமலா வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போதுதான் மாயாமாகி விட்டது. ஹெலிகாப்டரில் பயணித்த அதிகாரிகள் யாரிடமும் செயற்கைகோள் போன் இல்லை. இதுவும் நிர்வாகத்தினருக்கு ஹெலிகாப்டரை தேடுவதில் சிக்கலை ஏற்படுத்தியது.
தற்போது கர்னூலுக்கு கிழக்கே 40 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள இப்பகுதியை ராணுவ ஹெலிகாப்டர்கள் சுற்றிவளைத்துள்ளன. ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை உள் துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.
எந்த நிலையில் ஹெலிகாப்டர்: தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஹெலிகாப்டர் எந்த நிலையில் உள்ளது, விமானம் விபத்தில் சிக்கியதா என்ற கேள்விக்கு விமான அதிகாரி உறுதியான தகவல் ஏதும் கூற முடியாது என்றார். ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதி மிக சிரமமான மலைப்பகுதி என்பதால் அங்கு செல்ல சிரமம் ஏற்படும் என கருதப்படுகிறது.
துணை ராணுவ கமாண்டோக்கள்: ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதிக்கு துணை ராணுவ கமாண்டோக்கள் விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் இருக்கும் பகுதியில் இறக்கி விடப்பட்டனர். உடல்கள் கர்னூலுக்கு கிழக்கே ருத்ரகொண்டா - ரோலபெண்டா இடையே உள்ள அடந்த வனப்பகுதியில் இருக்கிறது.
பிரதமர் அவசர ஆலோசனை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்தை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் உயர் மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.சோனியாவும் பங்கேற்கிறார்.
முதல்வர் மரணமத்தை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இஸ்ரோ எடுத்த புகைப்படத்தில் எதுவும் சிக்கவில்லை: தேடுதல் பணியில்ஈடுபட்டுள்ள இஸ்ரோ 41 புகைப்படங்களை எடுத்துள்ளது. ஆனால் இதில் ராஜசேகரரெட்டி சென்ற ஹெலிகாப்டர் குறித்து எவ்வித அடையாளமும் சிக்கவில்லை. இது மேலும் கவலையை அதிகரித்தது.
நன்றி தினமலர்
