தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

இன்று கலைவாணர் நூற்றாண்டு விழா!

தமிழ் சினிமாவில் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த காமெடி நடிகர் என்று பெயர் எடுத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது. கலைவாணர் என்று அழைக்கப்படும் என்.எஸ். கிருஷ்ணன் இன்றும் தமிழ் சினிமா நடிகர்களின் முன்னுதாரண கலைஞராக திகழ்கிறார். இவரது நகைச்சுவை காட்சிகள் காலத்தால் அழிக்க முடியாதவையாக நிலைபெற்றுள்ளன.


நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவ. 29ம் தேதி கலைவாணர் பிறந்தார். சாதாரண வில்லுப்பாட்டு கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் சினிமா பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்தார். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச் சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.


இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். அறிவியல் கருத்துகளையும், சீர்திருத்த கருத்துகளையும் பரப்ப வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். காந்திஜி மீது கொண்ட பற்றினால் தனது ஊரான நாகர்கோவிலில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார். அம்பிகாபதி, மதுரைவீரன், நல்லதம்பி போன்ற படங்களில் இவரது வேடம் பரவலாக பாராட்டப்பட்டது. பணம், மணமகள் போன்ற படங்களை இயக்கினார். அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது. 1957ம் ஆண்டு ஆக. 30ம் தேதி தனது 49வது வயதில் கலைவாணர் மரணமடைந்தார். பிறருக்கு உதவுவதை கடமையாகவே கருதிய கலைவாணர் தனது இறுதி காலத்தை வறுமையில் கழித்தார்.

தேசத்தின் ஹீரோக்கள் என்.எஸ்.ஜி., வீரர்கள்...!

மும்பை பயங்கரவாத சம்பவத்தில் நாட்டின் மானத்தை காப்பாற்ற தங்களது உயிரை பணயம் வைத்து செயல்பட்டு வருகின்றனர் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.,) கமாண்டோக்கள். தேசிய பாதுகாப்பு படை 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது, பயங்கரவாதிகளால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை சமாளிப்பது போன்ற நோக்கங்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநில போலீசாராலோ, மத்திய போலீசாராலோ கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில் என்.எஸ்.ஜி.,களமிறங்கும். இதனால் போலீசார், துணை ராணுவம் போன்றவற்றின் பணியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இவர்களின் பணி. கடத்தல் தடுப்பு, மீட்பு பணி போன்றவற்றில் என்.எஸ்.ஜி., ஈடுபடுகிறது. இந்த அமைப்பு உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. என்.எஸ்.ஜி.,யின் பயிற்சி மையமும், வெடிகுண்டு தகவல் மையமும் அரியானாவில் உள்ளது. இதன் தலைமையகம் டில்லியில் உள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இங்கிருந்துதான் கமாண்டோக்கள் விமானம் மூலம் அனுப்பப்படுகிறார்கள்.


பிரிட்டனின் "எஸ்.ஏ.எஸ்.,' ஜெர்மனியின் "ஜி.எஸ்.ஜி., 9' போன்ற பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவில் என்.எஸ்.ஜி., உருவாக்கப் பட்டது. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. எஸ்.ஏ.ஜி., எனப்படும் "ஸ்பெஷல் ஆக்ஷன் குரூப்'. இதற்கு ராணுவத்தில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மற்றொன்று எஸ்.ஆர்.ஜி., எனப்படும் "ஸ்பெஷல் ரேஞ்சர்ஸ் குரூப்'. துணை ராணுவம், மத்திய, மாநில போலீஸ்துறையில் இருந்து இதற்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


என்.எஸ்.ஜி.,யின் பணிகள்


*பயங்கரவாத தாக்குதலில் இருந்து குறிப்பிட்ட இடத்தையோ, கட்டடத்தையோ மீட்பது. *பயங்கரவாதிகளை நேரடியாக எதிர்கொண்டு வீழ்த்துவது.
*விமான கடத்தல் போன்ற சம்பவங்களை கையாள்வது.
*பயங்கரவாதிகளிடம் இருந்து பிணைக்கைதிகளை மீட்பது.
*அச்சுறுத்தலை சந்திக்கும் வி.ஐ.பி.,களுக்கு பாதுகாப்பு வழங்குவது.
*வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் இடங்கள், கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் சோதனை பணிகளை மேற்கொள்வது.
*சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானக் கடத்தலை தடுப்பது.
*வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அகற்றுவது.
*குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தகவல் சேகரிப்பது.


மிக முக்கியமான நடவடிக்கைகள்


1986 ஏப்ரல்: பயங்கரவாதிகளுக்கு எதிராக அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் "ஆபரேஷன் பிளாக் தண்டர்'.


1994 ஏப்ரல்: இந்தியன் ஏர்லைன்சின் "போயிங் 737' விமானத்தை மீட்க மேற்கொண்ட "ஆபரேஷன் அஸ்வமேத்' .


1998 அக்டோபர்: உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை.


1999 ஜூலை: காஷ்மீரில் ஒரு காம்ப்ளக்சில் பயங்கரவாதிகளின் பிடியில் பிணைக்கைதிகளாக இருந்த 12 பேரை மீட்டது.


ஆகஸ்ட்: உ.பி.,யில் ருத்ரபூரில் ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளை வீழ்த்தியது.


1999 டிசம்பர்: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் "ஐ.சி., 814' காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை.


2002 செப்டம்பர்: ஆமதாபாத்தில் அக்ஷர்தாம் கோயிலுக்குள் பயங்கரவாதிகள் பிடியில் சிக்கிக்கொண்ட பக்தர்களை மீட்க "ஆபரேஷன் வஜ்ர சக்தி'.


2008 நவம்பர்: மும்பையில் வெளிநாட்டினர் அதிகம் தங்கும் ஒட்டல்களில் புகுந்து தாக்கிய பயங்கரவாதிகளிடம் இருந்து அப்பாவிகளை மீட்டது.


உயிரியியல், வேதியியல், அணுஆயுதம் தொடர்பான அச்சுறுத்தல்களை சமாளிக்க பாபா அணுசக்தி ஆய்வுமையத்திலும் என்.எஸ்.ஜி., படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.


2007ல் வெஸ்ட் இண்டீசில் கிரிக்கெட் உலக கோப்பை நடந்த போது என்.எஸ்.ஜி., குழு அங்கு அழைக்கப்பட்டு, குண்டுவெடிப்பு தவிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது. இது போன்ற பாதுகாப்பு அமைப்புகளிடையே நடத்தப்படும் போட்டிகளில் போது ஜெர்மனி, உக்ரைன் நாடுகளுக்கு சென்று பல பரிசுகளை இந்த அமைப்பு வென்றுள்ளது.


மும்பையை காப்பாற்றிய கார்கில் போர் ஹெலிகாப்டர்


மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது நகரவாசிகள் அனைவரையும் உயரே திரும்பி பார்க்க வைத்த இந்திய விமானப்படையை சேர்ந்த எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் கார்கில் போரிலும் முக்கிய பணியாற்றியிருக்கிறது. வானிலிருந்து கடற்படை கமாண்டோக்களை நரிமன் ஹவுசின் மேற்தளத்தில் இறக்கி முக்கிய தருணத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க இந்த ஹெலிகாப்டர் பயன்பட்டது. இந்திய விமானப்படையில் முன்பு "எம்.ஐ.,- 8' ரக ஹெலிகாப்டர்கள் பயன் படுத்தப்பட்டன. அதன் மேம்படுத்திய "எம்.ஐ.,-17' ரக ஹெலிகாப்டர்களே தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இவை ரஷ்யாவிலிருந்து வாங்கப் பட்டவை. 60க்கும் மேற்பட்ட நாடுகள் ராணுவ சேவைக்கு இந்த ஹெலிகாப்டர்களையே பயன்படுத்தி வருகின்றன. சில நாடுகளில் தீயணைப்பு படையினர், மீட்புப்படையினரும் இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகின்றனர். பைலட் உட்பட 35 பேர் வரை இதில் பயணம் செய்ய முடியும். இதன் இன்ஜின் சக்தி மிக அதிகம். அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் இவை செல்லும். வினாடிக்கு 8 மீட்டர் வரை உயரே எழும்பக்கூடியது. 1999ல் நடந்த கார்கில் போரின் போது 15 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் பறந்து சென்று தாக்குதல் நடந்த இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மும்பையில் வானில் ஒரே இடத்தில் நிலை கொண்டு வீரர்களை களத்தில் இறக்க இந்த ஹெலிகாப்டரே பொருத்தமானது என்று முடிவு செய்யப்பட்டது.


குடும்பத்தினருக்கே தெரியாமல் மும்பை வந்த "மார்கோஸ்'


இந்திய கடற்படையினரின் சிறப்பு நடவடிக்கை பிரிவுதான் "மரைன் கமாண்டோ போர்ஸ்'. சுருக்கமாக "மார்கோஸ்' என்று அழைக்கிறார்கள். இந்த படையினர் மிகவும் ரகசியமாக இயங்குவார்கள். இந்த வீரர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கூட இவர்கள் "மார்கோஸ்' படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தெரியாது. தங்கள் குடும்பத்தினரிடம் எங்கு செல்கிறோம் என்பதையே தெரியப்படுத்தாமலே மும்பை வந்தனர் இவர்கள். 1987ம் ஆண்டு மார்கோஸ் தொடங்கப் பட்டது. தற்போது ஏறத்தாழ 2 ஆயிரம் வீரர்கள் இதில் பணியாற்றுகின்றனர். மும்பை, கொச்சின், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மார்கோசின் முக்கிய மையங்கள் செயல்படுகிறது. மார்கோஸ் பிரிவில் சேர வீரர்கள் ஏறத்தாழ 2 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். படகில் இருந்து கடலுக்குள் குதிப்பது, ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் இறங்குவது போன்ற பயிற்சிகளும் இவர்களுக்கு வழங் கப்படுகின்றன. இவை வழக்கமான ராணுவ பயிற்சியை விட கடுமையாக இருக்கும்.


மார்கோசின் முக்கிய நடவடிக்கைகள்


ஆபரேஷன் பவன்: 1988 அக்டோபரில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற போது, மார்கோசும் நடவடிக்கையில் இறங்கியது. திரிகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய துறைமுகங்களை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க உதவியது.


ஆபரேஷன் காக்டஸ்: 1988 நவம்பரில் மாலத்தீவில் அமைச்சர் உட்பட 25 பேர் ஒரு கப்பலில் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டனர். மார்கோஸ் படையினர் அந்த கப்பலில் இறங்கி அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 2008ல் கடற்கொள்ளையர்கள் இந்தியாவின் "ஜக் அமவ்' கப்பலை கைப்பற்ற முயற்சித்த போது இவர்கள் முறியடித்தனர்.


மும்பையை மீட்கும் படையினர்: மும்பையின் மூன்று முக்கியமான இடங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றியதால் மகாராஷ்டிரா போலீசுக்கு உதவ 7 படைகளை சேர்ந்த வீரர்கள் வந்தனர். ராணுவம், என்.எஸ்.ஜி., மார்கோஸ், அதிவிரைவு படை, கருப்பு பூனை, மும்பை தீயணைப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ்


ஐந்தறிவு "வீரர்' : கமாண்டோ வீரர்களுடன் கைகோர்த்த மோப்ப நாய்கள் அவர்களுடன் மும்பை பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது உறுதுணையாக இருந்தன. மோப்ப நாய் படையில் இடம்பெற்றுள்ள நாய்கள் பிறந்த ஆறு வாரங்களில் பயிற்சியில் ஈடுபடுகின்றன. 32 வாரங்களில் அவை பயிற்சியை முழுமையாக முடித்துவிடுகின்றன. வெடிபொருட்களையும் குற்றவாளிகளையும் மிக எளிதாக கண்டறிய மோப்பநாய்கள் உதவுகின்றன. தற்போது நாடு முழுவதும் மோப்ப நாய்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட் களில் மோப்பநாய்களின் தேவை அதிகரித்துள்ளது. கோவை அருகே உள்ள போத்தனூரில் மோப்பநாய்களுக்கான மத்திய பயிற்சி மையம் உள்ளது. இங்கிருந்து நாடு முழுவதும் நாய்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive