ஒலிம்பிக் வரலாற்றில் நேற்று இந்தியாவுக்கு பொன்னான நாள். துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் "ஏர் ரைபிள்' பிரிவில், இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் தனிநபர் பிரிவில், தங்கம் வெல்லும் முதலாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்து, உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்துள்ளார். சீன தலைநகர் பீஜிங்கில், 29வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், இந்தியா உட்பட 205 நாடுகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த ஆண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில், 25 வயதான அபினவ் பிந்த்ரா பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 596 புள்ளிகள் பெற்றிருந்த இவர், இறுதிச் சுற்றுக்கு சூப்பராக முன்னேறினார்.
கடும் போட்டி: மிக முக்கியமான இறுதிச் சுற்றில் அபினவ், ஏதென்ஸ் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் ஜு கினான், பின்லாந்தின் ஹென்றி ஹகினான் ஆகியோரிடையே கடும் போட்டி காணப்பட்டது. "10 ஷாட்' கொண்ட இறுதிச் சுற்றில் பிந்த்ரா அசத்தினார். அனைத்து வாய்ப்பிலும் 10 புள்ளிகளுக்கும் மேல் பெற்று நம்பிக்கை தந்தார். ஏழாவது வாய்ப்பில் 10.6 புள்ளி பெற்ற இவர் முன்னிலை பெறத் துவங்கினார்.
"திரில்' தங்கம்: கடைசி 10வது வாய்ப்பில் பரபரப்பு எகிறியது. இதில், மீண்டும் கலக்கினார் பிந்த்ரா. இவர், மொத்தமுள்ள 10.9 புள்ளியில் 10.8 புள்ளி பெற, இந்திய ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர். கினான் 10.5 புள்ளி, ஹகினான் 9.7 புள்ளி மட்டுமே பெற்றனர். மொத்தமாக 700.5 புள்ளிகள் (தகுதிச் சுற்றில் 596 புள்ளி+இறுதிச் சுற்றில் "10 ஷாட்களில்' 104.5 புள்ளி) பெற்ற பிந்த்ரா, 0.8 வித்தியாசத்தில் தங்கம் வென்றார். இதன் மூலம், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் தங்கம் வெல்லும் முதலாவது வீரர் என்ற சாதனை படைத்தார். சீனாவின் கினான் 699.7 புள்ளிகளுடன் (597+102.7)வெள்ளி வென்றார். ஹகினான் 699.4 புள்ளிகளுடன் (598+101.4) வெண்கலம் கைப்பற்றினார்.
28 ஆண்டுகளுக்கு பின்: கடந்த 1900ல் நடந்த ஒலிம்பிக்கில், இந்தியா முதல் முறையாக பங்கேற்றது. தற்போது தான் தனிநபர் பிரிவில், பிந்த்ரா மூலம் தங்கம் வென்றுள்ளது. தவிர, 28 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் கைப்பற்றியுள்ளது. கடைசியாக 1980, மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்தது.
துணிச்சல் வீரர்: சண்டிகாரைச் சேர்ந்த பிந்த்ரா மிகுந்த துணிச்சலுடன் சாதித்துக் காட்டியுள்ளார். ஏற்கனவே உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இவர், இம்முறை முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் மற்றும் கழுத்து வலியால் அவதிப்பட்டார். போட்டிக்கு முன், துப்பாக்கியை கூட தூக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். ஆனாலும், ஜெர்மனி சென்று கடும் பயிற்சி மேற்கொண்ட இவர், தற்போது தங்க நாயகனாக ஜொலிக்கிறார். இது குறித்து பிந்த்ரா கூறுகையில், ""நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியாது. எனது வாழ்க்கையில் ஒரு "திரில்' அனுபவம்,'' என்றார். பிந்த்ராவின் தங்கச் சாதனை, பீஜிங் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ள மற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க சக்தியாக அமையட்டும். இந்தியா இன்னும் நிறைய பதக்கம் வெல்லட்டும்!
வாழ்த்து, பரிசு மழை : தங்கம் வென்று புதிய "ஹீரோ'வாக உருவாகியுள்ள அபினவ் பிந்த்ராவுக்கு வாழ்த்து, பரிசு மழை குவிகிறது. பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஒலிம்பிக் சாதனையை கொண்டாடி மகிழ்ந்தனர். பஞ்சாப் அரசு ரூ. ஒரு கோடி, இந்திய கிரிக்கெட் போர்டு, அரியானா அரசு தலா ரூ.25 லட்சம், மகாராஷ்டிர அரசு ரூ.10 லட்சம், தமிழக அரசு ரூ. ஐந்து லட்சம் உட்பட ஏறத்தாழ ரூ. இரண்டு கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கபில் புகழாரம்: அபினவ் பிந்த்ராவின் சாதனை, உலகக்கோப்பை வெற்றியை விஞ்சிவிட்டதாக கபில்தேவ் புகழ்ந்துள்ளார். பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்துள்ள துப்பாக்கிச் சுடுதல் பிரிவு வீரர் அபினவ் பிந்த்ரா பற்றி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், ""1983ம் ஆண்டு கிரிக்கெட்டில் இந்தியா உலகக்கோப்பை வென்ற சாதனையை, தங்கம் கைப்பற்றிய அபினவ் பிந்த்ரா விஞ்சிவிட்டார். நாடே பெருமை கொள்ளும்படி சாதித்துள்ளார். விளையாட்டில் இதுவரைக் கண்டிராத மாபெரும் வெற்றி இது. சர்வதேச அரங்கில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது மிக கடினமானது,'' என்றார். இந்திய ஒருநாள் கேப்டன் தோனி மற்றும் யுவராஜ் ஆகியோரும் அபினவ் பிந்த்ராவுக்கு நேரடியாக வாழ்த்துக் கூற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
