கண்டன தீர்மானம் கொண்டுவரப்படும் என, ஆளுங்கட்சி மிரட்டியதை அடுத்து, முஷாரப் நேற்று பதவி விலகினார். 1999ல் அதிகாரத்தை கைப்பற்றிய முஷாரப், ஒன்பது ஆண்டுகள் ஆட்சியை தன்வசம் வைத்திருந்தார்.
அக்., 12, 1999: ராணுவ தளபதியாக இருந்த முஷாரப்பை பதவி நீக்கம் செய்தார் பிரதமர் நவாஸ் ஷெரீப். பதில் நடவடிக்கையாக, நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றினார் முஷாரப்.
மே 13, 2000: நவாஸ் ஆட்சி கவிழ்ப்புக்கு பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்.
டிச., 2000: விமான கடத்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாசுக்கு விடுதலை. சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தல். 10 ஆண்டுகள் பாகிஸ்தானுக்கு திரும்ப தடை.
ஜூன் 20, 2001: பாகிஸ்தான் அதிபர் முகமது ரபீக் தரார் ராஜினாமா. முஷாரப் அதிபரானார்.
செப்., 11, 2001: உலக வர்த்தக மைய கட்டடங்கள் தகர்ப்புக்கு பின்னர், தலிபானுக்கு அளித்த ஆதரவை முஷாரப் விலக்கினார். அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கம்.
ஏப்., 30, 2002: ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள நடந்த தேர்தலில் சர்ச்சைக்குரிய முறையில் முஷாரப் வெற்றி.
அக்., 10, 2002: முஷாரப் ஆதரவு முஸ்லிம் லீக் பொதுத் தேர்தலில் வெற்றி.
நவ., 16, 2002: முஷாரப் மீண்டும் அதிபராக பதவியேற்பு.
டிச., 2003: இரண்டு முறை படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார் முஷாரப்.
ஜன., 1, 2004: 2007 வரை பதவியில் தொடரும் வகையில் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முஷாரப் வெற்றி.
பிப்., 2004: ஈரான், வட கொரியா, லிபியாவுக்கு அணு ஆயுத உற்பத்தி குறித்த தகவல்களை வழங்கிய அப்துல் காதீர் கானுக்கு முஷாரப் மன்னிப்பு.
டிச., 30, 2004: ராணுவ தளபதி பதவியை உதற முஷாரப் மறுப்பு.
மார்ச் 9, 2007: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகர் சவுத்ரியை நீக்கினார் முஷாரப். வக்கீல்கள் போராட்டம் வெடித்தது.
ஜூலை 10, 2007: இஸ்லாமாபாத்தின் சிவப்பு மசூதிக்குள் நுழைந்து தலிபான் ஆதரவு பயங்கரவாதிகளை தாக்கும்படி, ராணுவத்துக்கு முஷாரப் உத்தரவு. 105 பேர் பலி.
ஜூலை 20, 2007: நீதிபதி இப்திகர் சவுத்ரியை மீண்டும் நியமனம் செய்தது சுப்ரீம் கோர்ட். முஷாரப்புக்கு பின்னடைவு.
ஜூலை 27, 2007: அபுதாபியில் பெனசிர், முஷாரப் சந்திப்பு. பதவி விலகும்படி முஷாரப்பிடம் பெனசிர் வலியுறுத்தல்.
செப்., 10, 2007: சுப்ரீம் கோர்ட் உத்தரவுடன் நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் கைது. மீண்டும் சவுதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அக்., 6, 2007: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு இடையே பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பில் முஷாரப் வெற்றி.
அக்., 18, 2007: பெனசிர் நாடு திரும்பினார்.
அக்., 19, 2007: தற்கொலைப்படை பயங்கரவாதிகள் பெனசிரை படுகொலை செய்ய முயற்சி.
நவ., 2, 2007: முஷாரப் மீண்டும் தேர்தலில் நிற்க முடியுமா என்பது குறித்து விவாதிக்க சுப்ரீம் கோர்ட் கூடியது.
நவ., 3, 2007: பாகிஸ்தானில் எமர்ஜென்சி அமல். தலைமை நீதிபதி இப்திகர் நீக்கம்.
நவ., 25, 2007: நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.
நவ., 28, 2007: அஷ்பக் கியானியிடம் ராணுவ தலைவர் பதவியை ஒப்படைத்தார் முஷாரப்.
நவ., 29, 2007: முஷாரப் மீண்டும் அதிபராக பதவியேற்பு.
டிச., 15, 2007: எமர்ஜென்சி விலக்கிக்கொள்ளப்பட்டது.
டிச., 27, 2007: பெனசிர் படுகொலை செய்யப்பட்டார்.
பிப்., 18, 2008: முஷாரப் ஆதரவு கட்சிகள் தேர்தலில் தோல்வி.
மார்ச் 24, 2008: யூசுப் ரசா கிலானி பிரதமராக தேர்வு.
ஆக., 17, 2008: முஷாரப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர ஆளுங்கட்சி முடிவு.
ஆக., 18, 2008: அதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா.
முஷாரப் எழுச்சியும்... வீழ்ச்சியும்!
அதிபர் பதவியை விட்டு விலகினார் முஷாரப்
பதவி நீக்கக் கோரும் கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாத அதிபர் முஷாரப், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். அரசுடன் மோதலை தவிர்க்கவும், நாட்டில் நிலையற்ற தன்மை உருவாவதை தடுக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்தார். ஆனால், அவர் இனி சவுதி அரேபியாவின் தலைநகரான ஜெட்டாவில், அந்த அரசின் கவுரவ விருந்தினராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில், 1999ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்து, அதன்பின் அதிபரானவர் முஷாரப். அங்கு கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றது. இந்தக் கூட்டணி அரசில் நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சியும் இடம் பெற்றுள்ளது. ஐந்து மாதமாக பதவி வகித்து வரும் இந்த அரசு, "ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த அதிபர் முஷாரப் பதவி விலக வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கு அவர் உடன்படாததால், கண்டன தீர்மானம் மூலம் அவரை பதவியிறக்க முடிவு செய்யப்பட்டது. முஷாரப்பிற்கு எதிராக 100 பக்கங்கள் கொண்ட கண்டன தீர்மானத்தை இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்யவும் ஆளும் கூட்டணி கட்சிகள் தயாராகின.
அதே நேரத்தில், "முஷாரப் விரைவில் பதவி விலக வேண்டும். அப்படி விலகினால், அவர் மீது எந்த வழக்கும் தொடரப்படாது. பதவி விலக மறுத்தால், அவரை ராணுவம் காப்பாற்றாது' என, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கியானி அறிவித்தார். இதற்கிடையில், முஷாரப் பதவி விலகிய பிறகு அல்லது வெளியேற்றப்பட்ட பின், பெண் ஒருவர் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என, பாக்., மக்கள் கட்சி தலைவர் சர்தாரி அறிவித்தார். இந்த சூழ்நிலையில், கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாத முஷாரப், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது இதை தெரிவித்தார். அவர், மேலும் கூறியதாவது: ஆளும் கூட்டணியுடன் மோதலை தவிர்க்கவும், நாட்டில் நிலையற்ற தன்மை உருவாவதை தடுக்கவும் நான் பதவி விலகுகிறேன். எந்த கண்டன தீர்மானமும் அல்லது எந்தக் குற்றப்பத்திரிகையும் எனக்கு எதிராக நிற்க முடியாது. எனக்காக நான் எதையும் செய்யவில்லை; எல்லாவற்றையும் நாட்டிற்காகவும், மக்களுக்காகவுமே செய்தேன். எனவே, நான் மிகுந்த நம்பிக்கையில் இருந்தேன். எந்தக் குற்றச்சாட்டைக் கண்டும் நான் அஞ்சவில்லை. இருந்தாலும், கண்டன தீர்மானத்திற்குப் பின், நாடு எந்த சூழ்நிலைக்குச் செல்லும் என்பது தான் தற்போதைய கேள்வி. அப்படிப்பட்ட ஒரு நிலையற்ற, மோதலான சூழ்நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. அதிபர் அலுவலகம் நெருக்கடியில் பணியாற்றுவதை நான் விரும்பவில்லை.
நான் வெற்றிப் பெறுகிறேனா அல்லது தோல்வி அடைகிறேனா என்பது முக்கியமில்லை. கண்டன தீர்மானம் பார்லிமென்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், என்ன நிலைமையாகும் என யோசித்தேன். அதிபர் அலுவலகத்தின் கவுரவம் பாதிக்கப்படும்; நாட்டின் கவுரவமும் பாதிக்கப்படும் என உணர்ந்தேன்.
தனி நபரின் தைரியத்தை வெளிக்காட்ட இது சரியான தருணம் அல்ல; இது மிகவும் ஆழமாகவும், தீவிரமாகவும் சிந்திக்க வேண்டிய தருணம். அதனால், நாட்டின் நலன் கருதியே என் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். ராஜினாமா கடிதம் விரைவில் பார்லிமென்டை சென்றடையும்.
என் வாழ்நாளில் 44 ஆண்டுகளை ஒரு ராணுவ வீரராக நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளேன். அப்படிப்பட்ட நான், பார்லிமென்டில் குதிரைப் பேரம் நடைபெறாமல் தடுக்கவே பதவி விலகியுள்ளேன். சுயநலமாக செயல்பட நினைத்திருந்தால், நான் மாறுபட்ட முடிவை எடுத்திருக்க முடியும்; அதை விரும்பவில்லை. எனக்கு எதுவும் தேவையில்லை. என்னுடைய எதிர்காலத்தை நான் மக்களின் கைகளில் ஒப்படைக்கிறேன். நானும் மனிதன் தான்; சில தவறுகள் செய்திருக்கலாம். அது மக்களால் மன்னிக்கப்படும் என நம்புகிறேன். எனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் நலன் கருதியே அனைத்து முடிவுகளையும் எடுத்தேன். இவ்வாறு அதிபர் முஷாரப் கூறினார்.
முஷாரப்பின் இந்த ராஜினாமாவால், அவருக்கும் ஆளும் கூட்டணிக்கும் இடையே நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்தது. இருந்தாலும், முஷாரப் தொடர்ந்து பாகிஸ்தானிலேயே இருப்பது பற்றிக் கூறப்படவில்லை என்றாலும், தலைநகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள அவரது பண்ணை மாளிகையில் வாழ்வது சுலபம் அல்ல. பொதுவாக இம்மாதிரி பதவியில் இருந்து தூக்கி எறியப்படும் போது, துருக்கி அல்லது சவுதியில் தங்குவது பாகிஸ்தானில் வழக்கம். முஷாரப் தற்போது சவுதி தலைநகர் ஜெட்டாவில் தங்கி, அரசு விருந்தினராக வாழ வாய்ப்புகள் உள்ளன. பலவீனமான கூட்டணி என்பதால், அவர் அங்கிருந்து அரசியல் நடத்தவும் விரும்பலாம். முஷாரப் ராஜினாமாவை அடுத்து, பாகிஸ்தான் செனட் சபை தலைவர் முகமது மியான் சூம்ரோ, தற்காலிக அதிபராக பதவியேற்கிறார். முஷாரப் பதவியில் இருந்து ஓட்டம் பிடித்தது குறித்து இந்திய அரசு கருத்து ஏதும் கூறவில்லை; அது பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்: "பதவி விலகப் போவதாக அதிபர் முஷாரப் அறிவித்தது, ஜனநாயக சக்திகளுக்குக் கிடைத்த வெற்றி' என, பாகிஸ்தான் ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது. முஷாரப்பின் விலகலை, பாக்., மக்கள் கட்சி தொண்டர்களும், நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் கொண்டாடி வருகின்றனர். "ஜனநாயகத்தின் குறுக்கே இருந்த மிகப்பெரிய தடை அகற்றப்பட்டு விட்டது' என, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் புட்டோ கூறினார்.
பாக்., வெளியுறவு அமைச்சர் குரேசி கூறுகையில், "முஷாரப்பை பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்றுவதா அல்லது வேண்டாமா என்பதை ஆளும் கூட்டணி தலைவர்கள் முடிவு செய்வர். நாட்டின் அரசியல் சூழ்நிலை உட்பட பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் முடிவு எடுப்பர்' என்றார்.
பாகிஸ்தான் ஆளும் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் வீடுகளின் முன், ஏராளமான கட்சித் தொண்டர்கள் கூடி நேற்று முழுவதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த வண்ணம் இருந்தனர்.
காஷ்மீரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹூரியத் அமைப்பின் தலைவர் ஜிலானியும், முஷாரப் பதவியை ராஜினாமா செய்ததில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தைச் சிக்கலாக்கியது மட்டுமின்றி, இஸ்லாமிய உலகத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தியவர் முஷாரப் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
