இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று, உயர் மட்டக்குழுவை அனுப்ப இலங்கை அரசு முன்வந்திருக்கிறது. இக்குழு விரைவில் இந்தியா வந்து அங்குள்ள நிலையை நேரடியாக அரசிடம் விளக்கும்.கடந்த இரு நாட்களாக இலங்கை அரசிடம் இந்தியா வைத்த கோரிக்கைகளை அடுத்து இந்த நடவடிக்கைக்கு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார்.
இலங்கையில் உள்ள மனிதாபிமானப் பிரச்னைகளை அந்த அரசு நியாயமாக அணுகுகிறதா என்று கவனிக்க வேண்டும் என டில்லியில் உள்ள இலங்கை ஐ-கமிஷனர் ஜெயசிங்கேயை அழைத்து விளக்கம் கேட்டதையடுத்து இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. இதுகுறித்து இலங்கை மீடியாத்துறை அமைச்சர் அபயவர்த்தனே கூறுகையில், "ஐந்து எம்.பி.,க்களும் இரு உயர் அதிகாரிகளும் கொண்ட உயர்மட்டக்குழு இந்தியாவுக்குச் சென்று அங்கு நிலைமையை விளக்க வேண்டும் என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். ஆகவே, இந்தக் குழுவை அமைத்து விரைவில் இந்தியாவுக்குச் சென்று அவர்கள் கவலைப்படும் விஷயங்கள் குறித்து விளக்கம் தரப்படும்' என்றார். அதேசமயம், "அப்பாவித் தமிழர்கள் போரில் கொல்லப்படவில்லை; மாறாக, தமிழர்களுக்கும் புலிகளுக்கும் கருத்து வேறுபாடு இருப்பது அதிகம்' என்றும் அபயவர்த்தனே கூறினார். தவிரவும், இலங்கையில் கடும் சண்டை நடந்து வரும் நிலையில், அகதிகளாக உள்ளவர்களுக்கு உதவுவதற்காக ஐ.நா., சார்பில் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் நேற்று வவுனியா சென்றடைந்தன. அங்கு உணவுப் பொருட்கள் வினனியோகமும் துவங்கியது.இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் கிளிநொச்சியைப் பிடிப்பதற்காக ராணுவத்தினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் இந்தச் சண்டையால், 2.30 லட்சம் பேர் அகதிகள் போல உள்ளனர்.
இவர்களுக்கு உதவுவதற்காக ஐ.நா., சார்பில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், கடும் சண்டை காரணமாக உணவுப் பொருட்களுடன் சென்ற லாரிகள் நேற்று முன்தினம் திரும்பி வந்தன. இந்நிலையில், நேற்று 50 லாரிகள், தலைநகர் கொழும்பில் இருந்து 250 கி.மீ., தொலைவில் வடகிழக்குப் பகுதிக்கு 750 டன் உணவுப் பொருட்களுடன் சென்றன. அவை எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் சென்றடைந்ததாக, ஐ.நா., தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்கள் வினியோகம் துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியக் கோரிக்கையை ஏற்றது இலங்கை
Labels: அரசியல்
