பதினோரு ஐந்தாண்டுத் திட்டங்கள்; பதினேழு ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தம்; தனியார் மயம், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என பல திட்டங்கள் அரங்கேறின. இதனால் விளைந்த கொஞ்சநஞ்ச வாழ்க்கைத் தரத்தை பணவீக்கம் சின்னாபின்னாமாக்கிவிட்டது.
ஜூலை 2007ல் 4.7 சதவீதமாக இருந்த பணவீக்கம், மே 2008-ல் 8.86 சதவீதமாக அதிகரித்து, ஜூன் 14-ல் முடிவடைந்த வாரத்தில் இரட்டை இலக்கத்தை, அதாவது 11.42 ஆக உச்சத்தை எட்டியது. 13 ஆண்டுகளில் இதுவே அதிகபட்சம். காரணம் பெட்ரோலியப் பொருள்களின் விலையை மத்திய அரசு அதிகரித்தது. அதற்குக் காரணம் கச்சா எண்ணெய் முதன்முறையாக பீப்பாய் 140 டாலர் அளவுக்கு உயர்ந்தது.
மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்ட நிர்வாக மற்றும் நிதி தொடர்பான நடவடிக்கைகள் பயன் அளிக்கவில்லை.
பணவீக்கம் விலைவாசிகளை உயர்த்துகிறது. உணவுப் பண்டங்களின் விலை முதலில் உயருகிறது. கிராமப்புற, நகர்ப்புற சாதாரண மக்கள், தொழிலாளர்கள், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் என பெரும்பாலான மக்களை நிலைகுலையச் செய்துவிட்டது.
சாதாரண நடுத்தர மக்களிடையே கூட ஒரு வித நெருக்கடி உணர்வு காணப்படுகிறது. தன் குடும்பத்துக்கு தினம் அரை கிலோ காய்கறி வாங்குபவர் கால் கிலோ வாங்கினால் போதும் என்று நினைக்கிறார். மளிகைப் பொருள்கள் வாங்கும்போதும் இதே நிலைதான்.
வங்கிகளில் கடன் வாங்குவது முன்போல் அவ்வளவு எளிதாக இல்லை. வீட்டுக்கடன், வாகனக்கடன், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கான நுகர்வோர் கடன் என எல்லாக் கடன்களுக்கும் வட்டி விகிதம் உயர்ந்துவிட்டது.
பொழுதுபோக்கு அம்சங்கள் எட்டாத தூரத்தில் உள்ளன.
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கடந்த காலங்களில் சேமித்த பணத்துக்கு, வங்கி 8 முதல் 9 சதவீத வட்டி கொடுத்தால்கூட, அதில் ஆதாயம் இல்லை. பணவீக்கம் 11 அல்லது 12 சதவீதம் என்றால், 8 அல்லது 9 சதவீத வட்டியிலிருந்து கிடைப்பது மைனஸ் (நெகட்டிவ்) ஆதாயம்தான்.
மாதச் சம்பளக்காரர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு கிடைக்கக்கூடிய சம்பள உயர்வு தனியார் துறையில் குறைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் என்று சொல்லுவதால், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் கண்ட பலன் என்ன?
பஞ்சம் என்பது உணவுப் பண்டங்களின் பற்றாக்குறையால் மட்டும் ஏற்படுவதல்ல. வாங்கும் சக்தி இல்லாத மக்கள் பட்டினி கிடக்க நேரிட்டாலும் அது பஞ்சத்துக்கு நிகரான நிலை தான் என்று பல ஆண்டுகளுக்கு முன் நோபல் பரிசு பெற்ற வெளிநாடுவாழ் இந்தியப் பொருளாதார விற்பன்னர் அமார்த்திய சென் விளக்கினார். அதை இன்று ஐ.எம்.எஃப். தலைவரும் வழிமொழிகிறார்.
இந்தியாவில் நாளொன்றுக்கு ரூ. 40-க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் 35 கோடிப்பேர் என்று ஒரு கணக்கு உண்டு. ஆனால் தற்போதைய பணவீக்கம் அந்தக் கணக்கையும் பொய்ப்பித்துவிட்டது. காரணம் விலைவாசி ஏற்றத்தால் அதற்கும் அதிகமான பேர் இப்போது அரைவயிறு பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும்பாலான நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்றும், கச்சா எண்ணெய் மற்றும் உணவு தானியங்கள் விலை உயர்வு தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இது ஓரளவு உண்மைதான். அதேநேரம் சீனாவில் பணவீக்கம் இன்றுவரை எட்டரை சதவீத அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவால் முடியுமானால் இந்தியாவில் ஏன் இயலவில்லை என்று நாம் சிந்திக்க வேண்டாமா?
உலக அளவில் உணவு தானியங்களின் விலையும் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு என்ன காரணம்?
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மக்காச் சோளம் உள்ளிட்ட உணவு தானியங்களை மாற்று எரிபொருள் தயாரிப்புக்காகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இதனால் சாப்பாட்டுக்குக் கிடைக்காமல் அந்த தானியங்களின் விலை உயர்ந்து வருகிறது.
மழை, வெள்ளம் காரணமாகவும், வறட்சி காரணமாகவும் உலகின் பல வளரும் நாடுகளில் தானியங்களின் விளைச்சல் குறைந்து வருகிறது. தங்கள் நாட்டில் உணவு தானியங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்று உபரியாக சாகுபடி செய்திடும் நாடுகள் கூட, உணவு தானிய ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. உணவு தானிய விலை உயர்வுக்கு இவையெல்லாம் தான் காரணம்.
கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், தங்களுடைய உற்பத்திப் பண்டங்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, உற்பத்தி அளவைக் குறைக்கத் தொடங்கிவிட்டனர். உண்மையிலேயே உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது. முக்கியமாக, அண்மைக்காலமாக, சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஊகபேர வர்த்தகம் நடக்கத் தொடங்கி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் ஞடஉஇ மட்டும் தான் சம்பந்தப்பட்டுள்ளது என்று நாம் நினைத்தால் அது தவறு. உற்பத்தியில் துளியும் சம்பந்தப்படாத கோல்டுமேன் சாக்ஸ், சிட்டி குழுமம், ஒ.ட. மார்கன் சேஸ், மற்றும் மார்கன் ஸ்டேன்லி ஆகிய நான்கு பெரும் ஆங்கிலோ-அமெரிக்க முதலீட்டு நிதி நிறுவனங்களுக்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயிப்பதில் பங்கு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. இது கவலை அளிக்கும் விஷயம்.
இந்நிலையில், உலக அளவில் உணவு தானிய விலை உயர்வையும், கச்சா எண்ணெய் விலை உயர்வையும் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் சமீபகாலத்தில் இருக்காது என்பது தெளிவு.
ஆக, இந்திய மக்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும். உதாரணமாக, ஆன்-லைன் வர்த்தகத்தை இப்போது 4 உணவுப் பண்டங்களுக்கு மட்டுமே தடைசெய்து உள்ளது. இது போதாது. அனைத்து உணவுப் பண்டங்களுக்கும் அத்தியாவசியப் பண்டங்களுக்கும் ஆன்-லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும். இதனால் விலை கட்டுப்படுவதுடன் மக்களின் பீதியும் குறையும். பதுக்கல், கள்ளச்சந்தை ஆகியவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். உணவுப் பண்டங்களின் பொது விநியோக முறை உடனடியாகச் சீரமைக்கப்பட்டு அத்தியாவசியப் பொருள்களின் பொது விநியோகம் தங்கு தடையின்றி நடைபெற வழி செய்ய வேண்டும்.
எந்த ஒரு காரணம் கொண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு அரிசி, கோதுமை ஆகிய தானியங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
நீண்டகால அடிப்படையில், இந்தியாவைப் பொருத்தவரை விவசாய அபிவிருத்தி ஒன்று மட்டுமே ஏழை, எளிய மக்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்றக் கூடியது ஆகும். இதில் நமக்குச் சாதகமான அம்சங்கள் பல.
15 கோடி ஹெக்டர் விளைநிலம்; வருடத்தில் 270 நாள்கள் சூரிய ஒளி; 880 மி.மீ. மழை மற்றும் மிகப்பெரிய மனித வளம். இப்படி பல இயற்கை வளங்கள் இருக்கின்றன.
தேவையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, அரசியல் ரீதியிலான மனஉறுதி - உலகமயமாக்கல் மயக்கத்தில், விவசாயத்தை இரண்டாம்பட்சமாகக் கருதாத மனஉறுதி. ஆண்டுதோறும் அரசு விவசாயத்துக்கு ஒதுக்கப்படும் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர ஒருபோதும் குறையக் கூடாது. காரணம் நமது மக்கள்தொகை - 110 கோடி - ஆண்டுதோறும் 1.7 சதவீத அளவில் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு அதிகமாக உணவு தானியங்கள் தேவை.
9 சதவீத பொருளாதார வளர்ச்சி கண்ட பின்னரும், நமக்குள்ள அபரிமிதமான இயற்கை வளங்களையும் வைத்துக் கொண்டு, உணவுக்காக வெளிநாட்டினரிடம் கையேந்துவது, நம் நாட்டுக்கு அழகல்ல.
நன்றி _ தினமணி.
உயரும் பணவீக்கம், சரியும் வாழ்க்கைத்தரம்
கிரெடிட் கார்ட் - பில்லிங் தேதியும், வட்டியில்லா கடன்
கிரெடிட் கார்டு நுகர்வோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சங்கள் பில் கணக்கிடும் தேதியும், அந்த பில் தொகையை கட்ட வேண்டிய கடைசி தேதியும் ஆகும்.
இந்த தேதிகளை முதல் பில்லில் கண்டு கொள்ள முடியும். பில் தயாரிக்கப்படும் தேதி பில்லிங் தேதியாகும். அந்த பில்லில் கூறப்பட்டுள்ள தொகையை கட்டுவதற்கு அனுமதிக்கப்படும் கடைசி நாள் பேமென்ட் தேதியாகும்.
இந்த இருநாட்களுக்கும் இடையில் சுமார் 22 நாட்கள் இருக்கும். இந்த நாள் வட்டியில்லா கடன் நாட்களாகும்.
பில் தேதிக்கு முதல் நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு வட்டியில்லா கடன் நாட்கள் 23 நாட்களாகும். பில் தேதிக்கு அடுத்த நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு 52 நாட்கள் வட்டியில்லா கடன் நாட்களாக இருக்கும்.
உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 4 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித்தேதி 26 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...
3ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
4ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
5ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
...பெற முடியும்.
மற்றொரு உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 28 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி 20 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...
27ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
28ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
29ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
...பெற முடியும். இதை முழுமையாக புரிந்து கொண்டால் இந்த கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்துவதை கற்றுக்கொள்ளலாம்.
நன்றி தமிழ் வணிகம்
மத்திய அரசுக்கு கருணாநிதி நெருக்குதல் கொடுக்க வேண்டும்: ராமதாஸ
இலங்கை தீவில் போர் முழக்கங்கள் கேட்க கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்தும் படி சிறிலங்க அதிபருக்கு, இந்திய பிரதமர் நிர்ப்பந்தங்கள் கொடுக்க முதலமைச்சர் கருணாநிதி நெருக்குதல் கொடுக்க வேண்டும்'' பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது. தமிழர் பகுதிகள் மீது சிறிங்க ராணுவம் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி, அப்பாவி தமிழர்களை தினமும் கொன்று குவித்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக, உயிருக்கு எந்தவித உத்தரவாதமின்றி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சொந்த வீடுகளை இழந்து, இடம் பெயர்ந்துள்ள இவர்கள் உண்ண உணவின்றியும், மருந்துகள் இன்றியும் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு சர்வாதிகாரி இட்லர் நடத்திய இனப்படுகொலையை விடவும் மோசமான இனப்படுகொலையை அதிபர் ராஜபக்சே நடத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கும் சபதத்தை துணிந்து நிறைவேற்றி கொண்டிருக்கிறார். மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறார். இத்தனை கொடுமைகளுக்கு பிறகும், இந்திய அரசு வாய்திறக்கவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இலங்கைத் தமிழர்களை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய தமிழக அரசும் அந்த கடமையை செய்யவில்லை என்று உலக தமிழர்களெல்லாம் வேதனையில் மூழ்கி நிற்கின்றனர். அவர்களது வேதனையில் நியாயம் இல்லாமல் இல்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு தூங்கி கொண்டிருக்கவில்லை என்று முதலமைச்சர் அறிக்கை வெளியிடுகிறார். போரை நிறுத்த வேண்டும், அமைதி பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், அதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி லட்சக்கணக்கில் பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பிரதமருக்கு தந்திகளை அனுப்பி வைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது தான்.
ஆனால் இவை மட்டும் போதாது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகும், இந்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கையில் இப்போது போர் நடவடிக்கைகளும், போர்ப்படையினரின் தாக்குதல்களும் தீவிரமாகியிருப்பதும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லாததும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு சட்டப்பேரவையும், தமிழக மக்களும் விரும்பிய நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஒரு எதிரி நாட்டின் மீது படையெடுத்து சென்று தாக்குதல் நடத்துவதற்கு நிகரான தாக்குதலை இலங்கை போர்ப்படையினர் ஈழத்தமிழர்கள் மீது நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் அந்த போர் கடுமையாகி கொண்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் எங்கோ ஒரு மூலையில் பொதுக்கூட்டம் நடத்தி நிலைமையை விளக்குவதாலும், தந்திகள் அனுப்பி கொண்டிருப்பதாலும் நாம் விரும்புகின்ற பயன் ஏற்படப்போவதில்லை. முதலமைச்சரும், அவரது தலைமையிலான தமிழக அரசும் நேரடியாக பிரதமருடனும், அயலுறவுத்துறை அமைச்சருடனும் தொடர்பு கொண்டு பேச வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு சிறிலங்க அரசை எச்சரிக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும்.
அங்கே நடைபெற்று கொண்டிருக்கும் மூர்க்கத்தனமான போர்படையினரின் தாக்குதலை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கும் படி இந்தியா எச்சரிப்புடன் கூற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். இப்படி நீங்கள் எடுக்க போகும் முயற்சியின் விளைவாக இனி இலங்கை தீவில் துப்பாக்கி சத்தங்கள் கேட்க கூடாது. ஒரு குண்டு முழக்கம் கூட கேட்க கூடாது. போர் விமானங்கள் குண்டு மழை பொழியக்கூடாது.
பீரங்கிகள் முழங்க கூடாது. போர் முழக்கங்கள் கேட்க கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்தும் படி சிறிலங்க அதிபருக்கு நிர்ப்பந்தங்கள் என்று பிரதமரிடமும், அயலுறவுத்துறை அமைச்சரிடமும் முதலமைச்சர் நெருக்குதல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் முதலமைச்சர் நேரடியாக டெல்லிக்கு சென்று பிரதமரையும், அயலுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து முறையிட வேண்டும். அவசியம் என்று கருதினால் அனைத்து கட்சித்தலைவர்களையும் அழைத்து செல்ல வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத ஒற்றுமை இப்போது, தமிழக அரசியல் களத்தில் உருவாகியிருக்கிறது. இந்த நல்ல சூழ்நிலையை முதலமைச்சர் பயன்படுத்திக்கொள்ள முன் வரவேண்டும். அமைதி பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள போர்ப்படையினருக்கு எந்த வித உதவியும் வழங்க கூடாது.
இரு நாடுகளுக்கு இடையே கடலில் கூட்டு ரோந்து என்பனவற்றில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து ஒருமித்த கருத்துக்கு வந்திருக்கின்றன. இந்த ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி இலங்கை தீவில் தமிழர்கள் அனைத்து அதிகாரங்களையும் பெற்று அமைதியாக வாழ, வழிவகை காண முதலமைச்சர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கான முயற்சியை முதலமைச்சர் தாமதம் இன்றி மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தண்ணீரைக் காய்ச்சி குடியுங்கள்- மேயர் சுப்பிரமணியன்!
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்தது காலரா நோயால் அல்ல என்று மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.
மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலரா பரவாமல் இருப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் குடிதண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் காலரா நோய் இல்லை என்றும், இதனால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக நேற்று தண்டையார்பேட்டை மருத்துவமனைக்குச் சென்ற மா.சுப்பிரமணியன், அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.
மேலும், சுனாமி குடியிருப்பில் வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறித்தும் மேயர் ஆய்வு செய்தார்
போலி விளம்பரங்களால் ஏமாறும் மக்கள்!
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் பரவலாகப் பேசப்பட்டது தங்கக் காசு மோசடி. அந்த மோசடியில் ஏமாந்தவர்களின் சோகம் தீர்வதற்குள் மற்றொரு மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.
webdunia photo FILE
இதுதொடர்பாக திருச்சியைச் சொந்த ஊராகக் கொண்ட அனுராதா (வயது 29) என்ற பெண், அவரது கணவர் ரவிச்சந்திரன், பண மோசடிக்காக அனுராதாவின் கணவராக நடித்த முகமது அலி ஜின்னா (எ) ஸ்ரீராம், முஸ்தபா ஆகிய 4 பேர் தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அனுராதா அண்ட் கோ மோசடி விவரம்:
நீங்கள் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், மாதத்திற்கு 7 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதத்தில் 70 ஆயிரம் ரூபாயாகத் திருப்பித் தரப்படும். இதையறிந்த பலர் தங்கள் நகைகளை எல்லாம் அடகு வைத்து, இருந்த சேமிப்புகளை எல்லாம் அனுராதா அன்கோ-விடம் கொடுத்துள்ளனர்.
துவக்கத்தில் 20-க்கு 70 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுத்து ஆசை காட்டிய அந்த மோசடிக் கும்பல், அடுத்த முறை அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று கம்பியை நீட்டிவிட்டனர்.
தனது பேராசையால் மோசம்போன சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கல்பனா என்பவர் காவல்நிலையத்தில் புகார் கூறியதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மோசடி அம்பலத்துக்கு வந்தது.
57 லட்சம் ஏமாந்த கல்பனா!
கல்பனா தனது பணம் மற்றும் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் வசூலித்த பணம் என 57 லட்சம் ரூபாயை மோசடிக் கும்பலிடம் கொடுத்துள்ளார். தவிர மயிலாப்பூரில் மட்டும் சுமார் இரண்டரை கோடி ரூபாயை அனுராதா கோஷ்டியினர் சுருட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ள
போரூர், மதுரவாயல் உள்ளிட்ட வேறு சில பகுதிகளிலும் அனுராதாவும், அவரது கும்பலைச் சேர்ந்தவர்களும் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார்களாம்.
ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியேறி, தங்களது இலக்கு வசூலானதும் வீட்டைக் காலி செய்து விட்டு, வேறு இடத்திற்கு ஜாகையை மாற்றி இந்த மோசடியை நிறைவேற்றி உள்ளனர். சென்னை தவிர வேறு நகரங்களிலும் இதேபோன்ற பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மயிலாப்பூர் கல்பனா போன்று பணத்தாசையால் ஏமாந்தவர்களின் பட்டியல் நீளும் என்று கருதப்படுவதால், இந்த வழக்கை பொருளாதாரக் குற்றப்புலனாய்வுக்கு மாற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
அனுராதா உட்பட 4 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சரி, ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.
எத்தனையோ மோசடிகளைப் பற்றி கேள்விப்பட்ட பிறகும், மக்கள் மீண்டும், மீண்டும் மோசடிக்காரர்களின் வலையில் விழுவது ஏன்?
சம்பாதிக்கும் பணத்தை எத்தனையோ மத்திய - மாநில அரசுகளின் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து நியாயமான, உரிய வட்டியைப் பெறலாமே.
அதைவிடுத்து, இதுபோன்றவர்களின் ஆசைவார்த்தையில் மயங்கி, அதிக பணத்தை குறுகிய காலத்தில் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் மதியிழந்து முதலீடு என்ற பெயரில் மோசம் போவது ஏன்?
காலங்காலமாக இருந்து வரும் தபால்துறை வைப்பு நிதி, தேச சேமிப்பு சான்றிதழ், வங்கி தொடர் வைப்பு நிதி (Recurring Deposit), பரஸ்பர நிதி திட்டங்கள் (Mutual Fund Scheme), இந்திய ஆயுள் காபீடு கழகத்தின் பல்வேறுத் திட்டங்கள் என எத்தனையோ சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் முதலீடு செய்தால், தங்கள் பணம் இரட்டிப்பாக 4 - 5 ஆண்டுகள் வரை ஆகக்கூடும்.ஆனால், ஒரு ஆண்டில் 3 மடங்கு பணம் கிடைக்கிறதே (!?), குறுகிய காலத்தில் நாம் பெரும் பணக்காரர்களாகி விடலாம். உழைப்பே இல்லாமல் கைமேல் பணம் கொட்டுகிறதே? என்றெல்லாம் எண்ணுவதன் விளைவே இதுபோன்ற மோசடிக்காரர்களுக்கு வெற்றியாக அமைந்து விடுகிறது.
மோசடியில் ஏமாறுபவர்கள் ஏதோ, படிக்காத, கூலி வேலை செய்பவர்களோ அல்லது வங்கி, அரசின் சேமிப்புத் திட்டங்கள் பற்றி அறியாதவர்களோ கிடையாது.
மெத்தப் படித்த மேதாவிகளுக்கு, பணத்தின் மீதான மோகம், பேராசையால் பெரும்பொருளை இழந்த பின்னர்தான் மதி வேலை செய்கிறது.
10 ரூபாய் நம்மிடம் இருந்து பெறுபவன் எப்படி, எந்த அடிப்படையில் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக திருப்பித் தர முடியும்? என்று யோசித்து முதலீடு செய்தால் நம்மை யாரும் ஏமாற்ற முடியாது.
ஏமாற்றுக்காரர்களை நாமே ஊக்கமளித்து (பேராசையால் ஏமாறுவதன் மூலம்) வளர்த்து விடுகிறோம் என்பதே நாம் இங்கு சொல்ல வருவது.
வாழ்க்கையில் சேமிப்பு என்பது பொக்கிஷம். அந்த பொக்கிஷத்தை இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் கொடுத்து ஏமாந்து, போலீஸ், வழக்கு, நீதிமன்றம் என அலைந்து இழக்காமம் இருக்க உறுதி எடுப்போம்.
எனவே போலியான, கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல், அரசு மற்றும் அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் வங்கிகள், நிதி நிறுவனங்களை ஆய்வு செய்து அவற்றில் முதலீடு செய்து, நியாயமான உரிய பலனைப் பெற்று எதிர்கால வாழ்க்கையை வளமாக்குவோம்.
Labels: நாட்டு நடப்பு
மாணவர்களுக்கு எட்டாத கல்விக் கடன்!
மாணவர்கள் தாங்கள் விரும்பும் படிப்பில் சேர்ந்து படிக்க கல்விக் கடன் வழங்குமாறு மத்திய அரசும், நிதி அமைச்சரும் பலமுறை அறிவுறுத்தியும்கூட, கல்விக் கடன் பெறுவது இன்றுவரை மாணவர்களுக்கு குதிரைக் கொம்பாகவே இருந்து வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற ஒரு மாணவர், பொறியியல் டிப்ளமோ படிப்பில் சேர இடம் கிடைத்தும், அவர் 3 முறை தேர்வு எழுதியே வெற்றி பெற்றுள்ளார் என்று கூறி, அவருடைய கல்விக் கடன் விண்ணப்பத்தை பாரத அரசு வங்கி நிராகரித்துள்ளது.
அந்த மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றுள்ளார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், “கடன் கேட்டு விண்ணப்பித்த மாணவர் பெற்ற குறைந்த மதிப்பெண்ணை காரணம் காட்டி கடனை மறுக்கக்கூடாது" என்று கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, சாதாரண, ஏழை எளிய மாணவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்று நீதிபதி ஏ. குலசேகரன் கூறியுள்ளதை வங்கி மேலாளர்கள் மறக்காமல் நினைவில் கொள்ளவேண்டும்.
அலையவிடும் வங்கி மேலாளர்கள்!
2008-09 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் கல்வி மேம்பாட்டிற்காக ரூ.34,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி எனும் திட்டத்திறகாக ஒதுக்கீடு செய்யப்ட்டது ரூ.13,100 கோடி, அது இல்லாமல் கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டதுதான் 34,400 கோடி ரூபாய். இது இதற்கு முந்தைய நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 20 விழுக்காடு அதிகமாகும்.
அனைவரும் கல்வி கற்கவும், உயர் மற்றும் தொழில் நுட்பக் கல்விகள் அனைவருக்கும் கிடைக்கவும் மத்திய அரசு ஆண்டுக்கு ஆண்டு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துவரும் நிலையில், அதனைப் பயன்படுத்தி கல்வி பெற முன்வரும் மாணவர்களுக்கு கடன் வழங்குவதில் இன்னமும் வங்கிகள் உதாசீனப் போக்கைத்தான் கடைபிடித்து வருகின்றன.
தனியார்மயமாக்கப்பட்டு, இந்தியாவில் கல்வி பெரும் வணிகமாகிவரும் நிலையில், கல்வி கற்க விரும்பும் சராசரியான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வங்கிக் கடனை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை உள்ளது.
ஆனால் வங்கிகளோ, கடன் இல்லை என்று நேரடியாக மறுக்க முடியாத காரணத்தால், மாணவர்களை மாடாக அலைய விடுகின்றனர். கல்வி கற்க, தங்கிப் படிக்க, கல்விச் சாலைக்குச் சென்றுவர, புத்தகங்களை வாங்க என்று அனைத்திற்கும் சேர்த்தே கடன் வழங்கவேண்டும் என்று வங்கிகளின் தலைமையகங்கள் சுற்றறிக்கை விடுத்துள்ளன..
அவ்வாறு இருந்தும் கல்விக் கட்டணத்திற்கு மட்டுமே கடன் வழங்குவோம் என்றும், மொத்த செலவில் பாதிதான் கடனாக வழங்குவோம் என்று பல வங்கிக் கிளைகள் மாணவர்களை நிர்ப்பந்தம் செய்து வருகின்றன.
கல்வி கற்பதற்கான அனைத்துச் செலவுகளின் விவரத்தை அவர்கள் படிக்கும் கல்வி நிலையத்திலிருந்து, அதற்குரிய படிவத்தில் பெற்றுவந்து தரும் நிலையில், முழு அளவிற்கு கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அதன் தலைமை நிர்வாக அலுவலகங்கள் சுற்றறிக்கை அனுப்பிய பின்னரும் முழு அளவிற்கு கடன் வழங்கப்படாதது ஏன் என்று மாணவர்கள் குமுறுகின்றனர்.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகரங்களுக்கு வந்து தங்கள் மேல் படிப்பைத் தொடரும் மாணவர்கள் இங்குள்ள வங்கிகளில் கடன் கேட்டால், உங்களுடைய சொந்த ஊருக்குச் சென்று உங்கள் தந்தை கணக்கு வைத்துள்ள அதே வங்கியில் சென்று கடன் கேளுங்கள் என்று அனுப்பப்படுகின்றனர். அவர்கள் அங்கு சென்று கடன் கேட்கும்போது, விவசாயத்திற்காக உங்கள் தந்தைக்கும் கடன் தரவேண்டும், கல்விக்காக உங்களுக்கும் கடன் தரவேண்டும் என்று கேட்கிறீர்களே, உங்களுக்காக மட்டுமே இங்கு வங்கி இயங்கி வருகிறதா? என்றெல்லாம் ஒரு கிளையின் மேலாளர் பேசியுள்ளார். இறுதியில் கல்விச் செலவில் பாதிதான் கடனாகக் கிடைக்கும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தங்களின் விவசாயத் தேவைக்காக வங்கியை நம்பியிருக்கும் அந்தக் குடும்பம் பதில் பேசாமல் ஒப்புக்கொண்டு கடனிற்காக காத்து நிற்கிறது. இது நமக்கு (ஆதாரம் உள்ளது) தெரிந்த ஒரு மாணவரின் நிலை. இப்படிப் பல இடங்களில் நடக்கிறது.
பொது மக்கள் துவங்கும் வைப்புக் கணக்குகளினால் பெருகும் தொகையை தொழிலிற்கும், கல்விக்கும் கடனாக அளிப்பதில் வங்கிகள் ஏன் இப்படி பாராமுகம் காட்டுகின்றன என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட கடன்கள் கொடுப்பதனால் தங்களுக்கு எந்த ‘பயனும்’ கிட்டாததால் இப்படி நடந்துகொள்கின்றனரோ?
பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அளித்த கடன்கள் பல லட்சம் கோடி ரூபாய் வராக் கடனாக (Non Performing Assets - NPA) வங்கிகளில் உள்ள நிலையில், தங்களால் இயன்றவரை கடனைத் திருப்பிக்கட்டும் விவசாயிகளையும், படித்து முடித்தப் பிறகு கடனைக் கட்டும் தகுதியைப் பெரும் மாணவர்களுக்கும் கடன் வழங்க வங்கிக் கிளைகள் செத்த முகம் காட்டுவதுதான் புரியாத புதிராக உள்ளது.
இப்பிரச்சனையில் மத்திய நிதி அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு, மாணாக்கர் கடன் வழங்கலை முறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் இதுவே ஒரு பெரும் பிரச்சனைக்கு வித்திட்டுவிடும்.
Labels: . , நாட்டு நடப்பு
காய்கறி விலை கடும் உயர்வு!
காய்கறி வரத்து கணிசமாக குறைந்துள்ளதால் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது என்று சென்னை கோயம்பேடு காய்கறி சங்கத்தின் முன்னாள் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.
கர்நாடகா மாநிலம் கோலார், பெங்களூரு, மைசூர் ஆகியவற்றில் இருந்து காய்கறிகள் அதிகமாக சென்னைக்கு கொண்டு வரப்படும். முன்பு ஒரு நாளைக்கு 300 முதல் 200 லாரிகளில் காய்கறி வரும். தற்போது விளைச்சல் குறைவாக உள்ளதால் 100 முதல் 150 லாரிகள் மட்டுமே வருகின்றன. இதனால் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோஸ், இன்று பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேரட் விலை தாறுமாறாக விலை உயர்ந்துள்ளது. கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து இன்று 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் பீட்ரூட், சவ்சவ், நூக்கோல், முள்ளங்கி, வெள்ளரிக்காய், பீன்ஸ், கத்திரிக்காய், அவரைக்காய், புடலங்காய், வெண்டைக்காய், மிளகாய் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.
பழங்கள் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. சில பூக்கள் விலைகள் கனிசமாக உயர்ந்துள்ளது.
Labels: நாட்டு நடப்பு
வாழைக்காயின் மருத்துவ குணங்கள்!
அன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது வாழைக்காய் எனலாம்.
சமையலில் பெரும்பாலும் வாழைக்காயை வறுவல் செய்தும், பொறியல் செய்தும், கூட்டு செய்து சாப்பிடுவதுடன், சாம்பாரிலும் போட்டு சாப்பிடுவர்.
ஆனால், வாழைக்காயில் உள்ள மருத்துவ குணம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ வாழைக்காயின் மருத்துவ குணங்கள்...
வாழைக்காய்களில் பல வகைகள் இருந்த போதிலும், மொந்தன் எனப்படும் நாட்டு வாழைக் காய்களையே சமையலுக்காக பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். மற்ற வகை வாழைக்காய்களையும் சாப்பிடலாம். அவை பரவலாகக் கிடைப்பதில்லை.
வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதுடன், மாவுச்சத்தும் உள்ளது. எனவே வாழைக்காய் அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமனாகும். நல்ல வளர்ச்சியையும் அளிக்கும்.
வாழைக்காய் சாப்பிடுவதால், பசி அடங்கும். மேலும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் வழங்கப்படுகிறது.
வாழைக்காயின் மேல் தோலை மட்டும் மெலிதாகச் சீவியெடுத்து விட்டு உட்புறத் தோலுடன் சமைப்பதே சிறந்தது. அப்போதுதான் தோலில் உள்ள சத்துகள் உடலில் சேரும்.
வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது. வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்களைப் போக்க வாழைக்காய் ஏற்றதாகும்.
என்றாலும் வாழைக்காய் சாப்பிடுவதால், வாய்வு ஏற்படக்கூடும். எனவே வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் வாழைக்காயை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம். அல்லது தவிர்க்கலாம்.
அதேபோல், வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றது. என்றாலும், மலத்தை இறுக்கி விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி, மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.
Labels: மருவத்துவ செய்திகள்
கருணாநிதிக்கு விஜயகாந்த் ஆலோசனை
அம்பத்தூர்: மக்கள் பிரச்னையில் இனியும் ஆளுங்கட்சியினர் ஏமாற்ற முடியாது என்று, தனது கட்சித் தொண்டரின் இல்ல விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆவேசப்பட்டார். சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமில் தே.மு.தி.க., கட்சி தொண்டரின் இல்ல விழா தொடர்பாக, நேற்று காலை நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, சட்டம் ஒழுங்கை, காக்க வேண்டிய துறையில் பணிக்கு சேருவதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை நீடிக்கிறது. எஸ்.ஐ., பதவிக்கு மூன்று லட்ச ரூபாய், இன்ஸ்பெக்டர் பதவிக்கு ஐந்து லட்ச ரூபாய் என்று லஞ்சம் கொடுத்தால்தான் பணிக்கு வர முடிகிறது. அப்படி லஞ்சம் கொடுத்து வருபவர்கள் சரியாக கடமையைச் செய்ய முடியுமா? மேல் மட்டத்திற்கு தாங்கள் கொடுத்ததை மீட்க, தங்களிடம் சிக்குபவர்களிடம் கிடைத்தவரை "கறந்து' விடுகின்றனர். நான் அன்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்ததை, தமிழக முதல்வர் இன்று திட்டமாக அறிவித்து வழங்கிக் கொண்டிருக்கிறார். ரேசன் பொருள் வீடு தேடி வரும் என்று நான் அறிவித்தேன். அதன் எதிரொலியாக இன்று ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு 10 மளிகை பொருட்கள் என்று மக்களுக்கு அளிக்க துவங்கி உள்ளார். தேர்தலுக்காக இன்னும் இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் நிலைக்கு அவர் ஆளாகிவிட்டார்.
இலங்கை தமிழரின் பாதுகாப்பு பிரச்னையில் ""நான் கூட்டணியில் இருந்து வாபஸ் வாங்குவேன்'' என்று பிரதமருக்கு ஒரு போன் செய்தால் போதும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இலங்கை தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள். ஆனால் அதை விட்டு, லட்சக்கணக்கில் தந்தி கொடுங்கள் என்று உத்தரவிடுகிறார். இது தமிழக மக்களையும் ஒட்டு மொத்த தமிழர்களையும் ஏமாற்றும் வேலை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை அவர்களின் ஏமாற்று வேலை தொடர்ந்தது. இனி நாங்கள் வந்து விட்டோம். யாரையும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
Labels: நாட்டு நடப்பு
பெய்தும் கெடுக்கும
டந்த வாரத்தில் ஒரிசா, அசாம், மேற்குவங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெய்த தென்மேற்கு பருவமழையால் சுமார் 360 கிராமங்களில் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ரயில் பாதைகள், தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரிசாவில் ஜலேகா, பாலாசூர் உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது.
இயற்கையின் வரப்பிரசாதமான மழை அதிகம் பெய்தும் கெடுக்கும்; பெய்யாமலும் கெடுக்கும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட வறட்சியான மாநிலங்களின் விவசாயிகள் பயிரிடவும் பயிர்களை காக்கவும் இன்றும் வானத்தையும், நதிகளையும் வெறித்து பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அளவுக்கு மீறி பெய்யும் பருவ மழையால் அஸ்சாம், ஒரிசா, மேற்கு வங்க மாநிலங்களில் வெள்ளப்பெருக்கால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் சேதமடைகின்றன.
நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சில சமயங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட வறட்சியான மாநிலங்களில் பெய்யும் அளவுக்கு அதிகமான மழை, தேக்கி வைக்க இடம் இல்லாததால் தேவையில்லாத சேதங்களை ஏற்படுத்திவிட்டு யாருக்கும் பயனில்லாமல் கடலில்தான் விழுகிறது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆறுகளான கங்கை, யமுனா, பிரம்மபுத்திரா, நர்மதை, கோதாவரி, காவேரி உள்ளிட்ட பல்வேறு கிளை நதிகள், மற்றும் பருவமழை மூலம் இந்திய துணை கண்டத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 1869 பில்லியன் கியூபிக் மீட்டர் நீர் கிடைக்கிறது. ஆனால் இதில் நாம் 40 சதவீத நீரை மட்டும்தான் பயன்படுத்த முடியும். மீதியுள்ள சுமார் 60 சதவீத நீர் வெள்ளசேதத்தை ஏற்படுத்திவிட்டு வீணாக கடலில் கலக்கிறது.
2000ம் ஆண்டு பெய்த பருவமழையால் ஏற்பட்ட சேதமதிப்பு ரூ. 13,110 கோடி என சி.டபுள்யூ.சி தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வெள்ளத்தால் சேதமடைவதாகவும் அதன் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஏற்படும் வெள்ள சேதத்தை தடுக்க ஒரே வழி தேசிய நதிகளை இணைக்கும் திட்டம்தான்.
இமயமலைத் தொடரில் இருந்து வருடம் முழுவதும் தண்ணீரை கொண்டு வரும் கங்கை, யமுனா, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளை, பருவமழையை மட்டுமே நம்பியுள்ள காவேரி, கேதாவரி, கிருஷ்ணா போன்ற நதிகளுடன் இணைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு அதிக சாத்தியக்கூறு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆறுகள் மூலம் குளம், ஏரிகளை இணைத்து அனைத்து கிராமங்களிலும் முப்போகம் விளைய வைத்தால் இந்தியா உணவு உற்பத்தியில் மட்டுமல்லா அனைத்து துறைகளிலும் உண்மையாக ஒளிரும்.
தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் ஆங்கிலேயர் காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. 1839ம் ஆண்டு ஆர்தர் காட்டன் என்பவர் முதன்முதலில் விரிவான திட்டத்தை தயார் செய்தார். பின் 1972ம் ஆண்டு டாக்டர் கே.எல். ராவ் என்பவர் 2640 கிலோ மீட்டர் நீளத்திற்கான கங்கை காவேரி இணைப்பு குறித்து பரிந்துரை செய்தார். 10 லட்சம் ஹெட்டேர் நிலம் நீர்பாசன வசதி பெறும் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 12,500 கோடி செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டிருந்தது.
சில ஆண்டுகளில் கேப்டன் தஸ்தூர், ஹிமாலயக் கால்வாய் மற்றும் பூமாலைக்கால்வாய் என்ற இரண்டு திட்டங்கள் மூலம் தென்னக, வட இந்திய நதிகளை இணைக்க மதிப்பீடு செய்தார். 13,500 கி.மீட்டர் கால்வாய் மூலம் இந்திய நதிகளை இணைக்கும் போது பெறப்படும் பலன்கள் குறித்து சி.டபுள்யூ.சி யுடன் (சென்டர் வாட்டர் கமிஷன்) இணைந்து பல்வேறு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சர்வே பணியில் ஈடுபட்டனர். இத்திட்டத்தை செயல்படுத்த ஆயிரக்கணக்கான கோடிகள் செலவானாலும், மின் உற்பத்தி, போக்குவரத்து, வெள்ள சேதம் ஆகியவற்தை கணக்கிடும்போது சில வருடங்களிலேயே செலவுத்தொகையை பெறமுடியும் என சர்வேயில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், நடைமுறை சிக்கல், செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
ஆனால், இன்று நாம் வீணாக்கும் தண்ணீர் எதிர்காலத்தில் நிச்சய தேவையாக மாறுகிறது.
இந்திய மக்கள் தொகை 2050ல் 150 முதல் 180 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் 2000 லட்சம் டன் தானிய உற்பத்தியை 4500 லட்சம் டன்னாகவும், 1400 லட்சம் ஹெட்டேர் விளை நிலத்தை 1600 லட்சம் ஹெட்டேராகவும் மாற்ற வேண்டியுள்ளதால் நீரின் தேவை மிகவும் அவசியமாகிறது.
இந்தியாவிற்கு 2050ஆம் ஆண்டில் குடிநீர், பொதுமக்கள் உபயோக தேவைக்கு மட்டும் ஆண்டுக்கு 102 பிசிஎம் (பில்லியன் கியூபிக் மீட்டர்) தண்ணீர் தேவைப்படும். விவசாயத்திற்கு 1072 பிசிஎம் தண்ணீரும், தொழிற்சாலைகளுக்கு 63 பிசிஎம் தண்ணீரும் மற்றவைகளுக்கு 210 பிசிஎம் என 1447 பிசிஎம் தண்ணீர் தேவைப்படுவதாக சி.டபுள்யூ.சி. சர்வே தெரிவித்துள்ளது. எனவே நதிநீர் இணைப்பு திட்டத்தை தற்போது ஒத்தி வைத்தாலும் எதிர்கால நோக்கில் தவிர்க்கமுடியாது.
அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் தங்கள் நாட்டில் வெள்ளத்தை ஏற்படுத்திய நதிகளை மற்றொரு நதிகளுடன் இணைத்து நீர்வழிப் போக்குவரத்தையும் பாசன வசதியையும் ஏற்படுத்திக்கொண்டு தன்னிறைவு அடைந்துள்ளன.
இந்தியா 2020 ல் வல்லரசாகும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு தேசிய நதிகளை இணைப்பதன் மூலமே நனவாகும்.
நதிகளை இணைப்பின் முக்கிய பயன்கள்
1. வறட்சியில் இருந்து பெரும்பாலான மாநிலங்களை காப்பாற்ற முடியும்.
2. வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் வெள்ள சேதத்தை தடுக்க முடியும்.
3. குடிநீர் பற்றாக்குறை தீரும்.
4. போக்குவரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட தூரங்களுக்கு செல்லும் சரக்குகளை குறைந்த செலவில் அனுப்ப முடியும். கடல் பயணங்களுக்கு உறுதுணையாக விளங்கும்.
5. மீன் பிடி தொழில் உள்ளிட்ட வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
6. சுற்று புற சூழல் பாதுகாக்கப்படும்.
7. நாட்டின் உள்கட்டமைப்புகள் வளர்ச்சி பெரும்.
8. நதியோரங்களில் உள்ள கிராமங்கள் வளர்ச்சிபெறும்.
9. 30 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி.
10. விவசாய நிலங்கம், வனப்பகுதிகளை அதிகரிக்கலாம்.
தமிழகத்தின் சிறப்பு
கி.பி. 905-920ம் ஆண்டில் பாண்டிய மன்னன் ராசசிம்மன் காலத்தில்தான் முதல் நதிநீர் இணைப்பு நடந்துள்ளது. வைகை நதியையும் சருகணியாற்றையும் ராசசிங்கமங்கலம் ஏரிமூலம் இணைத்துள்ளான். 1895ம் ஆண்டு கட்டப்பட்ட பெரியாறு திட்டமே உலகில் முதலாவது பெரிய நதிநீர் இணைப்புத்திட்டமாக கருதப்படுகிறது. இதே போல், பாலாறும் கொற்றையாறும் காவிரியும் வெள்ளாறும், கோதையாறும் பழையாறும் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்திரமாநிலம் காக்கிநாடாவில் இருந்து தமிழகத்தின் மரக்காணம் வரை வெட்டப்பட்ட பக்கிங்காம் கால்வாய் 1878 ஆண் ஆண்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இது தேசிய நீர்வழிப்பாதை 4 என்று அழைக்கப்பட்டது. தற்போதும் ஆந்திராவின் வெள்ளவடிகாலாக இக்கால்வாய் உள்ளது.
கட்டுரையாளர் : திரு.தரணிபாபு
பி.எப் பணம் : 29,000 கோடி தனியாருக்கு தாரை வார்ப்பு
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) அமைப்பிடம் குவிந்துள்ள நிதியில் ரூ.29 ஆயிரம் கோடி மட்டும், தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு தரப்பட உள்ளது.
இந்த பணத்தை எச்எஸ்பிசி, ஐசிஐசிஐ புரூடென்சியல், ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் கேப்பிட்டல் ஆகிய சொத்து மேலாண்மை நிறுவனங்கள் ஆகியவை நிர்வகிக்க உள்ளன. பி.எப். பணத்தை இந்நிறுவனங்கள் பங்குச் சந்தை மற்றும் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளன.
இந்த 4 நிறுவனங்களில் ரிலையன்ஸ் தவிர மீதியுள்ள 3 நிறுவனங்களை கிரைசில் அமைப்பு தேர்வு செய்திருந்தது. ரிலையன்ஸ் கடைசியாக சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் ரூ.29 ஆயிரம் கோடியை இந்நிறுவனங்களுக்கு தரும் பணி திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது. ஒரே நாளில் இவ்வளவு பணத்தையும் தர முடியாது என்பதால், அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் பெரிய தொகையை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணத்தை பெற்ற அதே நாளில், இந்த 4 நிறுவனங்களும் முதலீடு செய்ய வேணடியது கட்டாயம். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எவ்வளவு பணம் தரப்படும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
Labels: நாட்டு நடப்பு



