தமிழகச் சாலைப் பாதுகாப்புக் குழுவின் அறிக்கை ஒன்று தமிழகத்தில் 2006-ஆம் ஆண்டு மட்டும் 11,000 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலைத் தந்துள்ளது.
2007 ஆம் ஆண்டு இதைவிட 10 சதவிகிதம் அதிகம் இருந்திருக்கும் என்கிறது.
இந்த உயிரிழப்புகள் குறைய வேண்டுமானால் இவ்விபத்துகளை ஆய்வுக் கோணத்தில் அணுக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனலாம்.
ஒவ்வொரு சாலை உயிரிழப்பும் காரணம் அறியப்பட்டு அந்தந்தக் காவல்துறை அதிகாரிகளால் இதைத் தவிர்க்கவோ குறைக்கவோ என்ன செய்யலாம் என்று அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லலாம்.
மேலைநாடுகளில் அனைத்து விபத்துகளையும் கவனக் குறைவுகளின் கீழ் அடக்கி கோப்பைக் கட்டிப் பரணில் போட்டுவிடாமல் நன்கு ஆராய்கிறார்கள்.
வருங்காலத்தில் நடக்காதிருக்க என்ன செய்யலாம் என்று தொடர்புடைய துறை அதிகாரிகளை அழைத்து விவாதிக்கிறார்கள்.
தீர்வுகளை, ஆலோசனைகளைச் சமர்ப்பித்து, உயிரிழப்புகளைத் தடுக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.
இங்கோ உயிர்களின் விலை மிக மலிவு. ஓட்டுநர் உரிமங்கள் விலைக்குக் கிடைக்கின்றன. போதுமான காவல்துறை அதிகாரிகள் இல்லாமை; பழுதடைந்த சாலைகள்; போக்குவரத்துக் காவல்துறையில் கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை உள்ள கையூட்டுகள்; குடிப்பழக்கத்திற்கு இங்கு விதிக்கப்படும் எளிமையான தண்டனைகள் என இன்னும் பல காரணங்களால் சாலை விபத்துகளின் எண்ணிக்கைகள், வாகனங்களின் எண்ணிக்கைகளைப் போலவே கட்டுபாடு இல்லாமல் பெருகி வருகின்றன.
சென்னைப் புறநகரில் மட்டும் நாள் ஒன்றிற்கு 2000 வாகனங்கள் சாலையில் இறங்குகின்றனவாம்.
இவையெல்லாம் எங்கு போய் முடியும்?
பாகிஸ்தானியச் சிறையில் சிக்கிக் கொண்ட ஓர் இந்தியருக்காகப் பிரதமர் உட்பட மெனக்கெடுகிறார். இவராவது தீவிரவாதக் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருப்பவர்.
ஆனால் தமிழகத்தில் இறக்கும் ஆயிரமாயிரம் உயிர்கள் என்ன பாவம் செய்தன?
சம்பந்தப்பட்ட பல்துறைகளும் கைகோர்த்தால் வரும் வருடமே, குறைந்தபட்சம் உயிரிழப்புகளைப் பாதியாக்கிவிட முடியும்.
பாதிப்புகளைப் பாதியாக்கலாம்!
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, December 3, 2008

0 comments:
Post a Comment