இவர் மனத்தில் என்னதான் இருக்கிறது என்று ரஜினியைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் ஒரு நினைப்பு ஏற்பட்டபடி இருந்தது. இதற்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.
தம் இரசிகர் மன்றப் பொறுப்பாளர்களை இராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தையே இப்படிக் குறிப்பிடுகிறேன். ரஜினி பாணியிலேயே சொல்வது என்றால் லேட்டானாலும் லேட்டஸ்டாக வந்துவிட்டார்.
மனிதர் திருவாய் மட்டுமா மலர்ந்தருளினார்? உள்ளத்தையல்லவா திறந்து கொட்டிவிட்டார்.
இரசிகர்களைச் சந்திக்காமல் தவிர்த்து வந்த ரஜினி, இனி அவர்களுக்கு அடிக்கடி தரிசனம் தருவார் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இரசிகர்களின் ஒரு சிறு விருப்பத்தைக்கூட நிறைவேற்றாமல் ஒரு நாயகர் நடந்துகொண்டது முறை அல்ல.
ரஜினியிடம் அவரது ரசிகர்கள் இரசிக்கும் விஷயங்கள் பல. இவரது ஒவ்வோர் அசைவையும் இரசிப்பார்கள். ஆனால் வெளிமனிதர்கள் பலரும் இரசிப்பது, ரஜினியின் போலித்தனமில்லாத வெளிப்படையான பேச்சு.
இதுதான் ராகவேந்திரா மண்டபத்திலும் நிகழ்ந்திருக்கிறது. எவரும் கண்டதையும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்பே கேள்விகளை எழுதி வாங்கி அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இந்தச் சந்திப்பு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
தன் பிறந்தநாளின்போது ஏன் இரசிகர்களைச் சந்திப்பதில்லை என்பதற்கான விளக்கம் அவ்வளவாக ஏற்கும்படி இல்லாவிட்டாலும் இது ஒரு தனி மனித விருப்பம் என்ற வகையில் இதனை நாம் அதிகம் விமர்சிப்பதற்கில்லை.
அரசியலைப் பொறுத்தவரை விடை கிடைத்துவிட்டது. ரஜினிக்கு நாட்டை ஆளும் ஆசை இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்திற்காகக் கைகட்டிக் கொண்டு காத்திருக்கிறார். தமிழகத்தில் அரசியலில் பெரிய வெற்றிடம் ஒன்று வரப்போகிறது. அப்போது அந்த இடத்தை நிரப்ப முன்வருவார் என்பது அவர் பதிலுக்குள் அடங்கியிருக்கும் விளக்கமாகப் படுகிறது.
பண உதவிகளை எதிர்பார்த்த இரசிகர்களுக்கு ரஜினி நன்கு குட்டு வைத்திருக்கிறார். தியாக உணர்வும் தன்னலமற்ற போக்கும் தம் இரசிகர்களுக்கு வேண்டும் என்கிற மறைமுகச் செய்தியைப் பதித்து இந்தச் செய்தியை அழகுறச் சொல்லியிருக்கிறார். ரஜினி இரசிகர்களின் சந்திப்பிலேயே அடிக்கோடிட வேண்டிய இரண்டு செய்திகள், என்னைப் பொறுத்த அளவில் மிகப் பிடித்திருக்கின்றன.
கேள்வி நேரத்தின்போதும் சரி, கேள்வி நேரத்திற்குப் பிறகு ரஜினி ஆற்றிய உரையின்போதும் சரி, ரஜினி வலியுறுத்தியும் வற்புறுத்தியும் சொல்லியிருக்கும் கனமான இரு விஷயங்கள், ‘கடமையைப் பாருங்கள். உங்கள் தாய் தந்தை குடும்பத்தைக் கவனியுங்கள்’ என்பதுதான்.
தமிழக இரசிக மன்றங்கள் எப்போதுமே ரொம்ப ஓவர். நடிகைக்குக் கோயில், கட்-அவுட்டுக்குப் பால் அது இது என்று ரொம்பத்தான் அலட்டிக் கொள்வார்கள்.
தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் தடை போட்டு, அவசியமான விஷயங்களை வலியுறுத்தியிருக்கும் இந்தச் சந்திப்பு, ரஜினி போட்டுக்கொடுத்திருக்கும் தங்கத் தடம் என்பேன்!
ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, December 3, 2008

0 comments:
Post a Comment