தமிழுக்கு, தமிழருக்கு ஓர் ஊறு என்றால் அதுபற்றி முதல் குரல் கொடுப்பவர் நம் தமிழக முதல்வர் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
ஆனால் இலங்கைத் தமிழர் விஷயத்தில் கருணாநிதி எடுத்த நிலைப்பாடு விவாதத்திற்குரியது.
“யாருக்குப் பாதிப்பு வரும் யாருக்குப் பாதிப்பு வராது என்று நான் சிந்திக்கவில்லை” என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது முதல்வர் தந்துள்ள வாக்கு மூலம் கூர்ந்து ஆராயத்தக்க ஒன்று. தம்மையறியாமல் கூறிய உண்மை இது எனலாம்.
இந்திய இறையான்மை என்பது இந்திய எல்லையோடு முடிந்துவிடக்கூடிய விஷயம். இலங்கையின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உள்ள வட்ட எல்லைக்குள் இந்தியா அவ்வளவு சுலபத்தில் தலையிட்டுவிட முடியாது.
இதை உணர்ந்துதான் நம் பிரதமர் மன்மோகன்சிங், தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா அறிவிப்பிற்கு, எதிர்பார்த்த அளவிற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் நிதானமாகவே செயல்பட்டு, “இலங்கை நிலவரம் எனக்குக் கவலை தருவதாக உள்ளது” என்று மட்டும் தம் அக்கறையைத் தெரிவித்திருக்கிறார்.
தங்கள் அறிவிப்பைக் கேட்டு மத்திய அரசு அலறும் என்று எதிர்பார்த்த தி.மு.க. கூடாரத்திற்கு இது பெரும் ஏமாற்றமளித்திருக்கும். இலங்கை அரசு நிகழ்த்துவது புலிகளுக்கு எதிரான யுத்தமே தவிர, அப்பாவித் தமிழர்களுக்கு எதிரதானதல்ல. அப்பாவித் தமிழர்களைப் பாதுகாப்பு வளையமாகப் பயன்படுத்துபவர்கள் புலிகளே என்கிற ஜெயலலிதாவின் கருத்தும் இந்த இடத்தில் எண்ணிப் பார்க்கத்தக்கது.
தமிழகத்தின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்து, மத்திய அரசைக் கவிழ்ப்பதன் மூலமாக தி.மு.க. என்ன சாதிக்க நினைக்கிறது? அடுத்த தேர்தல் வருமுன் இலங்கைத் தமிழர் நலனைத் தட்டிக் கேட்க யார் பதவியில் இருப்பார்களாம்? குடியரசுத் தலைவர் திருமதி. பிரதிபாபட்டீல் நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்ன அரசியல் கண்க்கீடு இது?
ஓர் அரசியல் சாணக்கியர் எடுத்த சறுக்கலான முடிவல்லவா இது! அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் இந்தியா எப்படித் தலையிட முடியும் என்கிற பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்குத் தமிழக முதல்வர், “பின் பங்களாதேஷ் எப்படித் தோன்றியதாம் என்று பதிலளித்திருப்பது சற்றும் பொருத்தமில்லை.”
கிழக்குப் பாகிஸ்தானின் (பங்களாதேஷ்) நிலைமைகள் முற்றிலும் வேறு. கிழக்கு பாகிஸ்தானை ஆண்ட முஜிபுர் ரகுமானே இந்தியாவைத் தலையிடுமாறு கேட்டுக் கொண்டதை உலகமே அறியும்.
இந்நிலையை எப்படி இலங்கை நிலையோடு ஒப்பிட முடியும்?
இதனால்தான் உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகாமல் இந்தியா தப்பிப் பிழைத்தது. இது அந்நியத் தலையீடல்ல என்பதால்தான் இந்திராவும் உலக அளவில் சிறந்த தலைவியாக ஏற்றக் கொள்ளப்பட்டார்.
இலங்கைத் தமிழர் நலன் காக்கத் தமிழக முதல்வர் மத்திய அரசிடம் முன்வைக்கும் எந்த ஒரு கோரிக்கையும் அக்கறையுடன் கூடிய நல்ல நடவடிக்கையாகவே பாராட்டப் பெறும். ஆனால் இராஜினாமா என்கிற அச்சுறுத்தல் ஒட்டுமொத்த இந்திய நலன்களையே பாதித்துவிடக்கூடியது.
எந்த நோக்கத்திற்காக இதில் தி.மு.க. இறங்கியதோ அதுவும் நிறைவேறாமல் போய், இந்திய நலன்களும் பாதிக்கப்படுகிற ஒரு செயலை ஒரு தோழமைக் கட்சியா செய்வது? ஜீரணிக்கத்தான் முடியவில்லை.
ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, December 3, 2008

0 comments:
Post a Comment