உடன்பயிலும், நண்பர்களை உடன்பிறந்தவர்களுக்கும் மேலாக நேசிப்பதுதான் உலகம் எங்கும் வழக்கமாக இருக்கிறது.
ஆனால், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள், சகமாணவர்களை, மரக்கட்டைகளால் அடித்துத் துவைத்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டபோது மனம் பதைக்காதவர்கள் குறைவு.
அதுவும், இந்தக் காட்சிகளை வடஇந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் காட்டியபோது தமிழகத்தின் மானமே காற்றில் பறப்பது போன்ற உணர்ச்சியே ஏற்பட்டது.
காவல்துறை இந்த விஷயத்தில் கையாலாகாத துறையாகச் செயல்பட்டதைப் பற்றிய விவகாரத்திற்குள் நான் நுழைய விரும்பவில்லை. நான் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்கிற கோணமே வேறு.
மீண்டும் ‘சட்டக் கல்லூரி திறக்கப்படும்போது பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் பாதிப்பை ஏற்படுத்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் ”என்ன மச்சி! எப்படி இருக்கே?” என்று பேசிக் கொள்கிற அளவுக்கு நேசம் காட்டாவிட்டாலும் நீறு பூத்த நெருப்பாக வெறுப்பை உள்ளுக்குள் வைத்துக் கொள்ளாதிருக்க என்ன செய்யப்பட வேண்டும் என்பதில்தான் என் அக்கறை நீள்கிறது.
ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இன்னமும் கூட இவர்களது கைத்தொலைபேசி வழியே மிரட்டலான குறுஞ்செய்திகள் வருகின்றன என்பதுதான் சற்றுக் கலக்கம் தரும் செய்தியாக இருக்கிறது. அடித்தவர்கள்மீது நடவடிக்கை; அடித்தவர்களைப் பார்த்துக்கொண்டு கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் மீது நடவடிக்கை என்பவையெல்லாம் சட்டச் சம்பிரதாயங்கள்.
ஆனால், இனிச் சட்டக் கல்லூரி வளாகத்தில் நல்லுணர்வும், புரிந்துணர்வும், இனிய சூழலும் ஏற்படுத்த சட்டக் கல்லூரி நிர்வாகமும், சமூக அக்கறை கொண்ட அமைப்புகளும், சமூகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், அரசும் கூட்டாக இணைந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய, செயல்பட வேண்டிய அத்தியாவசியத் தேவை இருக்கிறது.
நல்லவேளையாக, பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் இந்த விஷயத்தில் வெளிப்படையாக மாணவச் சமுதாயத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயலை இக்கணம் வரை மேற்கொள்ளவில்லை.
ஒரு வேளை இது நீறுபூத்த நெருப்பாக நடக்கிறதா என்பதைப் புலனாய்வு செய்ய வேண்டிய அவசியமும் காவல்துறைக்கு இருக்கிறது.
சட்டக் கல்லூரி திறக்கப்படும் முன் இரு சமூகத்தவரிடையே சமூகச் சூழலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் வீரியத்தையும் ஆழத்தையும் உணராமல் சட்டக் கல்லூரி நடந்துகொண்டால் இதன் தொடர்விளைவுகள் பிற தமிழகக் கல்லூரிகளிலும், ஏன் கல்லூரிக்கு வெளியேயும்கூட நிகழந்துவிடலாம்.
இத்தகைய கலவர வெடிப்புகளைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இன்று தமிழகத்திற்கு இல்லை.
தமிழக அரசு இந்த விஷயத்தில் இனியும் மெத்தனம் காட்டுவது கூடாது!
தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, December 3, 2008

0 comments:
Post a Comment