கருணாநிதி, ஜெயலலிதாவின் வரிசையில் வைத்து எண்ணப்படும் தமிழக அரசியலின் புதிய விடிவெள்ளியான விஜயகாந்த் மிகவும் தரம் தாழ்ந்து பேசியிருப்பது ஏமாற்றம் தருவதாக உள்ளது.
இவரது பேச்சின் சில பகுதிகளை உங்களுக்கு அப்படியே தந்திருக்கிறேன்.
”கலைஞர் இன்றைக்குத் தன்னோட டி.வி.யில் என்ன சொல்றாரு? ‘தமிழர்களே… தமிழர்களே… நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன். அதில் நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்துவிட மாட்டேன்’னு பேசறாரு… யோவ் நீ கவிழமாட்டே… மக்கள்தான் கவுந்து போவாங்க. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் தமிழ், தமிழர்கள்னு சொல்லி மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கப்போறே? நான்கு முறை முதல்வரா இருந்து கொள்ளையடிச்சது போதாதா? வயசான காலத்துலேயும் இன்னும் பதவிவெறி, பணவெறியோடு ஏன் அலையிறே? போகும்போது எல்லாத்தையும் கொண்டா போகப்போறே? செத்துட்டா இடுப்புல கட்டியிருக்கிற அரணாகயிறு கூட மிஞ்சாது.
‘மதுரை தினகரன் அலுவலகத்தில் நடந்த மூன்று கொலைக்குக் காரணம் உன் மகன் தானாமே?’ என்று டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் கேட்ட போது அவர் மீது கோபப்பட்டு எழுந்து போனே. ஏன்யா, உன் பிள்ளை உயிருன்னா உனக்கு அவ்வளவு முக்கியம். இங்கே நடுக்கடல்ல சாகுற மீனவர்கள்னா அவ்வளவு இளப்பமா?”- தம் ஆதரவாளர்களையே நெளிய வைக்கும் பேச்சு இது.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்தியில் ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் பேசியிருந்தால் அதை யாரும் குறை சொல்லிவிட முடியாது.
ஆனால் இந்தப் பேச்சோ இரத்த நாளங்களைச் சூடேற்றுகிற பேச்சு.
இப்பேச்சு இவரது அரசியல் வெண்சட்டையில் வீசப்பட்ட அப்பட்டமான கறை என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
இந்தப் பேச்சினை ஆதாரமாகக் கொண்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க இயலும். ஆனால் ஆட்சியில் இருப்பவர் கெட்டிக்காரர். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறது என்றால் அந்தப் பாதிப்பே போதும்; நாம் வேறு ஏன் கைது செய்து இவரை மேலும் பிரபலமாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய புத்திசாலி.
அரசியலில் முதன்மை பெற எத்துணையோ வழிமுறைகள் உண்டு. இவற்றுள் முக்கியமானது மேடைக் கண்ணியம்.
எம்.ஜி.ஆரைப் பின்பற்றுவதாகச் சொல்லும் விஜயகாந்த் எம்.ஜி.ஆரால் பேசப்பட்ட இப்படிப்பட்ட கண்ணியக் குறைவான பேச்சிற்கு ஒரு முனனுதாரணத்தையாவது காட்ட முடியுமா?
ஒரு 86 வயதுப் பெரியவரை ‘நீ’ ‘வா’ ‘போ’ என்று பேசுவது எந்த வகையில் சரி? அவரது மறைவைப் பற்றி விமரிசிப்பதையும் எப்படி நியாயப்படுத்த இயலும்.
மேலும் ”நடுக்கடலுக்குச் சென்று கடல் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றைத் தொடங்குங்கள். உங்களோடு நானும் ஒரு படகில் ஏறி சாகும்வரை நடுக்கடலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத் தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசை மட்டும் அல்ல… இலங்கையை ஆளும் அராஜக ராஜபக்சே அரசையும் நம் போராட்டத்தால் ஸ்தம்பிக்க வைப்போம்” என்றும் விஜயகாந்த் பேசியுள்ளார்.
அது சரி, இலங்கை அரசை எப்படி ஸ்தம்பிக்கச் செய்யப் போகிறாராம்? நடுக்கடலில் முகாமிட்டுப் போராட்டம் நடத்தினால் இலங்கை அரசு ஸ்தம்பித்துவிடுமா? எப்படி?
விஜயகாந்த் அரசியலில் வெற்றி பெறவும், பக்குவப்படவும் இன்னும் வெகுகாலம் ஆகும் போலிருக்கிறது!
விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, December 3, 2008

0 comments:
Post a Comment