தமிழக நலன்களை வேரோடு அசைத்துப் பார்க்கவல்ல கொடிய அரக்கனாம் மின்வெட்டைச் சீர் செய்ய முதல்வரும், மின்துறை அமைச்சரும் உயர் அதிகாரிகளும் சேர்ந்து எடுத்துள்ள சில நல்ல முடிவுகள் வரவேற்கத்தக்கனவாகவும் ஆறுதல் அளிப்பனவாகவும் இருக்கின்றன.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட இருக்கும் மின் திட்டங்களுக்கு நன்கு ஊக்கமளிப்பது என்கிற தமிழக அரசின் முடிவு நெடுநாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருக்க வேண்டிய முடிவு. Better late than never என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
இல்லாமல் போனைதைவிடக் கால தாமதம் பரவாயில்லை என்கிற இந்தக் கருத்தின் அடிப்படையில் மின்துறையின் பார்வை இப்போதாவது கடைக்கண் திறந்திருக்கிறது.
ஜுரோஸ் இன்ஜினீயரிங் என்ற நிறுவனம் தமிழகத்தின் ஸ்பிக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுக்க நிறையத் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்க இறங்கியது.
நம் அரசுகளின் சிவப்பு நாடா முறைகளால் இம்முயற்சிகள் முடங்கிப் போயின.
இப்போது தனியார் வடகொரிய நிறுவனம் ஒன்று ஓர் அணுமின் நிலையத்தை உருவாக்க முன்வந்திருக்கிறது. உலக அளவில் ஏற்கெனவே 12 அணுமின் நிலையங்களை நிர்மாணித்த மிகுந்த முன்னனுபவம் கொண்ட நிறுவனம் இது.
தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தமிழக அரசு ஒரு நற்செய்தியைத் தந்துள்ளது. நீங்கள் உற்பத்தி செய்யும் உபரி மின்சாரத்தைத் தொழில் நிறுவனங்களுக்கு நேரிடையாக விற்பனை செய்யலாம் என்பதே இந்த நற்செய்தி.
ஒரு யூனிட்டுக்கு அரசு கொடுக்கும் விலை வேறு, தனியார் நிறுவனங்கள் தர முன்வரும் விலை வேறு.
இந்த அணுகுமுறை பல தனியார் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தனியார் நிறுவனங்கள் இனி ஜெனரேட்டர்கள் வாங்க 25 சதவிகித மானியம் வழங்குவது என்பது அற்புதமான முடிவு.
ஜெனரேட்டர்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் நல்ல முயற்சி இது. ஆனால் டீசல் தட்டுப்பாடு நிலவுவதும், டீசலை வாகனத்தில் ஊற்றுவதைத் தவிர கைகளில் தனியே கேன்களில் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எண்ணெய் விநியோக நிறுவனங்கள் பிடிவாதம் பிடிப்பதும் கவனிக்கப்படட வேண்டிய விஷயங்கள்.
மின் உற்பத்தியைப் பற்றிப் பல சிறுதொழில் அதிபர்கள் தெளிவான பார்வைகளோடும், ஏராளமான அரிய யோசனைகளோடும் காத்திருக்கிறார்கள். இவர்களைத் துறைச் செயலர்கள் அளவில் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டியது இன்றையச் சூழலில் அவசியம்.
இயற்கை பொய்க்கிறபோது செயற்கை தலைதூக்க வேண்டிய அவசியம் இருக்கிறது
மின் துறையின் முனைப்பின் அவசியம்!
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, December 3, 2008

0 comments:
Post a Comment