சென்னையில் மறியற் போராட்டம் நடத்திய ம.தி.மு.க பொது செயலாளர் திரு. வை.கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் திரு. வை. கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பிரச்சினையில் இந்திய அரசு, அந்நாட்டு அரசிற்கு உதவி வருவதை கண்டித்தும் ம. தி. மு. க சார்பில் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியில் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் மறியலுக்கு முன் சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி அருகேயிருந்து ஊர்வலம் புறப்படும் என்றும் தெரிவிக்கபட்டது.
இதனால் காலையில் இருந்தே இன உணர்வாளர்களும், கட்சியினரும் ஏராளமானோர் திரண்டனர். இந்த மறியல் போராட்டத்திற்கு கட்சியின் பொது செயலாளர் திரு. வை. கோ தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு.பழ. நெடுமாறன் கூட்டத்திற்கு வந்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திரு. முத்துசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய திரு. வை. கோ இப்பிரச்சினையில் தமிழக அரசும், இந்திய அரசும் துரோகம் இழைத்து வருவதாக குற்றஞ்சாட்டினார். தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்து வரும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசு இராணுவ உதவி வழங்கிட கூடாது என்றும், சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அங்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க மறுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான எனது நிலை தொடரும் என்றும், அவர்களது சுதந்திர போராட்டத்தை ம.தி.மு.க தொடர்ந்து ஆதரிக்கும் என்று தெரிவித்தார். பின் பேரணியாக புறப்பட்டு, மத்திய அரசு அலுவலகம் முன்பாக மறியல் ஆர்பாட்டம் செய்ய முயன்ற போது, பொலீஸார் அவரையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவரது கட்சி தொண்டர்களையும் கைது செய்தனர்.
சென்னையில் மறியற் போராட்டம் நடத்திய ம.தி.மு.க பொது செயலாளர் திரு. வை.கோ கைது
Posted by
தமிழ்க்குமரன்
Friday, October 10, 2008
Labels: நாட்டு நடப்பு

0 comments:
Post a Comment