ஐசிஐசிஐ வங்கி திவால் ஆகி விட்டதாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் வதந்தி பரவியதால் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கியான லேமேன் பிரதர்ஸ் திவால் ஆகிவிட்டது. இதையடுத்து உலக பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டுகளை ஏற்க சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. இதனால் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டுகளை வைத்திருப்போர் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவின் முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கி திவால் ஆகி விட்டதாக வதந்தி பரவியதை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. பங்குச் சந்தை வீழ்ச்சி எதிரொலியால், ஐசிஐசிஐ வங்கியும் திவால் ஆகி விட்டதாக செப்.17 அன்று காலை தூத்துக்குடி, திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம் ஆகிய பகுதிகளில் வதந்தி பரவியது.
இதையடுத்து இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கிளைகளில் குவிந்தனர். ஏடிஎம் மையங்களிலும் நீண்ட கியூ வரிசையில் நின்று பணம் எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் இது வெறும் வதந்தியே, ஐசிஐசிஐ வங்கி திவால் ஆகவில்லை, நல்ல நிலையில்தான் உள்ளது, யாரும் பீதி அடைய வேண்டாம் என வங்கி அதிகாரிகள் விளக்கிய பின்னரே பாதி மனதுடன் வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
ஐசிஐசிஐ திவால்?: திடீர் புரளி
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, September 24, 2008

0 comments:
Post a Comment