தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

உயரும் பணவீக்கம், சரியும் வாழ்க்கைத்தரம்

பதினோரு ஐந்தாண்டுத் திட்டங்கள்; பதினேழு ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தம்; தனியார் மயம், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என பல திட்டங்கள் அரங்கேறின. இதனால் விளைந்த கொஞ்சநஞ்ச வாழ்க்கைத் தரத்தை பணவீக்கம் சின்னாபின்னாமாக்கிவிட்டது.

ஜூலை 2007ல் 4.7 சதவீதமாக இருந்த பணவீக்கம், மே 2008-ல் 8.86 சதவீதமாக அதிகரித்து, ஜூன் 14-ல் முடிவடைந்த வாரத்தில் இரட்டை இலக்கத்தை, அதாவது 11.42 ஆக உச்சத்தை எட்டியது. 13 ஆண்டுகளில் இதுவே அதிகபட்சம். காரணம் பெட்ரோலியப் பொருள்களின் விலையை மத்திய அரசு அதிகரித்தது. அதற்குக் காரணம் கச்சா எண்ணெய் முதன்முறையாக பீப்பாய் 140 டாலர் அளவுக்கு உயர்ந்தது.

மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்ட நிர்வாக மற்றும் நிதி தொடர்பான நடவடிக்கைகள் பயன் அளிக்கவில்லை.

பணவீக்கம் விலைவாசிகளை உயர்த்துகிறது. உணவுப் பண்டங்களின் விலை முதலில் உயருகிறது. கிராமப்புற, நகர்ப்புற சாதாரண மக்கள், தொழிலாளர்கள், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் என பெரும்பாலான மக்களை நிலைகுலையச் செய்துவிட்டது.

சாதாரண நடுத்தர மக்களிடையே கூட ஒரு வித நெருக்கடி உணர்வு காணப்படுகிறது. தன் குடும்பத்துக்கு தினம் அரை கிலோ காய்கறி வாங்குபவர் கால் கிலோ வாங்கினால் போதும் என்று நினைக்கிறார். மளிகைப் பொருள்கள் வாங்கும்போதும் இதே நிலைதான்.

வங்கிகளில் கடன் வாங்குவது முன்போல் அவ்வளவு எளிதாக இல்லை. வீட்டுக்கடன், வாகனக்கடன், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கான நுகர்வோர் கடன் என எல்லாக் கடன்களுக்கும் வட்டி விகிதம் உயர்ந்துவிட்டது.

பொழுதுபோக்கு அம்சங்கள் எட்டாத தூரத்தில் உள்ளன.

வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கடந்த காலங்களில் சேமித்த பணத்துக்கு, வங்கி 8 முதல் 9 சதவீத வட்டி கொடுத்தால்கூட, அதில் ஆதாயம் இல்லை. பணவீக்கம் 11 அல்லது 12 சதவீதம் என்றால், 8 அல்லது 9 சதவீத வட்டியிலிருந்து கிடைப்பது மைனஸ் (நெகட்டிவ்) ஆதாயம்தான்.

மாதச் சம்பளக்காரர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு கிடைக்கக்கூடிய சம்பள உயர்வு தனியார் துறையில் குறைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் என்று சொல்லுவதால், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் கண்ட பலன் என்ன?

பஞ்சம் என்பது உணவுப் பண்டங்களின் பற்றாக்குறையால் மட்டும் ஏற்படுவதல்ல. வாங்கும் சக்தி இல்லாத மக்கள் பட்டினி கிடக்க நேரிட்டாலும் அது பஞ்சத்துக்கு நிகரான நிலை தான் என்று பல ஆண்டுகளுக்கு முன் நோபல் பரிசு பெற்ற வெளிநாடுவாழ் இந்தியப் பொருளாதார விற்பன்னர் அமார்த்திய சென் விளக்கினார். அதை இன்று ஐ.எம்.எஃப். தலைவரும் வழிமொழிகிறார்.

இந்தியாவில் நாளொன்றுக்கு ரூ. 40-க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் 35 கோடிப்பேர் என்று ஒரு கணக்கு உண்டு. ஆனால் தற்போதைய பணவீக்கம் அந்தக் கணக்கையும் பொய்ப்பித்துவிட்டது. காரணம் விலைவாசி ஏற்றத்தால் அதற்கும் அதிகமான பேர் இப்போது அரைவயிறு பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும்பாலான நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்றும், கச்சா எண்ணெய் மற்றும் உணவு தானியங்கள் விலை உயர்வு தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

இது ஓரளவு உண்மைதான். அதேநேரம் சீனாவில் பணவீக்கம் இன்றுவரை எட்டரை சதவீத அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவால் முடியுமானால் இந்தியாவில் ஏன் இயலவில்லை என்று நாம் சிந்திக்க வேண்டாமா?

உலக அளவில் உணவு தானியங்களின் விலையும் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு என்ன காரணம்?

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மக்காச் சோளம் உள்ளிட்ட உணவு தானியங்களை மாற்று எரிபொருள் தயாரிப்புக்காகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இதனால் சாப்பாட்டுக்குக் கிடைக்காமல் அந்த தானியங்களின் விலை உயர்ந்து வருகிறது.

மழை, வெள்ளம் காரணமாகவும், வறட்சி காரணமாகவும் உலகின் பல வளரும் நாடுகளில் தானியங்களின் விளைச்சல் குறைந்து வருகிறது. தங்கள் நாட்டில் உணவு தானியங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்று உபரியாக சாகுபடி செய்திடும் நாடுகள் கூட, உணவு தானிய ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. உணவு தானிய விலை உயர்வுக்கு இவையெல்லாம் தான் காரணம்.

கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், தங்களுடைய உற்பத்திப் பண்டங்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, உற்பத்தி அளவைக் குறைக்கத் தொடங்கிவிட்டனர். உண்மையிலேயே உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது. முக்கியமாக, அண்மைக்காலமாக, சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஊகபேர வர்த்தகம் நடக்கத் தொடங்கி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் ஞடஉஇ மட்டும் தான் சம்பந்தப்பட்டுள்ளது என்று நாம் நினைத்தால் அது தவறு. உற்பத்தியில் துளியும் சம்பந்தப்படாத கோல்டுமேன் சாக்ஸ், சிட்டி குழுமம், ஒ.ட. மார்கன் சேஸ், மற்றும் மார்கன் ஸ்டேன்லி ஆகிய நான்கு பெரும் ஆங்கிலோ-அமெரிக்க முதலீட்டு நிதி நிறுவனங்களுக்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயிப்பதில் பங்கு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. இது கவலை அளிக்கும் விஷயம்.

இந்நிலையில், உலக அளவில் உணவு தானிய விலை உயர்வையும், கச்சா எண்ணெய் விலை உயர்வையும் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் சமீபகாலத்தில் இருக்காது என்பது தெளிவு.

ஆக, இந்திய மக்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும். உதாரணமாக, ஆன்-லைன் வர்த்தகத்தை இப்போது 4 உணவுப் பண்டங்களுக்கு மட்டுமே தடைசெய்து உள்ளது. இது போதாது. அனைத்து உணவுப் பண்டங்களுக்கும் அத்தியாவசியப் பண்டங்களுக்கும் ஆன்-லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும். இதனால் விலை கட்டுப்படுவதுடன் மக்களின் பீதியும் குறையும். பதுக்கல், கள்ளச்சந்தை ஆகியவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். உணவுப் பண்டங்களின் பொது விநியோக முறை உடனடியாகச் சீரமைக்கப்பட்டு அத்தியாவசியப் பொருள்களின் பொது விநியோகம் தங்கு தடையின்றி நடைபெற வழி செய்ய வேண்டும்.

எந்த ஒரு காரணம் கொண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு அரிசி, கோதுமை ஆகிய தானியங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

நீண்டகால அடிப்படையில், இந்தியாவைப் பொருத்தவரை விவசாய அபிவிருத்தி ஒன்று மட்டுமே ஏழை, எளிய மக்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்றக் கூடியது ஆகும். இதில் நமக்குச் சாதகமான அம்சங்கள் பல.

15 கோடி ஹெக்டர் விளைநிலம்; வருடத்தில் 270 நாள்கள் சூரிய ஒளி; 880 மி.மீ. மழை மற்றும் மிகப்பெரிய மனித வளம். இப்படி பல இயற்கை வளங்கள் இருக்கின்றன.

தேவையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, அரசியல் ரீதியிலான மனஉறுதி - உலகமயமாக்கல் மயக்கத்தில், விவசாயத்தை இரண்டாம்பட்சமாகக் கருதாத மனஉறுதி. ஆண்டுதோறும் அரசு விவசாயத்துக்கு ஒதுக்கப்படும் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர ஒருபோதும் குறையக் கூடாது. காரணம் நமது மக்கள்தொகை - 110 கோடி - ஆண்டுதோறும் 1.7 சதவீத அளவில் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு அதிகமாக உணவு தானியங்கள் தேவை.

9 சதவீத பொருளாதார வளர்ச்சி கண்ட பின்னரும், நமக்குள்ள அபரிமிதமான இயற்கை வளங்களையும் வைத்துக் கொண்டு, உணவுக்காக வெளிநாட்டினரிடம் கையேந்துவது, நம் நாட்டுக்கு அழகல்ல.

நன்றி _ தினமணி.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive