பதினோரு ஐந்தாண்டுத் திட்டங்கள்; பதினேழு ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தம்; தனியார் மயம், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என பல திட்டங்கள் அரங்கேறின. இதனால் விளைந்த கொஞ்சநஞ்ச வாழ்க்கைத் தரத்தை பணவீக்கம் சின்னாபின்னாமாக்கிவிட்டது.
ஜூலை 2007ல் 4.7 சதவீதமாக இருந்த பணவீக்கம், மே 2008-ல் 8.86 சதவீதமாக அதிகரித்து, ஜூன் 14-ல் முடிவடைந்த வாரத்தில் இரட்டை இலக்கத்தை, அதாவது 11.42 ஆக உச்சத்தை எட்டியது. 13 ஆண்டுகளில் இதுவே அதிகபட்சம். காரணம் பெட்ரோலியப் பொருள்களின் விலையை மத்திய அரசு அதிகரித்தது. அதற்குக் காரணம் கச்சா எண்ணெய் முதன்முறையாக பீப்பாய் 140 டாலர் அளவுக்கு உயர்ந்தது.
மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்ட நிர்வாக மற்றும் நிதி தொடர்பான நடவடிக்கைகள் பயன் அளிக்கவில்லை.
பணவீக்கம் விலைவாசிகளை உயர்த்துகிறது. உணவுப் பண்டங்களின் விலை முதலில் உயருகிறது. கிராமப்புற, நகர்ப்புற சாதாரண மக்கள், தொழிலாளர்கள், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் என பெரும்பாலான மக்களை நிலைகுலையச் செய்துவிட்டது.
சாதாரண நடுத்தர மக்களிடையே கூட ஒரு வித நெருக்கடி உணர்வு காணப்படுகிறது. தன் குடும்பத்துக்கு தினம் அரை கிலோ காய்கறி வாங்குபவர் கால் கிலோ வாங்கினால் போதும் என்று நினைக்கிறார். மளிகைப் பொருள்கள் வாங்கும்போதும் இதே நிலைதான்.
வங்கிகளில் கடன் வாங்குவது முன்போல் அவ்வளவு எளிதாக இல்லை. வீட்டுக்கடன், வாகனக்கடன், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கான நுகர்வோர் கடன் என எல்லாக் கடன்களுக்கும் வட்டி விகிதம் உயர்ந்துவிட்டது.
பொழுதுபோக்கு அம்சங்கள் எட்டாத தூரத்தில் உள்ளன.
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கடந்த காலங்களில் சேமித்த பணத்துக்கு, வங்கி 8 முதல் 9 சதவீத வட்டி கொடுத்தால்கூட, அதில் ஆதாயம் இல்லை. பணவீக்கம் 11 அல்லது 12 சதவீதம் என்றால், 8 அல்லது 9 சதவீத வட்டியிலிருந்து கிடைப்பது மைனஸ் (நெகட்டிவ்) ஆதாயம்தான்.
மாதச் சம்பளக்காரர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு கிடைக்கக்கூடிய சம்பள உயர்வு தனியார் துறையில் குறைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் என்று சொல்லுவதால், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் கண்ட பலன் என்ன?
பஞ்சம் என்பது உணவுப் பண்டங்களின் பற்றாக்குறையால் மட்டும் ஏற்படுவதல்ல. வாங்கும் சக்தி இல்லாத மக்கள் பட்டினி கிடக்க நேரிட்டாலும் அது பஞ்சத்துக்கு நிகரான நிலை தான் என்று பல ஆண்டுகளுக்கு முன் நோபல் பரிசு பெற்ற வெளிநாடுவாழ் இந்தியப் பொருளாதார விற்பன்னர் அமார்த்திய சென் விளக்கினார். அதை இன்று ஐ.எம்.எஃப். தலைவரும் வழிமொழிகிறார்.
இந்தியாவில் நாளொன்றுக்கு ரூ. 40-க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் 35 கோடிப்பேர் என்று ஒரு கணக்கு உண்டு. ஆனால் தற்போதைய பணவீக்கம் அந்தக் கணக்கையும் பொய்ப்பித்துவிட்டது. காரணம் விலைவாசி ஏற்றத்தால் அதற்கும் அதிகமான பேர் இப்போது அரைவயிறு பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும்பாலான நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்றும், கச்சா எண்ணெய் மற்றும் உணவு தானியங்கள் விலை உயர்வு தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இது ஓரளவு உண்மைதான். அதேநேரம் சீனாவில் பணவீக்கம் இன்றுவரை எட்டரை சதவீத அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவால் முடியுமானால் இந்தியாவில் ஏன் இயலவில்லை என்று நாம் சிந்திக்க வேண்டாமா?
உலக அளவில் உணவு தானியங்களின் விலையும் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு என்ன காரணம்?
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மக்காச் சோளம் உள்ளிட்ட உணவு தானியங்களை மாற்று எரிபொருள் தயாரிப்புக்காகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இதனால் சாப்பாட்டுக்குக் கிடைக்காமல் அந்த தானியங்களின் விலை உயர்ந்து வருகிறது.
மழை, வெள்ளம் காரணமாகவும், வறட்சி காரணமாகவும் உலகின் பல வளரும் நாடுகளில் தானியங்களின் விளைச்சல் குறைந்து வருகிறது. தங்கள் நாட்டில் உணவு தானியங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்று உபரியாக சாகுபடி செய்திடும் நாடுகள் கூட, உணவு தானிய ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. உணவு தானிய விலை உயர்வுக்கு இவையெல்லாம் தான் காரணம்.
கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், தங்களுடைய உற்பத்திப் பண்டங்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, உற்பத்தி அளவைக் குறைக்கத் தொடங்கிவிட்டனர். உண்மையிலேயே உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது. முக்கியமாக, அண்மைக்காலமாக, சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஊகபேர வர்த்தகம் நடக்கத் தொடங்கி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் ஞடஉஇ மட்டும் தான் சம்பந்தப்பட்டுள்ளது என்று நாம் நினைத்தால் அது தவறு. உற்பத்தியில் துளியும் சம்பந்தப்படாத கோல்டுமேன் சாக்ஸ், சிட்டி குழுமம், ஒ.ட. மார்கன் சேஸ், மற்றும் மார்கன் ஸ்டேன்லி ஆகிய நான்கு பெரும் ஆங்கிலோ-அமெரிக்க முதலீட்டு நிதி நிறுவனங்களுக்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயிப்பதில் பங்கு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. இது கவலை அளிக்கும் விஷயம்.
இந்நிலையில், உலக அளவில் உணவு தானிய விலை உயர்வையும், கச்சா எண்ணெய் விலை உயர்வையும் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் சமீபகாலத்தில் இருக்காது என்பது தெளிவு.
ஆக, இந்திய மக்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும். உதாரணமாக, ஆன்-லைன் வர்த்தகத்தை இப்போது 4 உணவுப் பண்டங்களுக்கு மட்டுமே தடைசெய்து உள்ளது. இது போதாது. அனைத்து உணவுப் பண்டங்களுக்கும் அத்தியாவசியப் பண்டங்களுக்கும் ஆன்-லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும். இதனால் விலை கட்டுப்படுவதுடன் மக்களின் பீதியும் குறையும். பதுக்கல், கள்ளச்சந்தை ஆகியவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். உணவுப் பண்டங்களின் பொது விநியோக முறை உடனடியாகச் சீரமைக்கப்பட்டு அத்தியாவசியப் பொருள்களின் பொது விநியோகம் தங்கு தடையின்றி நடைபெற வழி செய்ய வேண்டும்.
எந்த ஒரு காரணம் கொண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு அரிசி, கோதுமை ஆகிய தானியங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
நீண்டகால அடிப்படையில், இந்தியாவைப் பொருத்தவரை விவசாய அபிவிருத்தி ஒன்று மட்டுமே ஏழை, எளிய மக்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்றக் கூடியது ஆகும். இதில் நமக்குச் சாதகமான அம்சங்கள் பல.
15 கோடி ஹெக்டர் விளைநிலம்; வருடத்தில் 270 நாள்கள் சூரிய ஒளி; 880 மி.மீ. மழை மற்றும் மிகப்பெரிய மனித வளம். இப்படி பல இயற்கை வளங்கள் இருக்கின்றன.
தேவையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, அரசியல் ரீதியிலான மனஉறுதி - உலகமயமாக்கல் மயக்கத்தில், விவசாயத்தை இரண்டாம்பட்சமாகக் கருதாத மனஉறுதி. ஆண்டுதோறும் அரசு விவசாயத்துக்கு ஒதுக்கப்படும் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர ஒருபோதும் குறையக் கூடாது. காரணம் நமது மக்கள்தொகை - 110 கோடி - ஆண்டுதோறும் 1.7 சதவீத அளவில் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு அதிகமாக உணவு தானியங்கள் தேவை.
9 சதவீத பொருளாதார வளர்ச்சி கண்ட பின்னரும், நமக்குள்ள அபரிமிதமான இயற்கை வளங்களையும் வைத்துக் கொண்டு, உணவுக்காக வெளிநாட்டினரிடம் கையேந்துவது, நம் நாட்டுக்கு அழகல்ல.
நன்றி _ தினமணி.
உயரும் பணவீக்கம், சரியும் வாழ்க்கைத்தரம்
Posted by
தமிழ்க்குமரன்
Monday, October 6, 2008

0 comments:
Post a Comment