அம்பத்தூர்: மக்கள் பிரச்னையில் இனியும் ஆளுங்கட்சியினர் ஏமாற்ற முடியாது என்று, தனது கட்சித் தொண்டரின் இல்ல விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆவேசப்பட்டார். சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமில் தே.மு.தி.க., கட்சி தொண்டரின் இல்ல விழா தொடர்பாக, நேற்று காலை நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, சட்டம் ஒழுங்கை, காக்க வேண்டிய துறையில் பணிக்கு சேருவதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை நீடிக்கிறது. எஸ்.ஐ., பதவிக்கு மூன்று லட்ச ரூபாய், இன்ஸ்பெக்டர் பதவிக்கு ஐந்து லட்ச ரூபாய் என்று லஞ்சம் கொடுத்தால்தான் பணிக்கு வர முடிகிறது. அப்படி லஞ்சம் கொடுத்து வருபவர்கள் சரியாக கடமையைச் செய்ய முடியுமா? மேல் மட்டத்திற்கு தாங்கள் கொடுத்ததை மீட்க, தங்களிடம் சிக்குபவர்களிடம் கிடைத்தவரை "கறந்து' விடுகின்றனர். நான் அன்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்ததை, தமிழக முதல்வர் இன்று திட்டமாக அறிவித்து வழங்கிக் கொண்டிருக்கிறார். ரேசன் பொருள் வீடு தேடி வரும் என்று நான் அறிவித்தேன். அதன் எதிரொலியாக இன்று ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு 10 மளிகை பொருட்கள் என்று மக்களுக்கு அளிக்க துவங்கி உள்ளார். தேர்தலுக்காக இன்னும் இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் நிலைக்கு அவர் ஆளாகிவிட்டார்.
இலங்கை தமிழரின் பாதுகாப்பு பிரச்னையில் ""நான் கூட்டணியில் இருந்து வாபஸ் வாங்குவேன்'' என்று பிரதமருக்கு ஒரு போன் செய்தால் போதும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இலங்கை தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள். ஆனால் அதை விட்டு, லட்சக்கணக்கில் தந்தி கொடுங்கள் என்று உத்தரவிடுகிறார். இது தமிழக மக்களையும் ஒட்டு மொத்த தமிழர்களையும் ஏமாற்றும் வேலை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை அவர்களின் ஏமாற்று வேலை தொடர்ந்தது. இனி நாங்கள் வந்து விட்டோம். யாரையும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
கருணாநிதிக்கு விஜயகாந்த் ஆலோசனை
Posted by
தமிழ்க்குமரன்
Monday, October 6, 2008
Labels: நாட்டு நடப்பு

0 comments:
Post a Comment