தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சாவல் விடும் பா.ம.க எம்.எல்.ஏக்கள்

பா.ம.க.வின் ஊழல் எம்.எல்.ஏ.க்களைச் சாட்டையால் அடிப்பாரா ராமதாஸ்?' என்று கடந்த இதழில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எழுப்பியிருந்த கேள்வி, பா.ம.க. தரப்பை ரொம்பவுமே சூடேற்றி விட்டது. சேலத்து மும்மூர்த்திகளாக இருந்து வீரபாண்டி ஆறுமுகத்தை ஆரம்பம் முதலே மிகவும் கடுமையாக எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் வெளிப்படையான மோதலுக்குக் காரணமாக இருந்த பா.ம.க. எம்.எல்.ஏ.க்களான ஓமலூர் தமிழரசு, இடைப்பாடி காவேரி (டெல்லி சென்றிருந்ததால் தாரமங்கலம் எம்.எல்.ஏ. கன்னையன் மிஸ்ஸிங்) ஆகியோர் பா.ம.க.வின் பொதுக்குழுக் கூட்டத்துக்காக வந்திருந்தவர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை சேலத்தில் நம்மைச் சந்தித்தனர். சேலம் மாவட்டத்து பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பாக ஓமலூர் எம்.எல்.ஏ. தமிழரசு பேசினார்...
"எங்கள் மீது களங்கம் கற்பிக்க படாதபாடு படும் அமைச்சர் வேண்டுமென்றே எங்கள் மீது கற்பனையான குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டிக் கூறியிருக்கிறார். நாங்கள் தப்புச் செய்திருந்தால் எங்களைக் கட்சியிலேயே மருத்துவர் அய்யா விட்டு வைத்திருக்க மாட்டார். பொறுப்பான அமைச்சர் பதவியிலிருந்துகொண்டு பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளைக் கூறக் கூடாது. மருத்துவர் அய்யாவிடம் கடிதம் எழுதி நாங்கள் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களைத் தந்ததாகச் சொல்லும் அமைச்சர், அதைப் பத்திரிகைகளின் மூலமாக வெளியிடத் தயாரா...? எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிட்டால் சாட்டையால் மட்டுமல்ல, வேறு எதைக் கொண்டு அடித்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் அதே போலத் தன்னையும் ஆட்படுத்திக் கொள்ள அமைச்சர் தயாரா....?'' என்று ஆவேசமாகத் தொடங்கியவரிடம் நாமும் கேள்விகளை முன் வைத்தோம்.
`1991-ல் இருந்து பதவியில் இருந்த பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் யாரும் லஞ்சமே வாங்கவில்லையா?' என்ற அமைச்சரின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன...?
"எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களாக இருப்பவர்கள் லஞ்சம் வாங்கித்தான் அரசியல் நடத்தியாக வேண்டும் என்ற அமைச்சரின் எண்ணம்தான் அவரது கேள்வியாக வெளிப்பட்டிருக்கிறது. 1991-ல் இருந்து பதவியில் இருந்த பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பற்றி கேள்வி எழுப்பியிருக்கும் வீரபாண்டியார், 1962-லிருந்தே எம்.எல்.ஏ.வாக இருந்தவர். லஞ்சம் வாங்கித்தான் சட்டமன்ற உறுப்பினராக இத்தனை ஆண்டுகளாக அவர் பணியாற்றி வந்தாரா என்பதை அவர் தெளிவுபடுத்தினால் நல்லது.
அமைச்சர் பொறுப்பை இவர் ஏற்ற நாளிலிருந்து அரசு வேலை வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அமைச்சரது மகன் ராஜா, தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ், உதவியாளர்கள் சேகர், கௌசிக பூபதி போன்றவர்கள் வழியாக தினம்தினம் வசூலாகும் கதையெல்லாம் எங்களுக்குத் தெரியாதது அல்ல. அனைத்துத் துறைகளுக்கும் செல்ல வேண்டியதை அமைச்சர் ஒருவரே தனியாக ஒதுக்கிக் கொள்கிறார் என்று அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே அதிருப்தியில் இருக்கிறார்கள்.''
`ஹிட்லர் ராஜாங்கம் நடத்துகிறார் அமைச்சர் வீரபாண்டியார்' என்று உங்களை பேட்டி தரச் சொன்னதே ராமதாஸ்தான் என்று பத்திரிகையாளர்களிடம் நீங்கள் கூறியதாக வீரபாண்டியார் தெரிவித்திருக்கிறாரே....?
"அமைச்சர் சேலம் மாவட்டத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நடந்து கொண்டு அரசு விழாக்களில் எங்களைப் புறக்கணித்து வந்தார். எங்கள் தொகுதிக்கான நலத் திட்டங்கள் தொடர்பே இல்லாத வேறு ஒரு தொகுதியில் வைத்து அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டன. இதையெல்லாம் ஒருகட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ளமுடியாமல்தான் அதுபோன்ற ஒரு பேட்டியினைக் கொடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இது கட்சியின் தலைமைக்கோ மருத்துவர் அய்யாவுக்கோ தெரிவித்த பின் தரப்பட்ட பேட்டியே அல்ல. எனவே, பத்திரிகையாளர்களிடம் நாங்கள் சொன்னதாக அமைச்சர் தெரிவித்திருக்கும் தகவல் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். ஆதாரத்துடன் அதை அமைச்சர் நிரூபித்தால் எதற்கும் கட்டுப்பட நாங்கள் தயார்.''
கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சீண்டியபோதும் பொறுமையாக இருந்ததாக அமைச்சர் கூறியிருக்கிறாரே?
"நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தலின் போது ஓமலூரில் என்னைத் தாக்கி கொலை செய்ய சேலத்திலிருந்து தி.மு.க.வைச் சேர்ந்த ரவுடிகள் வந்திருந்தார்கள். என்னைக் கொலை செய்ய முயற்சி செய்து அது தோல்வியுற்றதால், தப்பியோட முயன்றவர்களில் ஒருவனை பொதுமக்களே விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அமைச்சர் வீரபாண்டியாரிடம் இதைத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கேட்டிருந்தேன். ஆனால், அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. மாறாக, நான் கலாட்டா செய்ததாக மூன்று பிரிவுகளில் என் மீதே பொய் வழக்குப் போட்டனர். கூட்டணியைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்ட போது பதறி நடவடிக்கை எடுக்காமல் பொய் வழக்குப் போட்டுத் தொல்லை கொடுத்த வீரபாண்டியார், கூட்டணி தர்மத்தைப் பற்றிப் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல இருக்கிறது.''
மனம் விட்டுச் சொல்லுங்கள்... வன்னியர்களுக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியும், வீரபாண்டி ஆறுமுகமும் பாடுபடவே இல்லையா?
"1972-ம் ஆண்டு வரையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனமாகத்தான் அரசால் வன்னியர் சமூகம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை 72-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது நீக்கி பிற்பட்ட இனமாக மற்ற சாதியினருடன் இணைத்து பூரிப்படைந்தவர்தான் கருணாநிதி. அதைப்பற்றி எந்தவிதமான எதிர்ப்பும் சொல்லாமல் அமைதியாக இருந்தவர்தான் வீரபாண்டி ஆறுமுகம். அதன் பின்னர், பலவிதமான போராட்டங்களின் முயற்சியாக 1987-ல் தான் மீண்டும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்கள் சேர்க்கப்பட்டனர். இடைப்பட்ட 15 ஆண்டு காலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் வன்னியருக்கு மிகப்பெரிய நிரப்ப முடியாத பின்னடைவு ஏற்பட்டதை வன்னிய மக்கள் இன்னமும் மறக்கவில்லை. 15 ஆண்டு காலம் வன்னியர் சமூகத்தை இருளில் தள்ளிய துரோகம் ஒன்றே இவர்கள் இருவரும் வன்னிய இனத்துக்காகப் பாடுபட்டதற்கான மிகப் பெரிய அத்தாட்சி. தன் கட்சியைச் சேர்ந்த வன்னியர்களையே தலைதூக்க விடாமல் தட்டி ஒடுக்கி வைத்திருந்தவர்தான் வீரபாண்டியார். இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.''
`பா.ம.க.வில் இருந்தவர்களை ஓரம் கட்டிவிட்டு குடும்ப அரசியலை ராமதாஸ் நடத்துகிறார்' என்ற வீரபாண்டியாரின் குற்றச்சாட்டு பற்றி?
"குடும்ப அரசியல் பற்றிப் பேச அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு அருகதையே இல்லை. தன்னுடைய மூத்த மகன் செழியனுக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்ற மூன்று பதவிகளை ஒரே சமயத்தில் தந்தவர். சென்ற உள்ளாட்சித் தேர்தலின் போது தனது மனைவி, மருமகள், மகன் என அனைவரையும் தேர்தலில் நிறுத்தி அழகு பார்த்தவர். இன்றைக்கும் தன்னுடைய மகனை எம்.எல்.ஏ.வாக்கி சேலம் மாவட்ட தி.மு.க.வில் தனக்கு அடுத்த வாரிசாக உருவாக்கி வருபவர். தன்னுடைய தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷை ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவராக்கி பல பொறுப்புகளை கூடுதலாக வாங்கித் தந்தவர் என்ற பெருமைக்குரிய அமைச்சர் வீரபாண்டியாரா குடும்ப அரசியல் பற்றி விமர்சிப்பது? நல்ல வேடிக்கை!'' என்றார் தமிழரசு எம்.எல்.ஏ.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive