முன்பைவிட இன்னும் தெம்பாகவும், நம்பிக்கையுடனும் பேசுகிறார், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த். அவ்வப்போது அவருக்கேயுரிய நமட்டுச் சிரிப்பு!
தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேற்றப் பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
``இந்தப் பேச்சு ஏற்கெனவே வந்துவிட்டது என்று ராமதாஸ் சொல்கிறார். பழைய கேஸட் என்கிறார். கலைஞரும் அதை மறுக்கவில்லை. இப்போது ஏன் இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்கிறது என்று புரியவில்லை. அப்பவே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் அவர்களுக்குள் நடக்கும் சண்டை. அதற்குமேல் அவர்கள் கட்சியைப் பற்றிப் பேச விரும்பவில்லை.''
அரசியலில் எளிமை, தூய்மைபற்றி அதிகம் பேசுகிறீர்கள். நீங்கள் கட்சிக் கூட்டங்களுக்குப் போகும்போது ஒரு கிலோ மீட்டருக்கு ட்யூப் லைட் போட்டு பெரிய பெரிய கட்அவுட்கள் வைக்கிறார்கள். பொதுமக்கள் கரண்டில் கொக்கி போடுகிறார்கள்.மற்ற கட்சிகள் செய்கிற ஆடம்பரத்தைத்தானே நீங்களும் செய்கிறீர்கள்?
``பப்ளிக் கரண்ட் எடுக் கிறோம் என்பதை மட்டும் திருத்திக்கொள்ளுங்கள்.ஆளுங்கட்சிக்காரர்கள் வேண்டுமானால் செய்வார்கள். நாங்கள் நிச்சயம் அப்படிச் செய்வதில்லை. பேனர், கட்_அவுட் விஷயத்தில் ஆளுங்கட்சிக்காரர்கள் ஏன் அவ்வளவு செய்கிறார்கள்? அப்புறம் அடுத்தவன் செய்யமாட்டானா?''
ஆளுங்கட்சிக்கு கடிவாளமாக இருக்க வேண்டிய ஓர் எதிர்க்கட்சியின் தலைவி, இரண்டு மாதமாக கொடநாட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பது சரியா?
``ஸ்டாலின் எப்படி பாங்காக், லண்டன் என்று சொல்லிக் கொள்ளாமல் போனாரோ அது மாதிரிதான்! அது என்னவென்று தெரிந்தால்தான் இதைப் பற்றியும் சொல்லமுடியும். டிப்ளமேட் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு மந்திரி போகலாமா? எதற்குப் போனார் என்று அரசாங்கமே சொல்லாதபோது எதற்கு அந்தக் கட்சித் தலைவி பற்றிப் பேசுகிறீர்கள்? புரோட்டோகால் என்று ஒன்று இருக்கிறதே. அதை தரவே இல்லை இந்த அரசு. கேட்டால் சொந்தக் காரணங்களுக்காகப் போனார் என்கிறார்கள். சொந்தக் காரணம் என்றால், அப்புறம் ஏன் டிப்ளமேட் பாஸ்போர்ட்டில் போகிறார்? போகக்கூடாது என்கிறார்கள்! டெல்லியிலிருந்து ஒரு கட்சியை இந்தியா முழுக்க நடத்தும்போது, கொட நாட்டுலேர்ந்து நடத்தக்கூடாதா?''
சமீபத்தில் கலைஞர் செய்த பெரிய தவறு என்று எதைச் சொல்வீர்கள்?
``விலைவாசி உயர்வைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறாரே அதுதான் பெரிய தவறு. தேர்தலில் ஜெயிக்கிறதை மட்டும்தான் பேசறார். மக்கள் அவதியைப் பற்றிப் பேசுவதே இல்லை. நான்கு விழாக்களுக்குப் போக வேண்டும், அங்கு போய் அதை நடணும். இங்கு போய் இதை நடணும். உடனே நதிகளை இணைக்கிறேன் என்று பேசுகிறார். டெல்லிக்குப் போகிறேன் என்கிறாரே எதற்கு? கம்யூனிஸ்ட்டுகளுக்கும், காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்படுத்தப் போகிறாரே தவிர, மக்கள் பிரச்னைகளை பேசவா போகிறார்? உடனே இதைப் படித்துவிட்டு மக்கள் பிரச்னைக்குத்தான் போகிறேன் என்று இரண்டாவது நாளே அறிக்கை தருவார்.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை இவர் கண்டுகொள்ளவே இல்லை. அப்புறம் விலையைக் குறைச்சதும் ரொம்பக் குறைவு! சாதாரண டீசல் கிடைக்கவே இல்லை. வேலூர் போறேன்... வழியெல்லாம் நிற்கிறது லாரிகள் டீசல், பெட்ரோல் கிடைக்காமல். அவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்களே என் கிற பொறுப்பு கூட முதல்வருக்கு இல்லை! அவருக்கு சுயநலம்தான் முக்கியம்.''
தே.மு.தி.க.வில் உங்கள் மனைவிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதே... எங்கு பார்த்தாலும் `அண்ணியாரே வருக...' என்று போஸ்டர்கள்?
``என்னால் போக முடியாமல் போகிறபோது அவர் போகிறார். அப்போது முக்கியத்துவம் அதிகமாகத்தான் இருக்கும். மனைவி வேண்டாம் என்று சொன்னாலும் கட்சிக்காரர்கள் விடுவதில்லை. பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு தரச் சொல்லிவிட்டு மனைவியை ஃபோகஸ் செய்வது தப்பு என்றால் எப்படி?''
கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டாலும், அடுத்தது என்ன என்பதில் ஒருவித குழப்பத்தில் நீங்கள் இருப்பதாகத் தெரிகிறதே?
``எந்தவித குழப்பமும் இல்லை... தெம்பாகத்தான் இருக்கிறேன். மாயாவதியோ, எடியூரப்பாவோ எப்படி ஜெயித்தார்கள்? கூட்டணி பலத்திலா?நாங்கள் என்ன சொல்கிறோமோ,தீர்மானம் நிறைவேற்றுகிறோமோ அதைத்தான் தி.மு.க. அரசு செயல்படுத்துகிறது. எங்கள் தீர்மானங்களை இடம் மாற்றி தங்களுடையதாகப் போடுகிறார்கள். `நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம்' என்றால் தங்கம் தென்னரசு கிண்டலடிக்கிறார்! அண்ணா சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருது. கட்சி என்றால் அது ஆட்சியைப் பிடிக்கத்தான். பெட்டைக் கோழி என்றால் அது முட்டையிடத்தான்!''.
குமுதத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் சுர்ர்ர்.....பேட்டி
Posted by
தமிழ்க்குமரன்
Monday, July 7, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment