
நவம்பர் இருபத்து மூன்றாம் தேதி கம்பம் நகரில் நடந்த 54 ஜோடி இலவசத் திருமண விழாவில் கலந்துகொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க., அ.தி.மு.க. என பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் வறுத்தெடுத்துவிட்டார்.
ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட விஜயகாந்த் குருபெயர்ச்சிக்குப் (டிசம்பர்_6) பின்னால் தன் தீவிர அரசியல் நடவடிக்கைகளைச் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதேபோல் கம்பத்தில் நடந்த இலவசத் திருமண விழாவிற்கும் ஜோதிட நம்பிக்கைதான் காரணமாம்.
அதாவது, விஜயகாந்தின் ஜாதகம் சிரம திசையில் இருக்கிறதாம். இந்தக் காலகட்டத்தில் ஏழை எளியவர்களுக்குத் திருமணம் நடத்தி வைத்தால் தோஷத் தடைகள் நீங்கும் என்று கேரள பகவதி அம்மன் கோயில் நம்பூதிரி ஒருவர் பரிந்துரைத்தாராம். இதையடுத்துத்தான் இந்தத் திருமண ஏற்பாடுகளாம்.
இதையடுத்து விழா ஏற்பாடுகளைக் கவனிக்க தே.மு.தி.க. தலைமைக் கழக நிர்வாகி பார்த்தசாரதி சில வாரங்களுக்கு முன்பே கம்பத்தில் முகாமிட்டுவிட்டார். கிழக்குத் திசையில் மேடை என்பதிலிருந்து அதன் வண்ணம் வரை ஜோதிட அடிப்படையிலே அமைக்கப்பட்டதாம். விஜயகாந்தின் 54 வயதையொட்டி 54 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைக்க முடிவாகியிருக்கிறது.
விஜயகாந்தும் அவரது மனைவியும் திட்டமிட்டபடி சரியான நேரத்திற்கு விழா மேடை ஏறினர். கேப்டன் தம்பதியர் முல்லைப்பூ மாலை சூடிக்கொண்டு ஜோடிகளுக்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். (அதுவும் ஜாதகத்தின் படிதானாம்) விஜயகாந்த் மேடை ஏறுவதற்கு முன்னால் அவரது கட் அவுட்டிற்கு குடம் குடமாக பாலாபிஷேகம் செய்தார்கள். பிறகு மைக்கைப் பிடித்த விஜயகாந்த் முதல்வர், ஸ்டாலின், ஜெ. என அத்தனைபேரையும் காய்ச்சி எடுத்துவிட்டார்.
"54 ஏழை ஜோடிகளுக்குத் திருமணம் என்று குறிப்பிட்டிருந்தோம். ஏழைகளை உருவாக்குவது அரசாங்கம்தான். `புதிதாகக் கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள்' என்று என் பெயரைச் சொல்லாமல் என்னைச் சாடுகிறார் மு.க. ஸ்டாலின். ஏன் என் பெயரைச் சொல்ல என்ன பயம்? தைரியம் இருந்தால் என் பெயரைச் சொல்லட்டும். நான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று இந்த மக்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆசைப்படுகின்றனர்.
நான் மின்சாரத்தைப் பற்றிப் பேசிய பிறகுதான் ஆற்காட்டார் நடவடிக்கை எடுக்கிறார். நான் ராமேஸ்வரம் போன பின்னால்தான்கலெக்டரும், மற்ற அதிகாரிகளும் ஓடிவந்தார்கள். இந்த பயத்தை நான் வரவேற்கிறேன். எம்.ஜி.ஆருக்குப் பின்னால் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. ஆனால் இரண்டு கட்சிக்காரர்களும் கோடிகோடியாக கொள்ளையடித்துவிட்டார்கள். இப்போதிருக்கும் மந்திரிகள் கல்லூரி கட்டுகிறார்கள். அதற்குப் பணம் எங்கிருந்து வந்தது? அவர்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து கல்லூரிகளைக் கட்ட முடியுமா? நான் சேலத்தில் 1200 பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்தேன். கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் `ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுப்பேன்' என்றார். இப்போது எத்தனை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்திருக்கிறாராம்?
எ.வ. வேலு. அவர் ஒரு ஏமாத்துற வேலு. எந்த ரேஷன் கடையில மோசமான அரிசி இருக்கிறது என்று கேட்கிறார். ஹோட்டலில் இருபது ரூபாய்க்கு சாப்பாடு என்றார்கள். அது எந்த ஊரில் எந்த ஓட்டலில் கிடைக்கிறது என்றே தெரியவில்லை?'' என்று திருமண விழாவிலும் வறுத்தெடுத்து விட்டுத்தான் ஓய்ந்தார் விஜயகாந்த்.
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, November 26, 2008

0 comments:
Post a Comment