மும்பை பயங்கரவாத சம்பவத்தில் நாட்டின் மானத்தை காப்பாற்ற தங்களது உயிரை பணயம் வைத்து செயல்பட்டு வருகின்றனர் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.,) கமாண்டோக்கள். தேசிய பாதுகாப்பு படை 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது, பயங்கரவாதிகளால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை சமாளிப்பது போன்ற நோக்கங்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநில போலீசாராலோ, மத்திய போலீசாராலோ கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில் என்.எஸ்.ஜி.,களமிறங்கும். இதனால் போலீசார், துணை ராணுவம் போன்றவற்றின் பணியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இவர்களின் பணி. கடத்தல் தடுப்பு, மீட்பு பணி போன்றவற்றில் என்.எஸ்.ஜி., ஈடுபடுகிறது. இந்த அமைப்பு உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. என்.எஸ்.ஜி.,யின் பயிற்சி மையமும், வெடிகுண்டு தகவல் மையமும் அரியானாவில் உள்ளது. இதன் தலைமையகம் டில்லியில் உள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இங்கிருந்துதான் கமாண்டோக்கள் விமானம் மூலம் அனுப்பப்படுகிறார்கள்.
பிரிட்டனின் "எஸ்.ஏ.எஸ்.,' ஜெர்மனியின் "ஜி.எஸ்.ஜி., 9' போன்ற பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவில் என்.எஸ்.ஜி., உருவாக்கப் பட்டது. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. எஸ்.ஏ.ஜி., எனப்படும் "ஸ்பெஷல் ஆக்ஷன் குரூப்'. இதற்கு ராணுவத்தில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மற்றொன்று எஸ்.ஆர்.ஜி., எனப்படும் "ஸ்பெஷல் ரேஞ்சர்ஸ் குரூப்'. துணை ராணுவம், மத்திய, மாநில போலீஸ்துறையில் இருந்து இதற்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
என்.எஸ்.ஜி.,யின் பணிகள்
*பயங்கரவாத தாக்குதலில் இருந்து குறிப்பிட்ட இடத்தையோ, கட்டடத்தையோ மீட்பது. *பயங்கரவாதிகளை நேரடியாக எதிர்கொண்டு வீழ்த்துவது.
*விமான கடத்தல் போன்ற சம்பவங்களை கையாள்வது.
*பயங்கரவாதிகளிடம் இருந்து பிணைக்கைதிகளை மீட்பது.
*அச்சுறுத்தலை சந்திக்கும் வி.ஐ.பி.,களுக்கு பாதுகாப்பு வழங்குவது.
*வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் இடங்கள், கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் சோதனை பணிகளை மேற்கொள்வது.
*சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானக் கடத்தலை தடுப்பது.
*வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அகற்றுவது.
*குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தகவல் சேகரிப்பது.
மிக முக்கியமான நடவடிக்கைகள்
1986 ஏப்ரல்: பயங்கரவாதிகளுக்கு எதிராக அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் "ஆபரேஷன் பிளாக் தண்டர்'.
1994 ஏப்ரல்: இந்தியன் ஏர்லைன்சின் "போயிங் 737' விமானத்தை மீட்க மேற்கொண்ட "ஆபரேஷன் அஸ்வமேத்' .
1998 அக்டோபர்: உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை.
1999 ஜூலை: காஷ்மீரில் ஒரு காம்ப்ளக்சில் பயங்கரவாதிகளின் பிடியில் பிணைக்கைதிகளாக இருந்த 12 பேரை மீட்டது.
ஆகஸ்ட்: உ.பி.,யில் ருத்ரபூரில் ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளை வீழ்த்தியது.
1999 டிசம்பர்: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் "ஐ.சி., 814' காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை.
2002 செப்டம்பர்: ஆமதாபாத்தில் அக்ஷர்தாம் கோயிலுக்குள் பயங்கரவாதிகள் பிடியில் சிக்கிக்கொண்ட பக்தர்களை மீட்க "ஆபரேஷன் வஜ்ர சக்தி'.
2008 நவம்பர்: மும்பையில் வெளிநாட்டினர் அதிகம் தங்கும் ஒட்டல்களில் புகுந்து தாக்கிய பயங்கரவாதிகளிடம் இருந்து அப்பாவிகளை மீட்டது.
உயிரியியல், வேதியியல், அணுஆயுதம் தொடர்பான அச்சுறுத்தல்களை சமாளிக்க பாபா அணுசக்தி ஆய்வுமையத்திலும் என்.எஸ்.ஜி., படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
2007ல் வெஸ்ட் இண்டீசில் கிரிக்கெட் உலக கோப்பை நடந்த போது என்.எஸ்.ஜி., குழு அங்கு அழைக்கப்பட்டு, குண்டுவெடிப்பு தவிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது. இது போன்ற பாதுகாப்பு அமைப்புகளிடையே நடத்தப்படும் போட்டிகளில் போது ஜெர்மனி, உக்ரைன் நாடுகளுக்கு சென்று பல பரிசுகளை இந்த அமைப்பு வென்றுள்ளது.
மும்பையை காப்பாற்றிய கார்கில் போர் ஹெலிகாப்டர்
மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது நகரவாசிகள் அனைவரையும் உயரே திரும்பி பார்க்க வைத்த இந்திய விமானப்படையை சேர்ந்த எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் கார்கில் போரிலும் முக்கிய பணியாற்றியிருக்கிறது. வானிலிருந்து கடற்படை கமாண்டோக்களை நரிமன் ஹவுசின் மேற்தளத்தில் இறக்கி முக்கிய தருணத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க இந்த ஹெலிகாப்டர் பயன்பட்டது. இந்திய விமானப்படையில் முன்பு "எம்.ஐ.,- 8' ரக ஹெலிகாப்டர்கள் பயன் படுத்தப்பட்டன. அதன் மேம்படுத்திய "எம்.ஐ.,-17' ரக ஹெலிகாப்டர்களே தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இவை ரஷ்யாவிலிருந்து வாங்கப் பட்டவை. 60க்கும் மேற்பட்ட நாடுகள் ராணுவ சேவைக்கு இந்த ஹெலிகாப்டர்களையே பயன்படுத்தி வருகின்றன. சில நாடுகளில் தீயணைப்பு படையினர், மீட்புப்படையினரும் இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகின்றனர். பைலட் உட்பட 35 பேர் வரை இதில் பயணம் செய்ய முடியும். இதன் இன்ஜின் சக்தி மிக அதிகம். அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் இவை செல்லும். வினாடிக்கு 8 மீட்டர் வரை உயரே எழும்பக்கூடியது. 1999ல் நடந்த கார்கில் போரின் போது 15 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் பறந்து சென்று தாக்குதல் நடந்த இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மும்பையில் வானில் ஒரே இடத்தில் நிலை கொண்டு வீரர்களை களத்தில் இறக்க இந்த ஹெலிகாப்டரே பொருத்தமானது என்று முடிவு செய்யப்பட்டது.
குடும்பத்தினருக்கே தெரியாமல் மும்பை வந்த "மார்கோஸ்'
இந்திய கடற்படையினரின் சிறப்பு நடவடிக்கை பிரிவுதான் "மரைன் கமாண்டோ போர்ஸ்'. சுருக்கமாக "மார்கோஸ்' என்று அழைக்கிறார்கள். இந்த படையினர் மிகவும் ரகசியமாக இயங்குவார்கள். இந்த வீரர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கூட இவர்கள் "மார்கோஸ்' படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தெரியாது. தங்கள் குடும்பத்தினரிடம் எங்கு செல்கிறோம் என்பதையே தெரியப்படுத்தாமலே மும்பை வந்தனர் இவர்கள். 1987ம் ஆண்டு மார்கோஸ் தொடங்கப் பட்டது. தற்போது ஏறத்தாழ 2 ஆயிரம் வீரர்கள் இதில் பணியாற்றுகின்றனர். மும்பை, கொச்சின், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மார்கோசின் முக்கிய மையங்கள் செயல்படுகிறது. மார்கோஸ் பிரிவில் சேர வீரர்கள் ஏறத்தாழ 2 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். படகில் இருந்து கடலுக்குள் குதிப்பது, ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் இறங்குவது போன்ற பயிற்சிகளும் இவர்களுக்கு வழங் கப்படுகின்றன. இவை வழக்கமான ராணுவ பயிற்சியை விட கடுமையாக இருக்கும்.
மார்கோசின் முக்கிய நடவடிக்கைகள்
ஆபரேஷன் பவன்: 1988 அக்டோபரில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற போது, மார்கோசும் நடவடிக்கையில் இறங்கியது. திரிகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய துறைமுகங்களை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க உதவியது.
ஆபரேஷன் காக்டஸ்: 1988 நவம்பரில் மாலத்தீவில் அமைச்சர் உட்பட 25 பேர் ஒரு கப்பலில் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டனர். மார்கோஸ் படையினர் அந்த கப்பலில் இறங்கி அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 2008ல் கடற்கொள்ளையர்கள் இந்தியாவின் "ஜக் அமவ்' கப்பலை கைப்பற்ற முயற்சித்த போது இவர்கள் முறியடித்தனர்.
மும்பையை மீட்கும் படையினர்: மும்பையின் மூன்று முக்கியமான இடங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றியதால் மகாராஷ்டிரா போலீசுக்கு உதவ 7 படைகளை சேர்ந்த வீரர்கள் வந்தனர். ராணுவம், என்.எஸ்.ஜி., மார்கோஸ், அதிவிரைவு படை, கருப்பு பூனை, மும்பை தீயணைப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ்
ஐந்தறிவு "வீரர்' : கமாண்டோ வீரர்களுடன் கைகோர்த்த மோப்ப நாய்கள் அவர்களுடன் மும்பை பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது உறுதுணையாக இருந்தன. மோப்ப நாய் படையில் இடம்பெற்றுள்ள நாய்கள் பிறந்த ஆறு வாரங்களில் பயிற்சியில் ஈடுபடுகின்றன. 32 வாரங்களில் அவை பயிற்சியை முழுமையாக முடித்துவிடுகின்றன. வெடிபொருட்களையும் குற்றவாளிகளையும் மிக எளிதாக கண்டறிய மோப்பநாய்கள் உதவுகின்றன. தற்போது நாடு முழுவதும் மோப்ப நாய்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட் களில் மோப்பநாய்களின் தேவை அதிகரித்துள்ளது. கோவை அருகே உள்ள போத்தனூரில் மோப்பநாய்களுக்கான மத்திய பயிற்சி மையம் உள்ளது. இங்கிருந்து நாடு முழுவதும் நாய்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தேசத்தின் ஹீரோக்கள் என்.எஸ்.ஜி., வீரர்கள்...!
Posted by
தமிழ்க்குமரன்
Friday, November 28, 2008

0 comments:
Post a Comment