மும்பை மாநகரின் பரபரப்பு மிகுந்த மையப்பகுதியில் உள்ள தாஜ் ஓட்டல், டிரிடன்ட் ஓட்டல் மற்றும் காமா ஆஸ்பத்திரி உட்பட 10 இடங்களில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தி்னர். இந்த தாக்குதலில் 14 போலீசார் உட்பட 101 பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்னும் தாஜ் ஓட்டலில் 40 பேரும், டிரிடன்ட் ஓட்டலில் 300 பேரும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளதாக ராணுவத்தினர் கூறுகின்றனர். தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் மட்டுமல்லாது கடும் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ராணுவத்தினர் மட்டுமல்லாது தீவிரவாத எதிர்ப்புப் போலீசார், தேசிய ராணுவப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதனால் அந்த பகுதியே பெரும் கலவரப் பூமி போல் காட்சியளித்தது.
மும்பை தாக்குதல் வீடியோ
http://www.dinamalar.com/mumbaivideo_main.asp
போலீஸ் உயர் அதிகாரிகள் பலி : போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாத எதிர்ப்புப்படை போலீஸ் தலைமை அதிகாரியான ஹேமந்த் கர்காரே, என்கவுண்டர் போலீஸ் உயர் அதிகாரி விஜய் சர்லாஸ்கர் உள்ளிட்ட 14 போலீசார் பலியாயினர். இந்த தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
6 தீவிரவாதிகள் பலி : போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் பலியானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 தீவிரவாதிகள் கருப்பு நிற காரில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மர்மப்படகு ? : கடந்த சில நாட்களாக மும்பை துறைமுக பகுதியில் மர்மப்படகு உலவி வந்ததாகவும், அதன் மூலமே தீவிரவாதிகள் மும்பை நகருக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உச்சக்கட்ட பாதுகாப்பு : மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து டில்லி , குஜராத் , கோல்கட்டா , சென்னை , பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நட்சத்திர ஒட்டல்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் கண்டனம் : இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்றும் , அவர்கள் தீவிரமாக தண்டிக்கப்படுவர் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் , தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இதனிடையே கேரள சற்றுப்பயணம் சென்றிருந்த மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், அங்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு உடனடியாக மும்பை திரும்பியுள்ளார்.
குண்டுகள் செயலிழப்பு : ராணுவத்தினர் போலீசாருடன் நடத்திய தீவிர சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா கண்டனம் : இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தாங்கள் இந்தியாவின் நிலையை கூர்ந்து நோக்கி வருவதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மும்பையில் 14 போலீசார் உட்பட 101 பேர் பலி; தீவிரவாதிகள் பிடியில் இன்னும் 340 பேர்.
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, November 26, 2008

0 comments:
Post a Comment