முதாயத்தை பாதிக்கக்கூடிய தவறான விஷயங்கள், மக்களிடம் எளிதில் சென்றடையக்கூடிய சினிமா மூலமாக பரப்பப்படக் கூடாது என்பதற்காகவே "சென்சார் போர்டு' என்ற அமைப்பு துவக்கப்பட்டது. ஆனால் தற்போது, "சென்சார் போர்டு' முற்றிலும் செயலிழந்துவிட்ட நிலையில் இருப்பதால், சமுதாயத்தில், குறிப்பாக இளைஞர்கள் மனதில் அதிகளவில் ஆபாச மற்றும் கொடூர எண்ணங்களை திரைப்படங்கள் விதைத்து வருகின்றன.ஒரு சினிமா தணிக்கைக்காக வரும்போது, மாநில சென்சார் போர்டின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அப்படத்தை பார்வையிட்டு தணிக்கை சான்றிதழ் வழங்குகின்றனர்.
அமைப்பு இருக்கிறதா?: ஒரு சினிமாவை தணிக்கை செய்வதற்கு முன், படத்தில் எப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெறக் கூடாது என்பதற்கு ஒரு வீடியோ, தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு போட்டுக் காட்டப்படுகிறது.அவற்றை பார்த்துவிட்டு, சினிமாவில் அத்தகைய காட்சிகள் இருந்தால், அவற்றை அனுமதிக்கக் கூடாது என்பது தான் விதிமுறை. கத்தியால் வெட்டுவது, ரத்தம் பீச்சியடிப்பது போன்ற காட்சிகளை காட்டக் கூடாது; பெண்களின் தொப்புளை ஆபாசமாக காட்டக் கூடாது; பெண்களின் மார்பகத்தை "குளோசப்'பில் காட்டக் கூடாது என்பன உள்ளிட்ட பல விதிமுறைகள் இதில் உள்ளன.ஆனால், சில ஆண்டுகளாக வெளிவரும் சினிமாக்களை பார்க்கும்போது, சென்சார் போர்டு என்று ஓர் அமைப்பு இருக்கிறதா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகின்றது.
"ஆசை' என்ற படத்தில், பிளாஸ்டிக் பையால், முகத்தை கட்டி மூச்சித் திணறச் செய்து கொலை செய்யும் காட்சி, குழந்தைக்கு கூட புரியும் வகையில் செய்முறை விளக்கத்தோடு இடம்பெற்றிருந்தது. "பட்டியல்' படத்தில் கத்தியால் குத்திவிட்டு, உடல் தப்பிக்கக் கூடாது என்பதற்காக உள்ளே மணலை எடுத்து போடும் காட்சி இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் திரைக்கு வந்த "தசாவதாரம்' படத்தில் சீன பெண்ணின் கழுத்தை கம்பியில் அழுத்தி அறுத்துக் கொலை செய்யும் காட்சி மிகவும் கொடூரமாக படமாக்கப்பட்டிருந்தது. இத்தகைய காட்சிகளை சென்சார் போர்டு எப்படி அனுமதித்தது என்ற கேள்வி எழுகிறது.
இவற்றை பார்க்கும் இளைஞர்கள், சிறுவர்கள் மனதில் இந்த கொடூர காட்சிகள் பதிந்துவிடுகின்றன. சிறிய சண்டைகளின்போது கூட வாய்ப்பு கிடைத்தால், இவற்றை அவர்கள் செயல்படுத்த துணிகின்றனர்.மேலும் சினிமாவில் ஆபாச காட்சிகளும், வசனங்களும் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளுடன் சினிமா பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவிற்கு தணிக்கை இருக்கும் நிலையில், அந்த சினிமாவின் "ஆடியோ' கேசட்டிற்கு தணிக்கை என்பதே முற்றிலும், இல்லை. சினிமாவில் தணிக்கைக்குழுவின் ஆட்சேபத்தால் நீக்கப்படும் பாடல் வரிகள் "ஆடியோ' கேசட்டில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் இடம்பெறுகின்றன.
இசையால் கவரப்படும் சிறு குழந்தைகள் அந்த ஆபாச வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல், பலர் முன்னிலையில், "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? ஓடிப்போய் கல்யாணந்தான் கட்டிக்கலாமா?' என பாடி வருகின்றன.சினிமாவில் ரஜினி "சிகரெட்' பிடிப்பதை பார்த்து அப்பழக்கத்திற்கு ஆளான இளைஞர்கள் பலர், ரஜினியே "சிகரெட் பிடிப்பது தவறு' என்று கூறினாலும் அப்பழக்கத்தைக் கைவிடுவதில்லை. சமுதாயத்தில், குறிப்பாக இளைஞர்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை சினிமாவிற்கு உள்ளது. ஆனால், இதை உணர்ந்து செயல்படுவதாக இன்றைய திரையுலகம் இல்லை.
கிளுகிளுப்பான காட்சி : முழுக்க, முழுக்க வர்த்தக நோக்கத்துடன் மட்டுமே இன்றைய திரையுலகம் செயல்பட்டு வருகிறது.முன்பெல்லாம், தங்கள் படத்துக்கு "ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுவிடக் கூடாது என, தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தவித்தனர். தற்போது, "தாராளமாகப் போடுங்க' எனக் கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். "ஏ' தான் கிடைக்கும் என உறுதியானால், மேலும் கிளுகிளுப்பான மற்றும் வன்முறையான காட்சிகளை வைத்து விடுகின்றனர்."சென்சார் போர்டு, தணிக்கை தொடர்பான விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். சினிமாவில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க "சென்சார் போர்டு' ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும்.
இதன்மூலம், பரவலாக பொதுமக்களின் கருத்தை அறிந்து அதனடிப்படையில் சினிமா தணிக்கையை மாற்றியமைக்க வேண்டும்' என்பதே "காதல், ஆட்டோகிராப்' போன்ற நல்ல படங்களை விரும்புபவர்களின் கோரிக்கை. அவையும் வெற்றிகரமாக வசூலைக் குவித்தவை என்பதே இதற்குச் சான்று.
சீரழிக்கும் சினிமா: செயலிழந்த சென்சார் போர்டு
Posted by
தமிழ்க்குமரன்
Sunday, July 27, 2008
Labels: விமர்சனம்

0 comments:
Post a Comment