தமிழ் சினிமாவில் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த காமெடி நடிகர் என்று பெயர் எடுத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது. கலைவாணர் என்று அழைக்கப்படும் என்.எஸ். கிருஷ்ணன் இன்றும் தமிழ் சினிமா நடிகர்களின் முன்னுதாரண கலைஞராக திகழ்கிறார். இவரது நகைச்சுவை காட்சிகள் காலத்தால் அழிக்க முடியாதவையாக நிலைபெற்றுள்ளன.
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவ. 29ம் தேதி கலைவாணர் பிறந்தார். சாதாரண வில்லுப்பாட்டு கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் சினிமா பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்தார். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச் சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். அறிவியல் கருத்துகளையும், சீர்திருத்த கருத்துகளையும் பரப்ப வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். காந்திஜி மீது கொண்ட பற்றினால் தனது ஊரான நாகர்கோவிலில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார். அம்பிகாபதி, மதுரைவீரன், நல்லதம்பி போன்ற படங்களில் இவரது வேடம் பரவலாக பாராட்டப்பட்டது. பணம், மணமகள் போன்ற படங்களை இயக்கினார். அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது. 1957ம் ஆண்டு ஆக. 30ம் தேதி தனது 49வது வயதில் கலைவாணர் மரணமடைந்தார். பிறருக்கு உதவுவதை கடமையாகவே கருதிய கலைவாணர் தனது இறுதி காலத்தை வறுமையில் கழித்தார்.
இன்று கலைவாணர் நூற்றாண்டு விழா!
Posted by
தமிழ்க்குமரன்
Friday, November 28, 2008

0 comments:
Post a Comment