தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்


அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணாவை, `சற்றே விலகியிரும் பிள்ளாய்!' என ரஜினி சொல்லிவிட்டார். சத்தியநாராயணாவின் பதவி பறிபோகப் போகிறது'' என்று, கடந்த குமுதம் ரிப்போர்ட்டரிலேயே நாம் கூறியிருந்தோம். ஆம்! நாம் சொன்னபடியே ஆகிவிட்டது.

கடந்த 17-ம்தேதி திங்கட்கிழமை, சத்தி நீக்கப்பட்ட தகவல் கசிய, `அது உண்மையா? வதந்தியா?' என அறிய அத்தனை மாவட்ட நிர்வாகிகளும், அடுத்தடுத்து சென்னை ராகவேந்திரா மண்டபத்திலுள்ள தங்கள் தலைமை மன்ற நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தொல்லை பண்ணியிருக்கிறார்கள். `தகவல் ஒருவகையில் உண்மைதான்' என்று தெரிய வர பாவம், படு அப்செட்டானார்கள். ``கடந்த 3-ம் தேதி நடந்த ரசிகர்கள் சந்திப்பின்போது கூட, `சத்தி சத்திதான்!' என்று ரஜினியால் பாராட்டப்பட்டவர் சத்தியநாராயணா. அப்படியிருக்க, அடுத்த ஒரே வாரத்தில் அவருக்கு ஏன் கல்தா?'' என்று மண்டை காய்ந்து போனார்கள் மாவட்ட நிர்வாகிகள்.

ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தற்போதைய மும்மூர்த்திகளான சுதாகர், இளங்கோவன், பாரதி ஆகியோர், ஆரம்பத்தில், ``சத்தியநாராயணா நீக்கப்பட்டது உண்மைதான். இனி அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம்'' என்று கூறியிருக்கிறார்கள். பிறகு மீடியாக்கள் விழித்துக் கொண்டதும் உஷாராகி, ``சத்தியநாராயணாவுக்கு கிட்னி ஃபெயிலியர் சார். மன்ற நிகழ்ச்சிகளில் அவரால் கலந்து கொள்ள முடியாது என்பதால், அவரை ஓய்வெடுக்கும்படி ரஜினி சொல்லியிருக்கிறார். மற்றபடி அவரைத் தலைவர் பதவியில் இருந்தெல்லாம் நீக்கவில்லை'' என்றிருக்கிறார்கள். இதில் எது உண்மை? எது பொய்? என்று புரியாமல் விக்கித்துப் போயிருக்கிறார்கள் ரசிகர்கள்..

ஏறத்தாழ 23 ஆண்டு காலம் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்பில் இருந்தவர் சத்தியநாராயணா. ரஜினியின் நம்பிக்கைக்குரிய தளபதி என்பதுடன் கூடவே, எளிமையானவர் என்றும் பெயர் பெற்றவர். அதோடு ரஜினியை ஒருமையில் கூப்பிடும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். அதோடு ரஜினி மூலவர் என்றால், ரசிகர்களுக்கு உற்சவராக இருந்தவர் சத்திதான். அப்படிப்பட்டரை ``நீக்கி விட்டார்கள்'' என்றும், ``இல்லை! நீக்கவில்லை. இன்னமும் மன்றப் பொறுப்பில்தான் இருக்கிறார். இது தாற்காலிக முடிவுதான்'' என்றும் மாறிமாறி வந்த தகவல்களால் ரொம்பவுமே குழம்பிப் போனார்கள் ரஜினி ரசிகர்கள்.

அதேநேரத்தில், சத்தியின் மாற்றம் தொடர்பாக, இன்னும் பல்வேறு விதமான பரபரப்புகளும் எகிறத் தொடங்கியுள்ளன. ``ரஜினி தேர்தல் சமயத்தில் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார். இதற்கு ஏற்றவாறு ரசிகர்களை உற்சாகமாக்கி தயார் செய்யத்தான் சத்தியை மாற்றியிருக்கிறார்'' என பூரித்துப்போன மன்ற நிர்வாகிகள் சிலர், திருச்சி, மதுரை, புதுச்சேரியில் பட்டாசு வெடித்து கேக் வெட்டிக் கொண்டாடியதாகவும் கேள்வி.

உண்மையில் என்னதான் நடக்கிறது? மாநில நிர்வாகி ஒருவரிடம் இதைக் கேட்டோம். "கடந்த 3-ம்தேதி மண்டபத்தில் நாங்கள் தலைவரைச் சந்தித்தபோது, `சத்திக்கு உடல்நிலை சரியில்லை. அவரது அம்மா இறந்துவிட்டார். அப்பாவுக்கும் உடல்நலமில்லை' என்று தலைவர் சொன்னார். நாங்கள் அழுத்திக் கேட்டபோது, `இனிமேல் சுதாகர் என்பவர் மண்டபத்தில் இருப்பார். அவரும் எனது நண்பர்தான். நீங்கள் அவரிடம் உங்கள் குறைகளைச் சொல்லலாம்' என்றார். அப்போதே, சத்தி மாற்றப்படுவார் என்று உறுதியாக நம்பினோம். இப்போது கிட்டத்தட்ட அது உறுதியாகி விட்டது'' என்றார் அவர்.

`இது தாற்காலிகமான மாற்றம்தான். சத்திய நாராயணா மீண்டும் திரும்பி வந்து இந்தப் பொறுப்பில் அமர்வார் என்கிறார்களே?' என்று அவரிடம் கேட்டோம். சிரித்துக் கொண்ட அவர், "சூப்பர் ஸ்டார் பயன்படுத்தும் `தாற்காலிகம்' என்ற வார்த்தைக்கு ஒரு தனி அர்த்தம் உண்டு. 1985-ம் வருடம் ரஜினி சார்பில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், `அகில இந்தியத் தலைவராக இருந்த பூக்கடை நடராஜனும், பொதுச்செயலாளர் சம்பத்குமாரும் ஆறு மாதத்திற்கு தாற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள். அந்த ஆறுமாதம் க. சத்தியநாராயணா தலைவர் பொறுப்பில் இருப்பார்' என்றிருந்தது. ஆனால் அதன்பின் என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியுமே? சத்தியே அந்தப் பதவியில் நீடித்தார்.

அது மட்டுமா? சத்தி பதவிக்கு வந்ததும் அவர் செய்த முதல் வேலை பழைய தலைவரோடு தொடர்பில் இருந்த ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்து ஒழித்ததுதான். கோவை, திருச்சி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் தனித்தனி கோஷ்டிகளை அவர் உருவாக்கினார். நிர்வாகிகள் சென்னைக்கு வந்து சத்தியைச் சந்தித்தால் மரியாதைக் குறைவாகப் பேசுவார். ரஜினியிடம் இருந்து ரசிகர்களை ஒதுக்கி வைத்த பெருமை சத்தியைத்தான் சேரும். அதனால்தான் பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப் பின் ரஜினி தற்போது ரசிகர்களைச் சந்திக்கும் நிலை'' என அலுத்துக் கொண்டார் அவர்.

அருகிலிருந்த மற்றொரு நிர்வாகியுடன் நாம் பேசினோம்.

"சத்தியை நீக்க வேண்டும் என்று 2002-ம் ஆண்டில் இருந்தே போர்க்கொடி தூக்கி வருகிறோம். தலைவர் ரத்தம் சிந்திச் சம்பாதித்த பணத்தில் மாவட்டத்திற்கு தலா ஒரு லட்சம் வீதம் முப்பது லட்சத்தை பாடப் புத்தகங்கள் வாங்கக் கொடுத்தார். அதில் ஏகப்பட்ட குளறுபடிகள். வருடத்திற்கு 20 ஜோடிகளுக்கு சூப்பர் ஸ்டார் திருமணம் செய்து வைப்பார். அந்தத் திருமணத்திற்கு வரும் மாவட்ட நிர்வாகிகளை வாசலில் நிற்க வைத்து மரியாதைக் குறைவாகத் திட்டுவதுதான் சத்தியின் ஸ்டைல். மன்றத்தின் முக்கியப் பிரச்னைகள் பற்றிச் சொல்ல மாவட்ட நிர்வாகிகள் யாரும் மண்டபத்திற்குச் செல்ல முடியாது. அப்படிச் சென்றால், வாட்ச்மேன்களைக் கூப்பிட்டு சத்தி எங்களை விரட்டச் செய்வார். இதுபற்றி லதா மேடத்தை மூன்று முறை நேரில் சந்தித்துப் புகார் தந்தோம். அவர் தலைவரிடம் இதுபற்றிப் பேசியநிலையில், தலைவர் சத்தியை அழைத்து, `உன்மேல் பல்வேறு புகார்கள் வருகின்றன. இனியாவது திருந்திக்கோ. இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பேன்' என எச்சரித்திருக்கிறார்.

அதன்பின் சில காலம் பிரச்னையில்லாமல் இருந்தது. பிறகு `சந்திரமுகி' படத்திற்கு டிக்கெட் வாங்க நாங்கள் சென்னை வந்தபோது மீண்டும் பிரச்னை ஆரம்பித்து விட்டது. ஒருகட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளின் பட்டியல், தொண்டர்களின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட மன்றங்கள் குறித்த விவரத்தை தலைவர் சத்தியிடம் கேட்டிருக்கிறார். அதைத் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தராமல் இழுத்தடித்திருக்கிறார் சத்தி. இதுவும் தலைவரை அதிருப்திக்குள்ளாக்கியது. அதுபோல், மன்றத்திற்குக் கட்டுப்படாமல் கோவையில் சிலர் கட்சி ஆரம்பித்ததை தலைவர் ரசிக்கவில்லை. சத்தியின் பிடியில் மன்றம் இல்லை என்பதை தலைவர் நன்றாக உணர்ந்துவிட்டார். அதன் விளைவுதான் இப்போது புதிய தலைவர்!

ரஜினி யாரைக் கைகாட்டுகிறாரோ, அவரது வழியில்தான் நாங்கள் செல்வோம். நான்கு நாள் முன்பு சுதாகரை மண்டபத்தில் சந்தித்தோம். அவர் காட்டிய பரிவு எங்களைப் பரவசப்படுத்தியது. 96-ல் தமிழகத்தில் தலைவருக்கென்று இருந்த ஓர் அரசியல் சக்தி, விரைவில் உருவாகப் போகிறது. சத்தியின் மாற்றத்தின் மூலம் மன்றத்திற்கு புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறார் தலைவர்'' என உற்சாகத்தோடு முடித்தார் அந்த நிர்வாகி.

"மன்றப் பொறுப்பில் நாற்பது நாட்களுக்கு முன்பே சுதாகர் நியமிக்கப்பட்டுவிட்டார். இது சத்திக்கும் தெரியும். ஃபிலிம் சேம்பரில் நடிப்புத் துறைக்கான பட்டயப் படிப்பில் சுதாகரும், ரஜினியும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். சுதாகருக்கு பூர்வீகம் சென்னை, அபிராமபுரம்தான். தலைவரும் அவரும் வகுப்புத் தோழர்கள். இன்றுவரை இருவரும் மாறாத அன்போடு இருக்கிறார்கள். 3-ம்தேதி சென்னையில் ரசிகர்களை ரஜினி சந்திக்கும்போதுதான் முதல்முறையாக சுதாகர் லைம்லைட்டுக்கு வந்தார். ரஜினியிடம் கேள்விகளை வாசித்துக் காட்டியதும் அவர்தான். ரசிகர் சந்திப்பிற்குப் பின் ரஜினியிடம் சில மன்ற நிர்வாகிகள் சத்தியைப் பற்றிப் புகார் கடிதம் தந்திருக்கிறார்கள். அந்தக் கடிதம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதைப் பிரதிபலிப்பது போல் இருந்தது. இந்தக் கடிதப் போக்குவரத்துக்குக் காரணமாக இருந்தவரும் சுதாகர்தான். அந்தக் கடிதம் ஏற்படுத்திய தாக்கம்தான் இப்படியொரு முடிவை எடுக்க தலைவரைத் தூண்டியிருக்கிறது.

தவிர, சத்தியை நீக்கியதன் மூலம் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கான முன்னோட்டத்தை ஆரம்பித்து விட்டார். ஒருமுறை சிரஞ்சீவி ரஜினியிடம் பேசும்போது, `தமிழக மக்கள் உங்கள் மீது அதிகபட்ச மரியாதை வைத்திருக்கிறார்கள். நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்' என்றிருக்கிறார். அதற்கு ரஜினி, `கலைஞர் இருக்கும் வரை நான் வந்தால் நன்றாக இருக்காது. தவிர, எதிர்க்கட்சிகளுக்குப் பதில் சொல்லணும். சக நடிகர்களின் அரசியல் கட்சிகளுக்குப் பதில், பத்திரிகையாளர்களைச் சந்திப்பது என பல வேலைகள் இருக்கின்றன. தேர்தல் சமயத்தில் நான் வந்தால்தான் மக்கள் என்னைக் கவனிப்பார்கள்' என்றிருக்கிறார். அதனால்தான் சிரஞ்சீவி பேசும்போது, `அறுபது வயதுக்குப் பிறகு ரஜினி அரசியலுக்கு வருவார்' என்றார். இது கலைஞரை மனதில் வைத்துத்தான் சொல்லப்பட்டது'' என்றார் மற்றொரு முக்கிய நிர்வாகி.

``அரசியலுக்கு வருவதில் ரஜினி இப்போது உறுதியாக இருக்கிறார். அதனால்தான் ரசிகர்களின் ஏகோபித்த கோபத்திற்கு ஆளான சத்தியை மாற்றி ரசிகர்களிடம் பழைய உற்சாகத்தை அவர் கொண்டு வந்திருக்கிறார். உறுதியாக, இது அரசியலில் நுழைவதற்கான தொடக்கம்தான்'' என்றனர், இன்னும் சில நிர்வாகிகள் நம்மிடம் பூரிப்புடன்.

இதற்கிடையே, "நான் உடல்நலமில்லாமல் முழு ஓய்வில் இருக்கிறேன். என்னை ஓய்வில் இருக்கும்படி தலைவர் சொல்லியிருக்கிறார். வேறு எதுவும் சொல்வதற்கில்லை'' என்பதே சத்தியநாராயணாவின் பதிலாக இருக்கிறது. தான் நீக்கப்பட்டது குறித்து சத்தி எதுவும் கூறவில்லை.

இதில் எதுதான் உண்மை என்பதை அறிய நாம் ராகவேந்திரா மண்டபத்திற்கு விரைந்தோம். நீண்ட நேரத்திற்குப் பிறகு புதிய தலைவர்(?) சுதாகரைச் சந்தித்தோம். "சத்திக்கு உடல்நிலை சீராக இல்லாததால் அவரை ஓய்வில் இருக்குமாறு ரஜினி கூறியிருக்கிறார். ரசிகர்கள் சந்திப்பிலும் இதைக் கூறினார். நான் தாற்காலிகமாகத்தான் மண்டபத்திற்கு வந்திருக்கிறேன். ரசிகர்களின் குறைகளைக் கேட்டறிந்து ரஜினியிடம் தெரிவிக்கும் `போஸ்ட்மேன்' பொறுப்புதான் எனக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் ரஜினி மட்டும்தான் ஒரே தலைவர். அவர் மட்டும்தான் தீர்மானிக்கும் சக்தி. எவ்வளவு உயரத்தில் ஏறினாலும் பழையவற்றையும், நண்பர்களையும் மறக்காதவர் அவர். மற்றவர்களுக்கு ஆத்மார்த்தமாக உதவுவதில் அவருக்கு நிகர் அவர்தான். இனி நிர்வாகிகளின் குறைகளை ரஜினியே நேரடியாகத் தலையிட்டுத் தீர்ப்பார். அவரிடம் குறைகளை எடுத்துச் செல்லும் தாற்காலிகப் பொறுப்பு மட்டும்தான் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது'' என்று அவர் நம்மை வழியனுப்பி வைத்தார்.

சுதாகரின் வாக்குமூலம் ஒன்றே சத்திய நாராயணா மாற்றப்பட்டுவிட்டார் என்பதைச் சொல்லாமல் சொல்வதுபோல் இல்லை? ஸீ

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive