பழம்பெரும் நடிகர் நம்பியார், சென்னையில் நேற்று மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 89. இவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர்கள் கமல், ரஜினி உட்பட திரையுலகத்தினர் ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு, சென்னையில் இன்று மாலை நடக்கிறது.
கேரளாவில் உள்ள கண்ணூரில் பிறந்த மஞ்சேரி நாராயணன் நம்பியார், நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் 13 வயதிலேயே நாடகத்தில் நடிப்பதற்காக, நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியில் சேர்ந்தார். எம்.என்.நம்பியார் என்று பெயர் வைத்துக்கொண்டார். பல நாடங்களிலும் நடித்துள்ளார். 1935ம் ஆண்டு "பக்த ராமதாஸ்' படத்தில் வில்லன் நடிகராக அறிமுகமானார். மந்திரிகுமாரி, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், எங்கள் வீட்டு பிள்ளை, குடியிருந்த கோவில், படகோட்டி, நாளை நமதே, சவாலே சமாளி உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என 330 படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
"திகம்பரசாமியார், கல்யாணி, நல்லதங்கை' படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், கல்யாண்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ் என அனைவருடனும் நடித்துள்ளார். "திகம்பர சாமியார்' படத்தில் 11 வேடங்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதும், திரையுலக சாதனையாளருக்கான எம்.ஜி.ஆர்., விருதும் பெற்றுள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில், நம்பியாருக்கு நேற்று பகல் 12 மணிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டார். அதற்குள் 12.30 மணிக்கு, மாரடைப்பால் இறந்தார்.
இவரது உடலுக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். நம்பியாருக்கு ருக்மணி என்ற மனைவியும், சுகுமாரன் நம்பியார், மோகன் நம்பியார் என்ற மகன்களும் சினேகலதா என்ற மகளும் உள்ளனர். மகள் சினேகலதா அமெரிக்காவில் இருப்பதால், அவருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. அவர் இன்று மதியம் சென்னை வருவதால், மாலையில் நம்பியாரின் இறுதிச் சடங்கு நடத்தப்படும்.
பழம்பெரும் நடிகர் நம்பியார் காலமானார்
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, November 19, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment