"பெனசிர் புட்டோ கதி ஜெயலலிதாவுக்கு ஏற்படும்' என, விடுதலைப்புலிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக ஐகோர்ட் நீதிபதி மற்றும் போலீசிடம் அ.தி.மு.க., புகார் அளித்துள்ளது.
தனக்கு முழுமையான, "இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில், ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜெய்சந்திரன், "எஸ்.பி.,க்குக் குறையாத அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கருத்து பெற வேண்டும். பின், அறிக்கையை பாதுகாப்பு ஆய்வுக் குழுவிடம் அளிக்க வேண்டும். சட்டப்படி இக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தார்.
நேற்று பிற்பகலில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெய்சந்திரன் சேம்பருக்கு அ.தி.மு.க., வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், எல்.பி.சண்முகசுந்தரம், வெங்கடேஷ், கந்தசாமி உள்ளிட்டோர் சென்று, ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக தெரிவித்தனர். கடிதத்தின் நகல்களை டி.ஜி.பி., உள்துறைச் செயலருக்கு அனுப்ப வக்கீல்களிடம் நீதிபதி ஜெய்சந்திரன் கூறினார். சிறப்பு அரசு பிளீடருக்கும் நகலை வழங்கும்படி கூறினார். இதுகுறித்து மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக வக்கீல்களிடம் நீதிபதி தெரிவித்துள்ளார்.
வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், சண்முகசுந்தரம் கூறும்போது, "உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ஐகோர்ட் உத்தரவுப்படி இன்னும் பாதுகாப்புக் குழு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை' என்றனர். ஐகோர்ட் உத்தரவுப்படி உள்துறைச் செயலர், டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகியோரை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.
அவர்களிடம் அளித்த மனுவில், "எங்கள் கட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது. பசும்பொன் கிராமத்துக்குச் செல்ல இருக்கும் நிலையில், இதுபோன்ற கடிதம் வந்துள்ளது. இதை அனுப்பியவர் யார், பின்னணியில் யார் உள்ளனர் என்பதைக் கண்டறிந்து உரியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
"இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் போராடும் விடுதலைப்புலிகள் பிரச்னையில் தலையிட வேண்டாம்' என இறுதி எச்சரிக்கை விடுப்பதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. "உலகத் தமிழ் இனப் பாதுகாப்புக் கழகம், பேங்காக் கிளை, தாய்லாந்து; தலைமையகம் - ராபர்ட் ஸ்டிரீட், குயிஸ் ஹவுஸ், கனடா' என்ற முகவரி அந்தக் கடிதத்தில் உள்ளது. வெ.தமிழ்மைந்தன், ஆசிய திட்ட அலுவலர் என கையெழுத்திடப்பட்டுள்ளது.
மொத்தம் நான்கு பக்கம் உள்ள அந்தக் கடிதத்தில், "புலிகளைப் பற்றி பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். தேவையில்லாமல் தலையிட்டால் அதன் விளைவு மிகப் பயங்கரமாக இருக்கும். பாகிஸ்தானில் பெனசிர் புட்டோவுக்கு ஏற்பட்ட கதி ஏற்படும். புலிகளை யார் அழிக்க நினைத்தாலும், எதிராக செயல்பட்டாலும் அவர்களை அழிக்கத் தயங்க மாட்டோம்' எனக் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு விடுதலைப்புலிகள் மிரட்டல்!: தாய்லாந்தில் இருந்து வந்தது எச்சரிக்கை
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, October 29, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment