மின்சாரம் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. வீட்டு உபயோகத்துக்கு இரு மாதங்களுக்கு, 600 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால், 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நவம்பர் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.தமிழகத்தில் தற்போது மின்சாரப் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க, குறிப்பாக வீடுகளுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் வழங்கவும், விவசாயிகளது தேவைக்கேற்ப மின்சாரம் வழங்கவும், தமிழக அரசு மின் பகிர்மான மற்றும் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.நவம்பர் 1ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் இந்தக் கட்டுப்பாடுகள் வருமாறு:
* கிராமங்களில் தினமும் 10 மணி நேரம் மும்முனை மின்சாரமும், 14 மணி நேரம் ஒரு முனை மின்சாரமும் வழங்கப்படும். இதனால், விவசாயிகள் பகலில் ஆறு மணி நேரமும், இரவில் நான்கு மணி நேரமும் ஆக மொத்தம் 10 மணி நேரம் அவர்களது பம்புசெட்டுகளை இயக்கலாம். ஒரு முனை மின்சாரம் வழங்கும்போது விவசாயத்துக்கு அதைப் பயன்படுத்தக் கூடாது.
* நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டு இணைப்புகளுக்கு தினமும் குறைந்தபட்சம், 20 மணி நேரம் மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்.
* வீட்டு இணைப்புகளில் இரு மாதங்களுக்கு, 600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர், அவர்களது மின் தேவையில் 20 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்.
* உயர் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு கேட்பு (டிமாண்ட்) மற்றும் பயனீட்டில் 40 சதவீதம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். கேட்புக் கட்டணம் அதற்கேற்ப குறைக்கப்படும்.
* எல்.டி., - சி.டி., இணைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு பயனீட்டில் 20 சதவீதம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
* தாழ்வழுத்த (எல்.டி.,) மின் இணைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இரண்டு மாதங்களில், 2,000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள், மின் தேவையை 20 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்.
* மாலை நேரங்களில் (6 முதல் 10 மணி வரை) அனைத்து உயரழுத்த மற்றும் எல்.டி.,- சி.டி., மின் இணைப்பு உள்ள தொழிற்சாலைகளும், வணிக வளாகங்களும் மின் வாரியத்திடம் இருந்து மின்சாரம் பெறக்கூடாது. மீறினால் இணைப்பு துண்டிக்கப்படும்.
* கோவில் திருவிழாக்கள் தவிர தனியார் நடத்தும் விழாக்களுக்கு ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும்போது மின் வாரியம் மின்சாரம் வழங்காது.
* அனைத்து மருத்துவமனைகள், மத்திய மற்றும் மாநில அரசு கட்டடங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ரயில்வே இணைப்புகள், செய்தி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு இணைப்பகங்கள், கல்வி நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், பால் குளிர்படுத்தும் நிறுவனங்கள் ஆகிய அத்தியாவசிய மின் இணைப்புகளுக்கு, மின் வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இந்தக் கட்டுப்பாட்டு முறை டிசம்பர் இறுதியில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, தேவை இருப்பின் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய மின் கட்டண விகிதம் எப்படி?: மின் வினியோகத்தில் புதிய கட்டுப்பாட்டு முறை குறித்து தமிழக அரசின் அறிவிப்பு நேற்று வெளியானது. "வீட்டு இணைப்புகளில் இரு மாதங்களுக்கு, 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அவர்களது மின் தேவையில் 20 சதவீதம் அளவிற்கு பயனீட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டிற்கும் மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், "தாழ்வழுத்த (எல்.டி.,) மின் இணைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இரண்டு மாதங்களில், 2,000 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் அவர்களது மின் தேவையில் 20 சதவீதம் அளவிற்கு பயனீட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டிற்கும் மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பம் ஏற்பட்டது: தமிழக அரசின் அறிவிப்பில், வீட்டு இணைப்பில் இரு மாதங்களுக்கு, 600 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள், 50 சதவீத கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது 20 சதவீதம் கழித்த பின் வரும் 480 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.இதேபோல், தொழிற்சாலைகளுக்கான கூடுதல் கட்டண அறிவிப்பிலும் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, "தமிழக அரசின் அறிவிப்பு குறித்து எங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லை. அரசின் அறிவிப்பு எங்களுக்கு முறையாக வந்தவுடன் அதை ஆணையம் பரிசீலித்து, அதன் பின் எத்தனை யூனிட்டுக்கு மேல் போனால் அதிக கட்டணம் வசூலிப்போம் என்பது குறித்து முடிவு செய்து அறிவிப்போம்.
அதிர்ச்சி அளிக்கிறது: "தற்போதைய நிலையில் அரசு அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை அப்படியே போட்டுவிடுங்கள். நவம்பர் 1ம் தேதி தான் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்பதால், அடுத்து வரும் 10 நாட்களுக்குள் நாங்கள் பேசி முடிவு எடுத்துவிடுவோம்' என்ற குழப்பமான பதிலைத் தெரிவித்தனர்.மின் வினியோகம் தான் முறையாக இல்லையென்றால், கட்டணம் குறித்த அறிவிப்பைக் கூட தெளிவாக வெளியிடாமல் மக்களைக் குழப்பும் வகையில் அதிகாரிகள் பதில் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
அரசின் அறிக்கை குறித்து மின்துறை அமைச்சக வட்டாரங்களிடம் கேட்டபோது, "வீட்டு இணைப்புகளில் இரு மாதங்களுக்கு, 480 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களிடம் இருந்து 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதே போல், தொழிற்சாலைகள், 1,600 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் போது 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்' என்று உறுதிப்படுத்தினர்.
600 யூனிட்டுக்கு மேல் மின் கட்டணம் 50 சதவீதம்! அதிகரிப்பு: மின்சார சிக்கனத்துக்கு அரசு அதிரடி கட்டுப்பாட
Posted by
தமிழ்க்குமரன்
Monday, October 20, 2008

0 comments:
Post a Comment