இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்'(சிமி) என்ற பெயரில் இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, சிறப்பு தீர்ப்பாயம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை சற்று குறைந்தது. "சிமி' அமைப்பினர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதால், "சட்ட விரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின்' கீழ், 2001ம் ஆண்டு அந்த அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. கடைசியாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி, "சிமி' அமைப்பு மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இந்தத் தடை, 2010 வரை அமலில் இருக்கும். இதையடுத்து, தடையை எதிர்த்து, "சிமி' அமைப்பின் சார்பில், இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் டில்லி ஐகோர்ட்டின் சிறப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தாக்கல் செய்த மனுவில், "எங்கள் அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதற்கான புதிய ஆதாரங்கள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. அதனால், முந்தைய ஆதாரங்களின் அடிப்படையில், தடையை நீட்டிக்க முடியாது. எனவே, தடையை நீட்டித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்த போது, "தடை விதித்தது சரிதான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை காண்பிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அரசு தரப்பில், புதிதாக ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, "சிமி' அமைப்பிற்கு எதிராக பிறப்பித்த தடையை நீக்கி, நேற்று முன்தினம் சிறப்பு தீர்ப்பாய நீதிபதி கீதா மிட்டல் உத்தரவு பிறப்பித்தார். தீர்ப்பாயம் பிறப்பித்த இந்த உத்தரவால், மத்திய அரசுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகியது. ஜெய்ப்பூர், ஆமதாபாத் மற்றும் பெங்களூரு குண்டு வெடிப்புகளுக்கு, "சிமி' அமைப்பினரே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், தடை நீக்கப்பட்டது பெரிய சர்ச்சையை எழுப்பியது. பா.ஜ., உட்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
அதே நேரத்தில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவும், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கும், "சிமி' அமைப்பு மீதான தடையை நீக்கி, தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை வரவேற்றனர். "சிமி அமைப்பு மீது தடை விதிக்கக் கூடாது என நாங்கள் கூறி வந்தோம். அதை மீறி தடை விதிக்கப்பட்டது. இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. "சிமி'யை தடை செய்யும் போது, சிவசேனா, துர்க்கா வாகினி போன்ற அமைப்புகளுக்கும் ஏன் தடை விதிக்கக் கூடாது' என்று கேள்வி எழுப்பினர்."தடையை தீர்ப்பாயம் நீக்கியதால், காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு எதுவும் ஏற்படவில்லை' என விளக்கிய காங்., தகவல் தொடர்பாளர் ஷகீல் அகமது, "சிமி' அமைப்பிற்கு எதிராக தீர்ப்பாயம் புதிய ஆதாரங்களை கேட்டுள்ளது. சமீபத்தில் எங்கெல்லாம் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளனவோ, அந்த மாநில அரசுகள் தான், "சிமி' அமைப்புக்கு எதிராக ஆதாரங்களை மத்திய அரசிடம் தர வேண்டும். ஆனால், தரவில்லை' என்று கூறினார்.
"சிமி' அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சிறப்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், "தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில், பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்' என தெரிவிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் வக்கீல் கோபால் சுப்ரமணியம், "சீனியர் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 75 உயரதிகாரிகள், "சிமி'யின் செயல்பாடுகள் தேச விரோதமான செயல்களில் தொடர்புடையன என்ற அறிக்கையை எளிதில் நிராகரிக்க முடியாது' என்றனர்.
"இந்திய தேசியவாதத்துக்கு எதிரானது சிமி இயக்கம். சர்வதேச இஸ்லாமிய கொள்கைகளை இந்தியாவில் புகுத்துவது சிமி இயக்கத்தின் நோக்கம்' என்றும் மத்திய அரசு கூறியது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன், "சிமி' அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை மூன்று வாரங்களுக்கு பின் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
சிமி' இயக்கம் மீதான தடை நீடிப்பு! : அரசை காப்பாற்றியது சுப்ரீம் கோர்ட்
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, August 6, 2008

0 comments:
Post a Comment