தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்



அஞ்சாநெஞ்சரும், தளபதியும் கைகோத்து விட்டார்கள். தி.மு.க.வின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு இனி என்ன வேண்டும்?' என்று தி.மு.க.வினர் ஒருபக்கம் மகிழ்ச்சியில் ஊறித் திளைத்திருக்க, மறுபக்கம் இந்த இரு சகோதரர்களுக்கும் இடையில் இன்னமும் ஈகோ கொஞ்சம் எட்டிப்பார்ப்பதாகவே தெரிகிறது. உள்ளுக்குள் ஓர் உரசல் வந்து ஊடாடவே செய்கிறது. இந்த அண்ணன், தம்பி ஈகோ பிரச்னைக்கு தற்போதைய உதாரணம்தான் மலர்விழி சம்பவம்.
கலைஞரின் காலில் விழுந்ததால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஆண்டிபட்டி அ.தி.மு.க. சேர்மன் மலர்விழி, தற்போது தி.மு.க.வில் சேர்ந்து தமையனுக்கும், தம்பிக்கும் இடையே ஒரு புதிய தகராறை, தனக்குத் தெரியாமலே உருவாக்கி இருக்கிறார். ``இந்த மலர்விழி எந்த நேரத்தில் தி.மு.க.வில் சேர்ந்தாரோ தெரியாது, அவரால் ஆளும்கட்சியின் அண்ணன், தம்பிக்குள் மறுபடியும் ஈகோ பிரச்னை இழையோட ஆரம்பித்திருக்கிறது'' என்று புலம்பித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க.வினர். குறிப்பாக தென் மாவட்ட தி.மு.க.வில் உள்ள ஸ்டாலின் ஆதரவாளர்கள்.
ஜூலை 28-ம்தேதி! சென்னையில் உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு கார் வழங்கும் விழா நடந்தது. அப்போது ஸ்டாலின் முன்னின்று அறிமுகப்படுத்தி வைக்க, கலைஞரின் காலில் விழுந்து, கார் சாவியை வாங்கியதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார் ஆண்டிபட்டி யூனியன் அ.தி.மு.க. சேர்மன் மலர்விழி. `இவர் ஏன் கருணாநிதியின் காலில் விழுந்தார்?' என்று அ.தி.மு.க. வட்டாரங்களில் அதிர்ச்சி அலைபாய ஆரம்பித்த போது, மலர்விழியோ, ``இது தற்செயலாக நடந்த நிகழ்ச்சி. நான் என்றுமே அம்மாவின் தீவிர விசுவாசிதான்'' என்று அறிக்கை விட்டார்.. ஆனாலும்கூட அ.தி.மு.க. தலைமை அதில் சமாதானமாகவில்லை.
`இனி தன் தலை தப்பாது' என்பதைத் தெரிந்துகொண்டு மலர்விழி தி.மு.க.வுக்குத் தாவ முடிவெடுத்த நேரத்தில்தான், அவர் தன்னிலை விளக்கம் கொடுத்திருந்த போதிலும், ஆகஸ்ட் 2-ம்தேதி அவருக்கு கல்தா கொடுத்து விட்டார் ஜெ.
அந்த சூட்டோடு சூடாக மலர்விழியை தங்கள் கட்சியில் ஐக்கியமாக்க தி.மு.க. ஆவன செய்தது. ஆகஸ்ட் 6-ம்தேதி மதுரையில் நடந்த டி.எம்.எஸ். விழாவின் போது கலைஞர் முன்னிலையில் மலர்விழியைத் தி.மு.க.வில் சேர்க்க ஏற்பாடானது. அந்த விழா `அரசியல் விழா' அல்ல என்பதால் மலர்விழி சற்று `வெயிட்டிங்கில்' வைக்கப்பட்டார்.
இதற்கிடையே அமைச்சர் ஸ்டாலின் செப்டம்பர் மாதம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விசிட் அடிக்க திட்டம் தயாரானது. அப்போது தேனியில் பிரமாண்டமான கூட்டம் ஒன்றை நடத்தவும், அந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் மலர்விழியை தி.மு.க.வில் இணைக்கவும் ஜரூராக ஏற்பாடுகள் நடந்தன.
ஏற்கெனவே, `கடந்த 5-ம்தேதி நடந்த ஸ்டாலினின் தூத்துக்குடி விசிட், 18-ம்தேதி நடந்த மதுரை மேம்பாலத் திறப்பு விழா ஆகியவற்றில் அஞ்சாநெஞ்சரின் ஆதரவாளர்கள் தளபதிக்குப் போதிய அளவு ஆதரவு தரவில்லை. அதனால் தளபதி அப்செட்டானார்' என்ற அங்கலாய்ப்பும் கவலையும் ஸ்டாலின் ஆதரவாளர்களிடம் இருந்து வந்தது. இந்த நிலையில் அழகிரி தரப்பிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்காததால், ஸ்டாலினின் தேனி விசிட் ஒரு முடிவுக்கு வராமலேயே இருந்த நிலையில், மலர்விழி பிரச்னையில் ஒரு புதுத் திருப்பம்.
தளபதி, அழகிரி ஆகிய இருதரப்புக்கும் விசுவாசி போல இருந்து வரும் தேனி மாவட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர் மூக்கையாவுக்கு கடந்த 22-ம்தேதி அழகிரியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்திருக்கிறது. `மலர்விழியை அழைத்துக் கொண்டு உடனே மதுரைக்கு வரும்படி' அழகிரியிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பால் குழம்பிப் போயிருக்கிறார் மூக்கையா. உடனடியாக மலர்விழி மற்றும் போடி எம்.எல்.ஏ. லட்சுமணன் சகிதம் அன்று மதியம் மூன்று மணிக்கு மதுரையில் அழகிரியைச் சந்தித்திருக்கிறார் அவர். அழகிரியின் வீட்டில் அவரிடம் ஆசி பெற்றார் மலர்விழி.
உடனே கோபாலபுரத்துக்குத் தொடர்புகொண்டு மலர்விழிக்கு மறுநாள் காலையில் கலைஞரைச் சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் வாங்கித் தந்திருக்கிறார் அழகிரி. அன்றிரவே சென்னைக்கு விமானமேறிய மலர்விழி, மறுநாள் 23-ம்தேதி காலையில் கோபாலபுரம் வீட்டில் கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து கொண்டார். இந்தச் செய்தி மற்றும் மதுரையில் அழகிரியிடம் மலர்விழி ஆசி பெற்ற செய்தி போன்றவை அடுத்தடுத்த நாட்களில் பத்திரிகைகளில் வந்து பரபரத்தன. அதிலும் மதுரையில் அழகிரி வீட்டுக்கு மலர்விழி வந்தபோது, அங்கே முன்னேற்பாடாக இருந்த முரசொலி இதழ் புகைப்படக்காரர் காமிராவை `கிளிக்க', மறுநாள் அது பத்திரிகைகளில் படமாகக் காட்சி தந்தது.
இப்படி கலைஞர் முன்னிலையில் மலர்விழி கட்சியில் இணைந்த நேரம், ஸ்டாலின் அங்கே இருக்கவில்லை. மலர்விழி விவகாரம் தெரிந்து ஸ்டாலின் படு அப்செட்டானதாகக் கேள்வி. இதுபற்றி தனது தேனி மாவட்ட ஆதரவாளர்களிடம் பேசி, கொஞ்சம் வருத்தமாகவே அவர்கைளக் கடிந்து கொண்டாராம் ஸ்டாலின். `தளபதி விஷயத்தில் இப்படி `அசால்டாக' இருந்து விட்டோமே? சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டோமே' என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள் தேனி மாவட்ட ஸ்டாலின் ஆதரவாளர்கள். அதோடு தளபதியின் தேனி மாவட்ட விசிட் இனிமேல் இருக்குமோ? இருக்காதோ? என்ற கவலையும் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது.
இந்த வருத்தத்துக்கிடையிலும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு சிறிய நம்பிக்கைக் கீற்று. மதுரையில் அழகிரி நடத்திய டி.எம்.எஸ். விழாவின் போது தென்மண்டல தி.மு.க.வினர் அனைவருமே பிரிவு, பேதமில்லாமல் முடிந்தவரை அவரவர் `பங்களிப்பைச்' செய்திருக்கிறார்கள். அந்த விழாவுக்குப் பின்னால் இரு சகோதரர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எப்போதும் இல்லாத அளவுக்கு உறவு வளர்ந்திருக்கிறது. அழகிரி தரப்பினர், ஸ்டாலின் தரப்பினரிடம் அடிக்கடி பேசி வரும் நிலை உருவானது. நிலைமை இப்படியிருக்க, மலர்விழியால் இந்தப் புதிய பிணைப்புக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று மனதுக்குள் வேண்டியபடி உள்ளனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள். `ஸ்டாலினின் தேனி விசிட் ஏற்பாட்டை அண்ணன் சொன்ன பின்னால் பண்ணுங்க' என்று அவர்களுக்குத் தகவல் வந்திருப்பதாகக் கேள்வி.
இந்த மலர்விழி குழப்பத்தால், ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகிய இருதரப்புக்குமே ஆதரவாளர்கள் போல இருக்கும் தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர் மூக்கையா, போடி எம்.எல்.ஏ. லட்சுமணன், டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் போன்றோர்தான் மிகவும் குழம்பிப் போயிருக்கிறார்களாம்.
தி.மு.க.வுக்குள் நுழைந்த வேகத்தில் அவரையும் அறியாமல் ஏகப்பட்ட அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் ஆண்டிபட்டி அ.தி.மு.க. சேர்மன் மலர்விழியுடன் நாம் இதுபற்றிப் பேசினோம்.
``வெள்ளிக்கிழமை காலையில் அழகிரி அண்ணனின் அப்பாயின்ட்மெண்ட் கிடைத்தது. அவரே தலைவரிடம் பேசி விமானத்தில் என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார். சனிக்கிழமை காலை கோபாலபுரம் வீட்டில் கலைஞரைப் பார்த்தேன். ``ஏம்மா.. என் காலில் விழுந்ததால் உன்னைக் கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே?'' என்று கலைஞர் பரிவோடு என்னிடம் விசாரித்தார். கலைஞர் முன்னிலையில் தி,மு.க.வில் சேர்ந்தேன். என் மூன்று வயது மகள் யோகலட்சுமியை கலைஞர், ``கமான்.. கமான்'' என்று கூப்பிட்டு சந்தோஷமாகக் கொஞ்சியது இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறது'' என்றார் மலர்விழி. வேறு எதையும் அவரிடம் பேசி நம்மால் பெயர வைக்க முடியவில்லை.
தேனி தி.மு.க. மா.செ. மூக்கையாவிடம் பேசினோம். ``சேர்மனுக்கான தேர்தல் நடந்து முடிந்தபோதே கொஞ்சம் டிரை பண்ணியிருந்தால் மலர்விழியை தி.மு.க.வில் சேர்த்திருக்கலாம். இப்போதும் மலர்விழி விஷயத்தில் முடிவு எடுக்க லேட்டாகி கடைசியில் அவர் அழகிரி அண்ணனைச் சந்தித்ததும், அவரே தலைவரிடம் பேசி, சென்னைக்கு அனுப்பி கட்சியில் சேர வைத்து விட்டார்.
தளபதியின் தேனி மாவட்ட விசிட் இப்போது தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15-ம்தேதி திருச்சியில் நடக்க இருக்கும் முப்பெரும் விழா மீதுதான் இப்போது தளபதியின் முழுக்கவனமும் இருக்கிறது. நேரு, பொன்முடி, திருச்சி சிவா ஆகியோர் உதவியுடன் அதை பிரமாண்டமாக, ஒரு மாநாடு போல பிரமாதப்படுத்த அவர் திட்டமிட்டிருக்கிறார். மீண்டும் ஒருமுறை தென் மாவட்ட விசிட் அடிக்கும் முன், அதைத் திட்டமிட்டு சிறப்பாகச் செய்யவே தளபதி விரும்புகிறார்'' என்றார் மூக்கையா.
மலர்விழி விவகாரத்தால் கட்சிக்குள் பூத்திருக்கும் சலசலப்பு பற்றி நாம் கேட்க முயன்றபோது, ``அப்படியெல்லாம் எதுவுமில்லை. அப்படியே பிரச்னை வந்தாலும் அது படிப்படியாகத் தீர்ந்து விடும்'' என்றார்.
அ.தி.மு.க. தரப்பில் மலர்விழியைப் பற்றி விசாரித்தோம்.
``ஆண்டிபட்டி யூனியன் சேர்மன் பதவி மகளிர்க்கு அதுவும் எஸ்.சி. பிரிவுக்கு ஒதுக்கப்பட்டநிலையில் சுயேச்சையான மலர்விழி, சேர்மன் பதவி கேட்டு அவராகத்தான் அ.தி.மு.க.வுக்கு வந்தார். அப்போது அ.தி.மு.க.வில் நாங்கள் சேர்த்துக் கொண்ட இரண்டு பேரில் அவரும் ஒருவர். சுயலாபத்துக்காக கட்சிக்குள் வந்த மலர்விழி, கடைசிவரை கட்சியில் ஒட்டாமலேயே இருந்தார். கட்சிக்கு அவர் எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. அந்த அம்மாவை ஜெயிக்க வைக்க, ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்தலை மீண்டும் நடத்த நாங்கள் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமில்லை. ரத்தக் காயம் எல்லாம் பட்டு ஜெயிலுக்குப் போனோம். ஆனால், அந்தம்மா இப்போது சொந்த லாபத்துக்காக தி.மு.க.வுக்குப் போய் விட்டார். நடுவில் வந்த அவர், நடுவிலேயே போய் விட்டார். `மலர்விழி ஏற்கெனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டு விட்டார்' என்று ஓ.பி.எஸ். அறிக்கை கொடுத்திருக்கிறார். மலர்விழியால் தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் எந்தக் குழப்பமும் இல்லை. இழப்பும் இல்லை'' என்றனர் அவர்கள்.
யார் என்ன சொன்னாலும் மலர்விழியின் திடீர் நுழைவு, இணையத் தொடங்கியிருந்த இரு சகோதரர்களின் கைகளுக்குள் நுழைந்து சற்று இடைவெளியையும் உரசலையும் ஏற்படுத்தியிருப்பதைப் போலத்தான் தெரிகிறது. என்கிறார்கள் உடன் பிறப்புகள். ஸீ

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive