தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

கிளிநொச்சியை கைப்பற்றியது இலங்கை ராணுவம் சுற்றி வளைப்பு! புலிகள் தலைமையகம் வீழ்ந்ததால் பெரும் பதட்டம்

இலங்கையில் நடந்துவரும் உள்நாட்டுச் சண்டையில், தற்போது இலங்கை ராணுவத்துக்கு கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளது. அதிபர் ராஜபக்ஷே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, "கிளிநொச்சி ராணுவ வீரர்கள் கைவசம் வந்துவிட்டது' என்றார்.இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. புலிகளை அடியோடு ஒழிப்பதற்கான முயற்சியை கடந்த இரு மாதங்களுக்கு முன் இலங்கை ராணுவம் தீவிரப்படுத்தியது.

புலிகள் மீது கடும் தாக்குதல் : கடந்த சில வாரங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே சண்டை தீவிரமடைந்தது. துவக்கத்தில் கடும் உயிரிழப்பை சந்தித்த இலங்கை ராணுவம் பின், சுதாரித்துக் கொண்டு படிப்படியாக முன்னேறியது. நேற்று முன்தினம் கிளிநொச்சியின் வடக்கு பகுதியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள பரந்தன் என்ற நகரத்தையும், தெற்கு பகுதியில் இரணமேடு என்ற இடத்தையும் இலங்கை ராணுவம் கைப்பற்றியது. இந்த இரு பகுதிகளில் இருந்தும் கிளிநொச்சியை நோக்கி ராணுவம் வேகமாக முன்னேறியது. இதுதவிர, கிழக்கு பகுதி வழியாகவும் ராணுவ வீரர்கள் முன்னேறினர். ராணுவத்துக்கு ஆதரவாக இலங்கை போர் விமானங்களும் புலிகள் மீது கடும் தாக்குதல் நடத்தின. புலிகளின் கடும் எதிர்ப்பை முறியடித்து ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக நேற்று கிளிநொச்சிக்குள் நுழைந்தனர். ஏராளமான பீரங்கிகளும் கிளிநொச்சிக்குள் நுழைந்தன.கிளிநொச்சியை கைப்பற்றி விட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, புலிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தப்பி ஓடிவிட்டதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களை கீழே போட்டு ஓட்டம் ; இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டபயா ராஜபக்ஷே கூறுகையில், "வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் வழியாக கிளிநொச்சிக்குள் நுழைந்த ராணுவம், நகரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. கிளிநொச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இன்று (நேற்று) அதிகாலையில் நடந்த சண்டையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆயுதங்களை கீழே போட்டு விட்டு புலிகள் உடனடியாக சரண் அடைய வேண்டும். விரைவில் புலிகள் அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்படுவர்' என்றார்.எனினும், இதுகுறித்து புலிகள் தரப்பில் இருந்த எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது பற்றியும் தகவல் வெளியிடவில்லை. ஆனால், பரந்தனை ராணுவம் கைப்பற்றியதில் புலிகள் தரப்பு தளபதி இளம்பெரியான் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது.பின்னடைவு: கிளிநொச்சியை கைப்பற்றியதன் மூலம், கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டு போரில் ராணுவத்துக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளிநொச்சியை இழந்ததன் மூலம், புலிகளுக்கு பலத்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

புலிகளின் வான்படை தளம், தகவல் தொடர்பு மையங்கள், ஆலோசனை மையங்கள் ஆகியவை கிளிநொச்சியில் தான் இருந்தன. போர் நிறுத்த காலத்தில் கிளிநொச்சி தான், புலிகளின் முக்கிய ஆலோசனை மையமாக விளங்கியது. பேச்சுவார்த்தைக்காக நார்வே உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் புலிகள் அமைப்பின் தலைவர்களை கிளிநொச்சியில் தான் சந்தித்துப் பேசினர்.இத்தனை சிறப்பு மிக்க கிளிநொச்சியை இழந்தது, புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



புலிகள் சரண் அடைய ராஜபக்ஷே வலியுறுத்தல்: கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே "டிவி'யில் உரையாற்றினார். அவர் பேசுகையில், "கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்த சண்டையில், இலங்கை ராணுவ வீரர்கள் தற்போது மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற ராணுவ வீரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் "ஹீரோ'க்களாக உருவெடுத்துள்ளனர். தோல்வி சந்தித்துள்ள புலிகள் உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, ராணுவத்திடம் சரண் அடையும்படி இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன்' என்றார். மேலும் அவர், "இத்துடன் சண்டை முடியாது. புலிகள் சக்தி இனி சுருங்கி விடும். தனியாக ராஜ்ஜியம் அமைக்க புலிகள் முயன்றது இந்த வெற்றியால் முறியடிக்கப்பட்டது' என்றார். கிளிநொச்சி வீழ்ந்ததையடுத்து, இலங்கை பங்குச் சந்தையில் பங்குகள் விலை ஏற்றம் கண்டன.


தற்கொலை படை தாக்குதல்: கொழும்பில் உள்ள விமானப் படை தலைமை அலுவலகம் அருகே பயங்கர சத்தத்துடன் நேற்று குண்டு வெடித்தது. இதில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இலங்கை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல். காயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என்றனர். இந்த தாக்குதலை அடுத்து, கொழும்பு முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.


விடுதலைப்புலிகள் ஓட்டம் எங்கே?: பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் தலைமையகமாக செயல்பட்டு வந்த கிளிநொச்சியை புலிகள் இழந்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து தப்பி ஓடிய புலிகள் எங்கு மறைந்துள்ளனர் என்பது குறித்து இலங்கையில் பரபரப்பாக பேசப்படுகிறது.இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:


புலிகள் கிளிநொச்சியை இழந்தாலும், முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சில முக்கியமான இடங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. மேலும்,வவுனியாவின் அடர்ந்த வனப் பகுதியும், புலிகளின் முக்கியமான மறைவிடமாக உள்ளது. கிளிநொச்சியில் இருந்து தப்பி ஓடிய புலிகள், இந்த வனப் பகுதிக்குள் தான் மறைந்து இருப்பர் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இங்கிருந்தபடியே, இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது தாக்குதல்களை அவர்கள் தொடர்வர். குறிப்பாக, கொரில்லா முறை தாக்குதல்களை அவர்கள் நிகழ்த்தக் கூடும். இதனால், இலங்கை ராணுவத்துக்கு புலிகளால் தொடர்ந்து நெருக்கடி ஏற்படும்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive