தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றி, இலங்கை ராணுவ தலைமை தளபதி தெரிவித்த கருத்துகளுக்கு, இலங்கை பாதுகாப்பு செயலர் வருத்தம் தெரிவித்துள்ளார். இத்தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான ராணுவ தாக்குதல்களை, இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என, "தமிழக அரசியல் கோமாளிகள் கூறிவரும் கருத்துக்களை, காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்காது. போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை, இந்திய அரசு வற்புறுத்தாது என இலங்கை ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா காட்டமாக பேட்டியளித்திருந்தார். மேலும், தமிழகத்தில் உள்ள கறைபடிந்த அரசியல்வாதிகள், விடுதலைப் புலிகளால் விலைக்கு வாங்கப் பட்டவர்கள், விடுதலைப் புலிகள் அழிந்தால் அவர்களது வருமானம் போய்விடும் என்பதற்காக இப்படி அவர்கள் கூறியுள்ளனர்' என்றும் குற்றம் சாட்டினார்.
ராணுவ தலைமை தளபதியின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றதுடன், சரத்பொன்சேகாவின் உருவ பொம்மையும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அலுவலகம், ராணுவ தலைமை தளபதி பேசியது குறித்து, அதிருப்திதெரிவித்து கொழும்பில் உள்ள இலங்கை பாதுகாப்பு செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
இதையொட்டி, இந்த விவகாரம் தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ராணுவ தலைமை தளபதி பேசிய பேச்சுக்கள், தமிழக அரசியல் தலைவர்களை புண்படுத்தியிருக்கும் பட்சத்தில், அதற்காக, தாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் இலங்கை பாதுகாப்பு செயலர் தெரிவித்ததாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில், தமிழர்கள் மீதான தாக்குதலை, இலங்கை ராணுவம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ள காலகட்டத்தில், இலங்கை அரசு, வருத்தம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தளபதி கருத்து: அரசு தெரிவித்தது வருத்தம்
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, December 9, 2008

0 comments:
Post a Comment