ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் மவுலானா மசூத் அசாரை வீட்டுக் காவலில் வைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. அவனின் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என, நம்பப்படும் 20 பேரை பிடித்துத் தரும் படி, பாகிஸ்தான் அரசிடம் இந்தியா பட்டியல் அளித்தது. ஆனால், அவர்களை பிடித்துத் தர பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது. இருப்பினும், அமெரிக்காவின் நிர்பந்தத்தின் பேரில், தங்கள் நாட்டில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட, லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் ஜாகிர் ரகுமான் லக்வி உள்ளிட்ட 20 பேரை கைது செய்தது. முசாபர்பாத்தில் பாகிஸ்தான் அதிரடிப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் இவர்கள் சிக்கினர். இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப் பின் நிறுவனர் மவுலானா மசூத் அசாரை வீட்டுக் காவலில் வைக்க பாகிஸ்தான் நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர். அவன் வெளியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது, அதிலிருந்த பயணிகளை விடுவிப்பதற்காக, இந்திய சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டவன் அசார். இவனுடன் வேறு இரண்டு பயங்கரவாதிகளும் அப்போது விடுவிக்கப்பட் டனர். அந்த அசார் தான் தற்போது பகவல்பூர் என்ற இடத்தில் உள்ள மாதிரி நகர பகுதியில் பல அடுக்குமாடி கட்டடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளான்.
"பாகிஸ்தானில் பதுங்கியுள்ள 20 பயங்கரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என, இந்திய அரசு அளித்த பட்டியலில் இவனின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், அரசு வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதி செய்யவில்லை. இதற்கு முன்னரும், அசாரை பிடித்துத் தர வேண்டும் என, இந்தியா கோரிக்கை விடுத்த போது, அவனின் நடமாட்டத் திற்கும் பாக்., அரசு தடை விதித் தது. அதன்பின், அந்த தடை கோர்ட் உத்தரவின் பேரில், விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு நிதி திரட்டுவது, அதற்கு ஆதரவாக பேரணிகளை நடத்துவது போன்ற வேலைகளில் அசார் ஈடுபட்டு வந்தான். இந்திய சிறையிலிருந்து 1999ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட பின்னர் தான், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை அசார் நிறுவினான். 2001ம் ஆண்டு இந்திய பார்லிமென்ட் மீது நடந்த தாக்குதலுக்கும், 2003ம் ஆண்டு பாக்., அதிபராக இருந்த முஷாரப் மீது நடந்த தாக்குதலுக்கும் இவனின் அமைப்பே காரணம்.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப் புக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பின் பெயரை குதாம்-உல்-இஸ்லாம் என, பெயர் மாற்றினான். அந்த அமைப்பு அசாரின் தம்பி முப்தி அப்துல் ரவூப் தலைமையில் செயல்பட்டு வந்தது. பாகிஸ்தானில் பணிபுரிந்த அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பியர்ல், 2002ம் ஆண்டு கடத்தி கொலை செய் யப்பட்டார். அவரின் படுகொலைக்கு அசாரின் நெருங்கிய உதவியாளரான ஷேக் அகமது சயீது ஒமரே காரணம்.
அமெரிக்க பயணி பயணித்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியதற்காக, அசார் மீது வழக்கு தொடர அமெரிக்க போலீசார் ஆர்வமாக உள்ளனர். அவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாக்., அரசிடம் கோரினர். ஆனால், அசார் கடத்தல்காரன் அல்ல எனக் கூறி அமெரிக்காவின் கோரிக்கையை பாக்., அரசு நிராகரித்து விட்டது.
இதற்கிடையில், லஷ்கர்-இ-தொய்பா உட்பட தடை செய் யப்பட்ட பயங்கரவாத அமைப் புகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை தொடரும். "எதிர்பார்க்கும் முடிவு' எட்டப்படும் வரை, பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவர் என, பாக்., ராணுவம் அறிவித்துள்ளது. "நாடு முழுவதும் இந்த வேட்டை தொடரும். எவ்வளவு நாட்களுக்கு இந்த வேட்டை தொடரும்' என, உறுதியாகக் கூற முடியாது என, ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியா வருகிறது பாகிஸ்தான் குழு: மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி தலைமையிலான உயர்மட்டக் குழு இந்தியாவுக்கு வருகிறது. ஆதாரங்களை திரட்டுவது மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்வதில், இந்திய புலனாய்வு நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இக்குழுவினர் வருகின்றனர். பாக்., பிரதமரின் ஆலோசகர் முகமது அலி துரானியும் குழுவில் இடம் பெறுகிறார். குழுவினர் இந்தியா வரும் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை
ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாருக்கு வீட்டுக் காவல்!
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, December 9, 2008

0 comments:
Post a Comment