பயங்கரவாதிகளின் தாக்குதலில், அப்பாவி மக்களின் மரணங்களை சகிப்பது தான் பெரும் தவறு. வி.ஐ.பி.,க்களின் உயிர் மட்டுமல்ல, சாதாரண மக்களின் உயிரும் விலை மதிப்பானது தான். இதை கவனத்தில் கொண்டு, வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பை குறைக்கலாம்!'- இப்படி விளாசி இருப்பவர் வேறு யாருமல்ல, காங்கிரஸ் கட்சியின் இளம் பொதுச்செயலர் ராகுல். அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் எண்ணற்ற உயிர்கள் பலியாகி இருப்பது தொடர்பாக மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேசினார்; அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு போலீசையும் "அரசியலாக்கி' விளையாடும் வி.ஐ.பி.,க்களை சூடான வார்த்தைகளால் கண்டித்தார்.
பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடித்து மக்களை காப்பது தொடர்பாக அவர் பேசியதாவது:
ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது தான். ஒவ் வொரு உயிரும் காப்பாற்றப்பட வேண்டும். பயங்கரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் போது, அதை சகித்து பழகி வருகிறோம். நாம் செய்யும் பெரிய தவறு இது தான்.
அப்பாவி மக்களில் ஒருவரின் உயிர் பறித்தாலே நாங்கள் சகிக்க மாட்டோம் என்பதை பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அப்பாவி மக்களின் உயிர் ஒவ்வொன்றும் விலை மதிப்பில்லாதது தான். அப்படி பார்க்கும் போது, வி.ஐ.பி.,க்கள் மட்டும் மிக அதிக பாதுகாப்புடன், கருப்புப்பூனைகளுடன் வலம் வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை நாம் உணர வேண்டும்.
வி.ஐ.பி.,க்கள் தலையீடு கூடாது: மும்பையில் நடந்த பயங்கரம், இதுவரை இல்லாத அளவுக்கு நடந்துள்ள கொடூரம். பல நாளாக நடந்துவரும் பயங்கரவாத வன்முறையின் தொடர்ச்சிதான் இது.இந்திய மக்களுக்கு , ஜனநாயகத்தில் கிடைக்கக்கூடிய எல்லா உரிமைகளும் கிடைத்துள்ளது. பேச்சு சுதந்திரம் உட்பட எல்லா உரிமைகளையும் அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள உரிமை உண்டு. இதையும் மும்பை சம்பவத்துக்கு பின் நிரூபித்துவிட்டனர். அதில் தவறே இல்லை.மக்களின் பாதுகாப்புக்கு தான் போலீஸ் , பாதுகாப்புப்படையினர் அமர்த்தப்படுகின்றனர். அவர்கள் விஷயத்தில் அரசியல்வாதிகள் தலையீடு இருக்கக் கூடாது. அவர்களின் பணி மாற்றம், பதவி உயர்வு உட்பட எந்த ஒரு விஷயத்திலும் அரசியல் வி.ஐ.பி.,க்கள் தலையீடு இருக் கக்கூடாது. இதை காங்கிரஸ் எம்.பி.,க் கள், எம்.எல்.ஏ.,க்கள் பின்பற்றுவர் என்று நம்புகிறேன்.மும்பையில் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஓம்பாலே என்பவர், பயங்கரவாதியை எதிர்த்து உயிர்நீத்தார்.
அவரிடம் துப்பாக்கி இல்லாததால், அவரால் அவனை திருப்பி சுடமுடியவில்லை; அவரை காத்துக் கொள்ள முடியவில்லை. நம் நாட்டில் உள்ள ஒரு உயிரை கூட கொல்ல, நாம் அனுமதிக்க மாட்டோம் என்ற அறைகூவலை நாம் பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தியராகிய நம் எல்லாரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கின்றனர் பயங்கரவாதிகள். "நாம் எல்லாரும் ஒருவர் தான்' என்பதை நம் ஒற்றுமையின் மூலம் காட்டினால்,பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்கிவிடலாம்.இவ்வாறு ராகுல் பேசினார்.
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, December 16, 2008

0 comments:
Post a Comment