இலங்கையில் கிளிநொச்சியை நோக்கி முன்னேறிவரும் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தை எதிர்த்து புலிகள் கடும் சண்டையிட்டு வருவதால், அவர்கள் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக இலங்கை ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளதாவது:கிளிநொச்சியை நோக்கி இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். அத்துடன் முல்லைத் தீவுப் பகுதியிலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். கிளிநொச்சி அருகே அடம்பன் பகுதியில் நேற்று முன்தினம் ஆறு இடங்களில் நடந்த கடும் சண்டையில் புலிகள் தரப்பில் அதிகம் பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில், ராணுவ தரப்பில் சிறிதளவு இழப்பு ஏற்பட்டது.இதேபோல், முல்லைத் தீவு பகுதியிலும் ராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் தொடர்ந்து சண்டையிட்டு முன்னேறி வருகின்றனர். அவர்களுடன், புலிகளும் தீவிரமாக சண்டையிடுகின்றனர்.
இந்தச் சண்டையில், புலிகள் வசமிருந்த சில பகுதிகளை ராணுவத்தினர் பிடித்தனர். முல்லைத் தீவில் உள்ள மல்லவராயன் காடு முறிப்பு, குமுளமுனை மற்றும் ஒலுமாடுவிலும் நேற்று முன்தினம் சண்டை நடந்தது. இந்தப் பகுதிகளில் புலிகளின் நிலைகள் பலவற்றை ராணுவத்தினர் கைப்பற்றினர்.இவ்வாறு ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதற்கிடையில், "இலங்கையின் வடபகுதியில் நடக்கும் ராணுவ நடவடிக்கை ஈடுஇணையற்றது; உலகின் எந்தப் பகுதியிலும் நிகழாதது' என, அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.
"கடந்த 2006 ஆகஸ்டில் முல்லைத் தீவில் ராணுவத்தினர் சண்டையை துவக்கினர். அதன்பின், ராணுவத்திற்கு எந்தப் பின்னடையும் ஏற்படவில்லை. எங்களின் ராணுவத்தினர் நடத்தும் சண்டையைப் போல, உலகின் எந்தப் பகுதியிலும் நடந்திருக்காது. ஒரு சிறு பின்னடைவை கூட சந்திக்காமல், அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்' என, அவர் மேலும் கூறியுள்ளார்.
கிளிநொச்சி அருகே கடும் சண்டை : புலிகளுக்கு பலத்த சேதம்
Posted by
தமிழ்க்குமரன்
Sunday, December 14, 2008

0 comments:
Post a Comment