டாஸ்மாக்' மதுக்கடைகள் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைக்கப்படுகிறது. மேலும், "புதிய கடைகள் இனி திறக்கப்படாது' என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழக அரசின், "டாஸ்மாக்' நிறுவனம், 2003ம் ஆண்டு, நவம்பர் 29ம் தேதிமுதல் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 41 மதுபானக் கிடங்குகள் மற்றும் 6,700 சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன.இதன்மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறுகிறது. ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை அதிகரித்து வந்துள்ளது. தனது வருவாயில் இருந்து ஆயத்தீர்வை, அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் திருப்பித் தர வேண்டிய விற்பனைக் கட்டணம், இறக்குமதி அனுமதி உரிமக் கட்டணம், விற்பனை வரி, சிறப்பு உரிமைக் கட்டணம் ஆகிய வகைகளில் அரசுக்கு, "டாஸ்மாக்' நிறுவனம் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், "டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டுமென பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இருந்தபோது, ராமதாசின் கோரிக்கையை ஏற்று, காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்பட்டு வந்த மதுக்கடைகளின் நேரத்தை முதல்வர் கருணாநிதி குறைத்தார்.இதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை மதுக்கடைகள் திறந்திருந்தன. இந்நிலையில், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரி, ராமதாஸ் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் முதல்வரைச் சந்தித்தனர்.அவர்களிடம் முதல்வர் கருணாநிதி, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக உறுதியளித்தார். இதன் முதல்கட்டமாக, கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைத்து, முதல்வர் நேற்று உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அரசு கூறியிருப்பதாவது:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமென முதல்வர் தெரிவித்தார்.கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் 1,300 பார்கள் மூடப்பட்டுள்ளன. 128 சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், படிப்படியாக முழு மதுவிலக்கை அடையும் வகையில், முதல் கட்டமாக, இனி புதிய மதுக்கடைகளை தமிழகத்தில் திறப்பதில்லை என முதல்வர் அறிவித்துள்ளார்.
தற்போது மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்பதை, ஒரு மணி நேரம் குறைத்து, வரும் ஜனவரி 1ம் தேதியிலிருந்து காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படுமென முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இனி அடுத்தடுத்த கட்டங்கள் பற்றி அவ்வப்போது அறிவிக்கப்படும்.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஜனவரி 9, திருமங்கலம் இடைத்தேர்தல், ஐந்து மாதங்களில் லோக்சபா பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரவு 10 மணிக்கு மேல், 'சரக்கு!' நோ!' : விற்பனை நேரத்தை குறைத்தது அரசு
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, December 23, 2008

0 comments:
Post a Comment