தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்


வட சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெய்த மழைநீர் இன்னும் வடியவே இல்லை. கொசுத் தொல்லை, சாக்கடை பொத்துக் கொண்டு நடுத்தெருவில் ஓடுகிறது. காலரா, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் என்று தினமும் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிறார்கள். உண்மையில் இந்த மழை தமிழ்நாட்டுக்குத் தேவையான நீர்ப் பிரச்னையை சரிக்கட்டி விட்டதா?

``இல்லை'' என்கிறார்கள் காவிரி டெல்டா விவசாயிகள். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி இந்த வருடம் ஜூன் முதல் அக்டோபர் வரை 167.17 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் நமக்குத் தந்திருக்க வேண்டும். வழக்கம்போல் தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பதால் 110 அடி இருக்கவேண்டிய மேட்டூர் நீர்மட்டம் 87 அடியாக குறைந்துவிட்டது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சாகுபடிக்குத் தயாராக வேண்டிய ஒண்ணரை லட்சம் ஏக்கர் விளைநிலம் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிறது. வருடம் தவறாமல் அரங்கேறும் தொடர்கதையாகிவிட்ட இந்த காவிரி பிரச்னைக்கு ஒரு முடிவே கிடையாதா?

இது ஒரு பக்கம் இருக்க, "தமிழகம் எதிர்நோக்கியுள்ள தண்ணீர்ப் பிரச்னை பூதாகரமானது'' என்கிறார் முன்னாள் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சி.எஸ். குப்புராஜ்.

எப்படி?

"தாமிரபரணி தவிர்த்து காவிரி, தென்பெண்ணை, பாலாறு, கொரட்டலையாறு என தமிழகத்தின் எல்லாப் பெரிய நதிகளும் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகித்தான் தமிழ்நாட்டுக்குள் வருகின்றன. வைகை தமிழகத்திலேயே உற்பத்தியாகிறது என்றாலும், தண்ணீருக்கு கேரளாவின் பெரியாற்றைத்தான் நம்பி இருக்கிறது. பக்கத்து மாநிலங்களில் இருந்து வரும் இந்த ஆற்றுத் தண்ணீரையே பெருமளவில் நம்பி இருக்கிறது தமிழகம். இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா என எல்லாப் பக்கத்து மாநிலங்களும் பிரச்னை செய்வதால் எதிர்காலத்தில் கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரைக்கும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் தமிழகத்தில் பெரிய தட்டுப்பாடு வரும். `ஒரு நீர் ஆதாரத்தை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பின்னர் அதன் பயன்பாட்டு உரிமை அவர்களுக்குத்தான் சொந்தம்' என்கிறது சர்வதேச நதிநீர் ஒப்பந்தம். அதன்படி காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். ஆனால், இன்று நமக்குச் சொந்தமான நதியையே மற்றவர்களிடம் பிச்சை கேட்கும் நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். இப்பொழுது, புதிதாக ஒக்கேனக்கல் பிரச்னை வேறு சேர்ந்துகொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் வற்றாத ஜீவநதியான பாலாற்றின் பாதையில் கர்நாடகம் புதிய பல ஏரிகளை உருவாக்கியதன் விளைவு, பாலாறு வறண்டுவிட்டது. இப்போது, மழைக் காலங்களில் பாலாற்றில் ஓடும் மூன்று நாள் தண்ணீருக்கும், பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட திட்டமிட்டுள்ள ஆந்திராவின் முயற்சியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் முயற்சி வெற்றிபெற்றால் பாலாறு செத்த ஆறாக ஆகிவிடும்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்திலும் ஆந்திரா சிக்கல் செய்கிறது. 1996-ல் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வேலைகள் முடிந்த பிறகு தொடங்கி, இன்றைக்கு வரைக்கும் ஒப்பந்தப்படி ஒரு வருடம்கூட 15 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரா வழங்கியதில்லை. வேண்டா வெறுப்பாக மிகக் குறைவான அளவு தண்ணீரையே திறந்துவிட்டிருக்கிறது. இதில் இடையில் விவசாயிகள் பைப் போட்டுத் திருடுவதை, கட்டுப்படுத்தவும் ஆந்திரா அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை'' என்கிறார் குப்புராஜ்.

கர்நாடகம், ஆந்திராவுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் _ஆழியாறு, பவானி, புதிதாக நெய்யாறு என கேரளா உருவாக்கும் பிரச்னைகள் பல.

"முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பேச்சிப்பாறை அணையும் கட்டப்பட்டது. இந்த அணை இப்போது பலமாகத்தானே இருக்கிறது? 2000 வருடம் பழமையான கல்லணையும் ஏரிகளும் பலமாக உள்ளன. இவை உடைந்துவிடும் என யாரும் சொன்னதில்லையே? முல்லைப் பெரியாறில் கேரளா பிரச்னை செய்வதன் உண்மையான நோக்கம் அதன் கீழ்ப்பகுதியில் இருக்கும் இடுக்கி அணைதான். முல்லைப் பெரியாறு அணையைவிட 34 மடங்கு பெரியதாக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு தண்ணீர் கொண்டு வரத்தான் முல்லைப்பெரியாற்றில் அவர்கள் பிரச்னை செய்கிறார்கள்'' என்கிறார் நீரியல் வல்லுநர் கோமதிநாயகம்.

சிக்கலிலுள்ள இன்னொரு திட்டம் நெய்யாற்றுத் திட்டம். இத்திட்டத்தின்படி நெய்யாற்றில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு விநாடிக்கு 150 கன அடி நீரை கேரளம் தரவேண்டும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் சேர்ந்த பிறகு தொடங்கி இன்று வரைக்கும் இந்தத் தண்ணீரை தர மறுத்து வருகிறது கேரளம். இத்தனைக்கும் இந்த அணைக்கு தண்ணீர் தமிழகப் பரப்பில் இருந்துதான் செல்கிறது.

சரி, இதற்கு என்னதான் தீர்வு?

"நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு அதிகாரத்தின் மூலமும் இதற்கு தீர்வுகாண முடியாது என்பது ஏற்கெனவே தெளிவாகிவிட்டது'' எனக் கூறும் குப்புராஜ், இதற்கு முன்வைக்கும் ஒரே தீர்வு... "இந்திய நதிகள் இணைப்பு. இவற்றைச் செயல்படுத்துவது இயலாத ஒன்றல்ல. பெரியாறு - வைகை இணைப்பும் காவிரி - வெள்ளாறு - வீராணம் இணைப்பும் ஏற்கெனவே சாத்தியமாகியிருக்கிறது'' என்கிறார் அவர்.

"ஒரு மனிதனின் வளமான வாழ்வுக்கு 1700 - 2000 கனமீட்டர் தண்ணீர் தேவை. 1000 கனமீட்டருக்கும் கிழே சென்றால் அங்கு பற்றாக்குறை என அர்த்தம்.

தமிழகத்தில் இப்பொழுது நிலத்தடி நீராதாரத்தையும் சேர்த்துப் பார்த்தாலும் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1000 கனமீட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஆற்றுநீர் தடைபட்டால் இது 600 கனமீட்டராகக் குறையும்.

ஆக, மிக மோசமான ஒரு அபாயக் கட்டத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். நாம் உடனே விழித்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் கோமதிநாயகம்.

பிரச்னை முற்றுவது வரைக்கும் காத்திருக்காமல் இப்பொழுதாவது சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக்கொள்வார்களா?.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive