ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்தியாவின் விஜேந்தர் குமாருக்கு பரிசு, வாழ்த்து குவிகிறது. சீன தலைநகர் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த குத்துச்சண்டை 75 கி.கி., "பிரீஸ்டைல்' பிரிவில் 22 வயதான விஜேந்தர், கியூபாவின் எமிலியோ கோரியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆனாலும் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பரிசுகளும் குவிகின்றன.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் தனது பாராட்டு செய்தியில்,""விஜேந்தர் தோல்வியடைந்தாலும் அவரது திறமையான ஆட்டம் பாராட்டுக்குரியது. டில்லியில் அவரை நேரில் சந்திக்க ஆர்வத்துடன் இருக்கிறேன்,'' என்றார்.
இளைஞர் எழுச்சி: சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தனது வாழ்த்து செய்தியில்,""விஜேந்தர் மற்றும் சுஷில் குமாரின் அபார திறமை, இந்திய இளைஞர்களிடையே விளையாட்டு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய கிராமப்புறங்களில் ஒளிந்திருக்கும் விளையாட்டு திறமைகள் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்,'' என்றார்.
உலகமே பார்க்கிறது: விஜேந்தர் வெண்கலம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய ஒலிம்பிக் குத்துச்சண்டை பயிற்சியாளர் குர்பக்ஸ் சிங் சாந்து கூறுகையில், ""ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தடைகளை உடைத்து இந்திய குத்துச்சண்டை முன்னேற்றம் கண்டுள்ளது. முதன் முறையாக பதக்கம் வென்றது மட்டுமில்லாமல் மூன்று இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியதை ஒரு சாதனையாக கருதுகிறேன். எங்களால் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்துள் ளோம். குத்துச்சண்டை உலகம் தற்போது இந்தியாவை கவனிக்க துவங்கியுள்ளது,'' என்றார்.
இலவச விமானப்பயணம்: ஒலிம்பிக் பதக்கம் வென்றதை அடுத்து விஜேந்தருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச விமான சேவை வழங்க, தனியார் ஜெட் சர்வீஸ் ஒன்று முன்வந்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""பிந்த்ரா, சுஷில் குமார் ஆகியோரை தொடர்ந்து விஜேந்தருக்கு இலவச விமான சேவை வழங்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
டி.எஸ்.பி., பதவி: ஒலிம்பிக்கில் இம்முறை சாதித்த அரியானா வீரர்களான விஜேந்தர் குமார், ஜிதேந்தர் குமார், அகில் குமார், யோகேஷ்வர் தத் ஆகிய நால்வருக்கும் டி.எஸ்.பி., பதவி வழங்கப் படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குத்துச்சண்டை போட்டியில் அகில் குமார், ஜிதேந்தர் குமார் காலிறுதி வரை முன்னேறினர். அரையிறுதியில் தோல்வி அடைந்த விஜேந்தர் குமார் வெண்கலம் வென்று ஆறுதல் தேடினார். இதே போல மல்யுத்த போட்டியின் காலிறுதிக்கு யோகேஷ்வர் தத் தகுதி பெற்றார். இவர் களை கவுரவிக்கும் வகையில் டி.எஸ்.பி., பதவி வழங்குவதாக முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா தெரிவித்தார். தவிர விஜேந்தருக்கு ரூ. 50 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.
அடுத்து தங்கம்: பீஜிங் ஒலிம்பிக் குத்துச்சண்டை யில் வெண்கலம் வென்ற விஜேந்தர் 2012, லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று காட்டுவதாக சவால் விடுத் துள்ளார். இவர் கூறுகையில், ""அரையிறுதியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. என்னால் வெற்றி பெற முடியாததற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன். இம்முடிவில் மிக உறுதியாக இருக்கிறேன்,'' என்றார்.
வெண்கல விஜேந்தருக்கு வாழ்த்து!
Posted by
தமிழ்க்குமரன்
Friday, August 22, 2008

0 comments:
Post a Comment