""காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தே.மு.தி.க.,வும் வரலாம்,'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அழைப்பு விடுத்தார்.சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வ.உ.சி.,யின் வாரிசுகள் நான்கு பேர் நிரந்தரமாக தங்கியிருக்க வீடும், மாதந்தோறும் தேவையான அனைத்து உதவிகளும் காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் யாராவது வாழ வழித் தெரியாமல் இருந்தால், அவர்கள் அனைவருக்கும் உரிய உதவி வழங்கப்படும்.
"மூழ்கும் கப்பல் காங்கிரஸ்' என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் ஒரு பிரமாண்டமான கப்பல்; மூழ்காத கப்பல்; கப்பலில் இருந்து விழுந்தவர்களைக் காப்பாற்றும் கப்பல். பாதுகாப்பாகப் பயணம் செய்து வந்த இடதுசாரி தலைவர்கள், திடீரென்று கடலில் குதித்துவிட்டனர். இப்போது அவர்கள் தான் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர். "தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் ஓர் அணியில் இருக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். "பா.ம.க., இந்தக் கூட்டணியில் இருந்திருந்தால் பலம் அதிகரிக்கும்' என்று அவரே தெரிவித்துள்ளார். காலப்போக்கில் எல்லாம் நல்லதாக நடக்கும். தே.மு.தி.க., உட்பட எந்தக் கட்சியானாலும், காங்கிரஸ் தலைமையை ஏற்றால், அவர்களை எங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். காங்கிரஸ் எம்.எல். ஏ.,க்களின், ஆட்சியில் பங்கு விருப்பத்தை சோனியாவிடம் தெரிவித்துவிட்டோம். இவ்வாறு தங்கபாலு கூறினார்.
தே.மு.தி.க.,வுக்கு காங். அழைப்பு
Posted by
தமிழ்க்குமரன்
Monday, August 25, 2008

0 comments:
Post a Comment