இதயநோயால் அவதிப்பட்டு வந்த, தென்கச்சி கோ.சுவாமிநாதன், நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.அரியலூர் மாவட்டம், தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோ.சுவாமிநாதன். சென்னை, மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
கடந்த 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை, திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில், வேளாண் துறை இயக்குனராகப் பணியாற்றி, "வீடும் வயலும்' நிகழ்ச்சி வழங்கினார். பிறகு, உதவி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், "இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியில், மூன்று நிமிட நகைச்சுவை, சிந்தனைக் கதைகளைக் கூறி, பிரபலமானார்; கருத்துப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். ஏராளமான குழந்தைகள் நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். "இலக்கணம்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இதயநோயால் அவதிப்பட்ட சுவாமிநாதன், போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில், கடந்த 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12.40 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 68.சுவாமிநாதனுக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்செல்வி, மருமகன் தமிழரசன், பேரன் நவீன் உள்ளனர்.தென்கச்சி சுவாமிநாதனின் உடல், அவரது பூர்வீகமான தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனூர் கிராமத்திற்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.
தென்கச்சி கோ.சுவாமிநாதன் காலமானார்
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, September 16, 2009

0 comments:
Post a Comment