சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்களுக்கும் - போலீசாருக்கும் இடையே நடந்த மோதலுக்கு இரு தரப்பினருமே காரணம் என, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர் என்றும் கண்டித்துள்ளது.அதேநேரத்தில், சென்னை ஐகோர்ட்டில் நடந்த மோதல் தொடர்பான விசாரணையை தான் மேலும் தொடர விரும்பவில்லை என்றும் விடுவித்துக் கொள்வதாகவும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.மோதல் தொடர்பாக நேற்று முன்தினம் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா சமர்ப்பித்த அறிக்கையில், "எதை வேண்டுமானாலும் ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் செய்யலாம், அதற்குப்பின் அதில் சம்பந்தமின்றி இருக்கலாம் என்ற தவறான கருத்து எழ இச்சம்பவம் உதவியிருக்கிறது. மேலும், அவர்கள் எந்தச் சட்டத்திற்கும் பதில் கூறத் தேவையில்லாதவர்கள் என்ற கருத்தும் எழுந்திருக்கிறது.
கமிஷன் அளித்த அறிக்கையின்படி முடிவு : "போலீசாரோ தரைத்தளம், முதல்மாடி ஆகியவற்றிலும் விரட்டிவிரட்டிச் சென்று சம்பவத்தன்று ஈவுஇரக்கமின்றி வக்கீல்களைத் தாக்கியுள்ளனர். அதிலும் திருப்திப் படாமல் வக்கீல்களின் சேம்பர்களுக்குள்ளும் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தி, வக்கீல்களை அடித்துள்ளனர். அவர்கள் ஒட்டுமொத்தமாகத் தறிகெட்டு, வேண்டுமென்றே பலப்பிரயோகம் செய்திருக்கின்றனர்' என்று குறிப்பிட்டு, தன் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.இந்நிலையில், வக்கீல்கள் - போலீசார் மோதல் தொடர்பாக, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வக்கீல் வைகையும் மற்றும் சிலரும் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கிருஷ்ணாவின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.அதைப் பரிசீலித்த நீதிபதிகள், "ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அளித்த அறிக்கையின்படி, சென்னை ஐகோர்ட்டும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கலாம்' என, உத்தரவிட்டனர். அந்த அறிக்கையை சென்னை ஐகோர்ட்டிற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டனர்.
விசாரணைக் கமிஷன் சட்டப்படி, புதிதாக நீதி விசாரணைக் கமிஷன் அமைப்பது தொடர்பாக மாநில அரசுடன் கலந்தாலோசித்து சென்னை ஐகோர்ட் முடிவு செய்து கொள்ளலாம்.இந்தப் பிரச்னையை ஏற்கனவே ஐகோர்ட் கையாண்டு வருவதால், ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையின்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம். சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்துவது உட்பட எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆஜரான வக்கீல் வைகை, "சென்னை போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி கிருஷ்ணா கமிஷன் நற்சான்று வழங்கியுள்ளது.
தடியடிக்கு உத்தரவிட்ட போலீஸ் யார் ? : கமிஷனர் ராதாகிருஷ்ணன், 4.30 மணிக்கு முன்னதாகவே இருந்ததாக, போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர் 5.14க்குத்தான் வந்ததாக கிருஷ்ணா கூறியுள்ளார். தடியடிக்கு உத்தரவிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயரை வெளியிட மாநில அரசு மறுக்கிறது. கிருஷ்ணா கமிஷன் அறிக்கையிலும் அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை' என்றார்.
தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், "தடியடிக்குக் காரணமான போலீஸ் கமிஷனர் மற்றும் இதர போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை சென்னை ஐகோர்ட்டில் சுமுகநிலை திரும்பாது. மீண்டும் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கத் தேவையில்லை' என்றார்.சொலிசிட்டர் ஜெனரல் வாகன்வதி, மூத்த வக்கீல் அசோக் தேசாய் ஆகியோர் தமிழக அரசு சார்பிலும், ஐகோர்ட் சார்பில் வேணுகோபாலும் ஆஜராயினர்.
அறிக்கை முக்கிய அம்சங்கள்
*விடுதலைப் புலி ஆதரவு வக்கீல்கள், தொடர்ந்து புலிகளுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் ஐகோர்ட் வளாகத்தில் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
*தினம் ஏதாவது ஓர் அசம்பாவிதம் ஐகோர்ட்டில் நடந்து வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பல வக்கீல்கள் மீது 110 கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
*புலி ஆதரவு வக்கீல்களிடம் இருந்து, தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென்று சில வக்கீல்கள், முதல்வருக்கு மனு அளித்துள்ளனர்.
*பிப்ரவரி 17ம் தேதி, சுப்ரமணியசாமி மீது, கோர்ட் ஹாலுக்குள் வக்கீல்கள் அழுகிய முட்டைகளை வீசியுள்ளனர்.
*இவ்வழக்கில் வக்கீல்கள் ஒப்புக்கொண்டபடி 19ம் தேதி சரண்டர் ஆக மறுத்துவிட்டனர். போலீஸ் அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது; சிலர் போலீஸ் மீது கற்களை வீசியுள்ளனர்.
*எந்த அதிகாரி லத்திசார்ஜ் செய்ய உத்தரவிட்டார் என்பது வீடியோக்கள் மூலம் தெளிவாகத் தெரியவில்லை.
*போலீஸ் ஸ்டேஷனுக்குள் வக்கீல்கள் நுழைந்து, சேர், கம்யூட்டர் மற்றும் இதர பொருட்களை வெளியே இழுத்துப் போட்டு தீ வைத்துள்ளனர்.
*இதையடுத்து, போலீசார் கோர்ட்டுக்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்; தடியடியின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போலீசார் கடைபிடிக்கவில்லை.
*வக்கீல்களால் தான் இந்த வன்முறை ஆரம்பமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
*சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் மென்மையான அணுகுமுறையே, இவ்வளவு பெரிய சூழ்நிலை ஏற்படக் காரணம்.
*போலீஸ் கமிஷனர் மீது எந்தக் குற்றமும் சுமத்த முடியாது.
*ஒரு மாதமாக நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது, அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டதைக் குறைகூற முடியாது.
*வக்கீல்களின் நடத்தைகளுக்கு சில வழிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வகுக்க வேண்டும்.

0 comments:
Post a Comment