உலகில் என்னை மாதிரி தண்ணியடிக்காத தறுதலைகளுக்கெல்லாம் கஷ்டமான காரியங்களில் ஒன்று தண்ணிப் பார்டிக்குப் போவது. இதில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லையென்றால் இன்னும் விசேஷம். தீர்த்தம் சாப்பிடும் மஹானுபாவர்களின் குஷியை இந்த மாதிரி பார்ட்டிக்குப் போகும் போது பார்க்கவேண்டுமே. சும்மா தேமேன்னு இருந்தாலும் விடமாட்டார்கள். "சும்மா வாடா, அங்க அவனவன் வாயில ஃபனல வச்சு ஊத்திக்கிறத பாரு கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்" என்று சும்மா இருக்க விடமாட்டான். முதலில் ரெண்டு மூனு தரம் இப்படி ஏமாந்து போயிருக்கிறேன். வாயில் ஃபனலை வைத்து கொண்டு ஊத்திக் கொள்வதெல்லாம் உண்மை தான். ஆனால் அன்ட்ராயர் அவிழ்ந்தது கூடத் தெரியாமல் ஊத்திக் கொள்ளுவதெல்லாம் எனக்கு என்னமோ கண்கொள்ளாக் காட்சியாகப் படவில்லை. ஒழுங்காய் பேசிக் கொண்டிருப்பவர்களெல்லாம் ரெண்டு ரவுண்டு உள்ளே போனவுடன் கார்ல் மார்க்ஸாகி விடுவார்கள். வாழ்க்கை என்றால் என்ன, இன்பம் என்றால் என்ன துன்பம் என்றால் என்ன என்று தத்துவங்கள் எடுத்து விடுவார்கள் பாருங்கள்...காதில் ரத்தம் வந்துவிடும். சிலர் வள்ளலார் மாதிரி கருணைக் கடலாகி விடுவார்கள். உலகில் ஏழைகளே இருக்கக் கூடாதுடா என்று ஆரம்பித்து கருணை உணர்ச்சி பொங்கும். ஒரு நண்பன் தண்ணியடித்துவிட்டு சிக்கனை மென்று கொண்டே எறும்புகள் வாழ்கையில் எப்பிடி கஷ்டப்படுகின்றன, மழை பெய்தால் எவ்வளவு கஷ்டம் அதற்கு உடம்பு சரியில்லாமல் போனாலும் யார் உதவுவார்கள் என்றெல்லாம் ஃபீல் பண்ணி குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறான். நமக்கு சிரிப்பு வந்தாலும் சிரிக்க முடியாது. மற்ற தண்ணியடித்த தொண்டரடிப் பொடியாழ்வார்கள் கோவித்துக் கொண்டுவிடுவார்கள். அதற்கப்புறம் அடுத்த நாள் இதைப் பற்றி சொல்லிச் சொல்லி நான் ஓட்டின ஓட்டில் அவன் ஓடியே போய்விட்டான்.
கூட்டமாய் போனாலும் பரவாயில்லை. தண்ணியடிக்கும் நண்பனுக்கு கம்பெனி குடுக்க தனியாய் போய் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான். அதிலும் லவுஸ் விடும் நண்பனாய் இருந்தால் கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. விட்டத்தைப் பார்த்துக் கொண்டு சிகிரெட் புகையை ஊதிக்கொண்டு "அன்னிக்கு அவ என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு" என்று ஃபீலிங் காட்டுவார்கள் பாருங்கள், சினிமாவில் ஒரு தாடி வைத்த தாத்தா கம்பளி போர்வையை போர்ர்திக் கொண்டு பின்னால் புகை வர கைய்யில் ஒரு வட்டமான கொட்டைத் தட்டிக் கொண்டு ஒருத்தருமே இல்லாத ஊரில் தெருத் தெருவாக ஒரு நாயைக் கூட்டிக் கொண்டு போய் யாருக்காகவோ பாடுவாரே அதெல்லாம் தோத்துவிடும். பீலிங் படலத்திற்கு பிறகு வாயிலெடுத்து வழித்துக் கொட்டும் வைபவமும் இருக்கும். என்னைப் பொறுத்த வரை தண்ணியடிப்பவர்களுக்கு கோபம், தாபம், பாசம்,சுயமரியாதை, உலக அக்கறை என்று எல்லா உணர்ச்சிகளுமே மேலோங்கி இருக்கும். சொந்தக்கார வட்டத்தில் இரண்டு பேர் தண்ணியடித்து விட்டு ராத்திரி டி.வி.யெஸ் 50ல் வந்துகொண்டிருக்க, ஒரு (உண்மையான) கழுதை குறுக்கே ஓடி வந்து வண்டியிலிருந்து விழுந்துவிட்டார்கள். ஒரு நண்பனுக்கு கொஞ்சம் அடிபட்டு முட்டியில் ரத்தம் வந்து விட்டது. அதைப் பார்த்த இன்னொரு நண்பனுக்கு கோபம் தலைக்கேறி பழிவாங்கும் உணர்ச்சி மேலோங்க கழுதையை அடிக்க ரோடு முழுக்க துரத்திய கதை இன்னமும் குடும்பத்தில் பிரசித்தம். " அது எதுக்குடா கழுதைய அந்த துரத்து துரத்தின" என்று ஒவ்வொரு தரமும் என் வீட்டுக்காரி என்முன்னால் அவர் மானத்தை வாங்குவார்.சில கேஸ்கள் நேர் உல்டா. ரெண்டு ரவுண்டுக்கு அப்புறம் வாயே திறக்க மாட்டார்கள். கடப்பாறையை போட்டு நிமிண்டினால் தான் ஒரு வார்த்தை சாஸ்திரத்துக்குப் பேசுவார்கள்.
ஒருதரம் சென்னையில் ராம்கோவில் சிஸ்டம்ஸில் இருந்த போது நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தைக் காரணம் காட்டி அவருக்கு மொட்டை போட நண்பர் குழாம் முடிவு செய்தது. வழக்கமாக அடையாறில் வெட்டுகிற இடங்களை எல்லாம் விட்டு விட்டு தரமணி டாக்கீஸ் என்று தண்ணியடிக்கும் தர்மவான்கள் முடிவு செய்தார்கள். அங்கே தண்ணியும் உண்டு நல்ல சப்பாடும் உண்டு என்று சதிவலை பின்னப்பட்டதில், நானும் இன்னொரு அப்பாவியும், சாப்பாடு கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு போனோம். தியேட்டர் மாதிரி திரையெல்லாம் வைத்து நல்ல ஜோராகத் தான் இருந்தது. "என்ன வேண்டும்" என்று கேட்டு பேரர் விருந்தோம்பாமல் பாருக்குப் போனால் தான் சைட் டிஷ் இலவசம் இங்கே தீர்த்தம் சப்பிட்டால் சைட் டிஷ்க்கும் படியளக்கவேண்டும் என்று சொல்ல, கும்பல் பாருக்கு குடிபெயர்ந்தது. ஜூஸெல்லாம் குடித்தால் சாப்பிட சாப்பாடு அளவு குறைந்துவிடும் என்று நான் ஜூஸை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏழு மணிக்கு ஆரம்பித்த பார்ட்டி, பத்து மணி வரை தண்ணியிலேயே மிதந்து கொண்டிருந்தது. நானும் அந்த அப்பாவியும் வந்து கொண்டிருந்த சுண்டலை மட்டும் நொசுக்கிக் கொண்டிருந்தோம். திடிரென்று பத்து மணிக்கு பார்ட்டி கொடுப்பவர் "தம்பிகளா...இந்தப் பார்டிக்கு என்னோட பட்ஜெட் இவ்வளவு தான் " என்று கையை விரித்து விட்டார்.முன்னாடியே சொல்லியிருந்தால் வந்த சுண்டலையாவது கூடக் கொஞ்சம் நொசுக்கி இருப்பேன் என்று எனக்கு ஒரே வருத்தம். பார்ட்டிக்குப் போய் வெற்று வயிற்றுடன் வந்ததற்கப்புறம் இந்தியாவில் இனி தண்ணிப் பார்டிக்கே போகக் கூடாதென்று முடிவு செய்திருந்தேன்.
இங்கே வெள்ளைக்கார தண்ணிப் பார்ட்டியில் இம்சை வேறு மாதிரி. எதிராளி கைய்யில் க்ளாஸ் வைத்திக்கொண்டிருக்கும் போது நாம் வைத்துக் கொள்ளாவிட்டால் மரியாதை குறைச்சல். இதற்காக ஆரஞ்சு ஜூஸாவது வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் துரை ஒரு க்ளாஸ் பியரையோ, காக்டெயிலையோ ஒருமணி நேரமாய் வைத்துக் கொண்டிருப்பார். நானெல்லாம் ஊரில் ஆரஞ்சு ஜூஸ் குடுத்தால் 2 H.P மோட்டார் போட்டு உறிகிற மாதிரி ஒரே உறிஞ்சாக உறிஞ்சி காலியாக்கி விட்டுத்தான் க்ளாஸை கீழே வைப்பேன். மருந்து குடிக்கிற மாதிரி சின்னச் சின்ன சீப்பியாக குடிப்பதற்கு ரொம்பவே முதலில் கஷ்டப் பட்டேன். இப்பொழுது கொஞ்சம் பழகிவிட்டது. இதோடு இன்னொரு கஷ்டம் வேறு இங்கே உண்டு. வந்த புதிதில் துரைமார் பேசுவது வழவழ கொழகொழவென்று ஏற்கனவே ஒரு இழவும் புரியாது, இதில் தண்ணியடித்து விட்டுப் பேசச் சொன்னால் சுத்தம். அத்தோடு இங்கே இருக்கிற பப்புகளில் மாரியம்மன் கோவில் கொடை விழா மாதிரி பாட்டை வேறு அலறவிட்டு விடுவார்கள். குத்து மதிப்பாக "யா யா", "அப்கோர்ஸ்", "கிரேட்", "ஈஸிட்?" "ஓ ரியலி" என்று வரிசைகிரமம் வைத்து சிரித்துக் கொண்டே சொல்லிவிடுவேன். இந்த லட்சணத்தில் துரை நான் பேசுவது புரியவில்லை என்பார். எல்லாம் நேரக் கொடுமைடா...என்று நினைத்துக் கொண்டு "சந்தைக்குப் போனும் ஆத்தா வையும்" என்று கம்பி நீட்டிவிடுவேன்.
இந்த மாதிரி கொடுமைக்காவது தண்ணியடிக்க கத்துக்கனும் என்று ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். புது வருஷ கொள்கைகள் மாதிரி அதற்கும் இன்னும் வேளை வரவில்லை.
தண்ணி பார்ட்டி !!
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, October 16, 2008

0 comments:
Post a Comment